Showing posts with label Lent 3rd Sunday. Show all posts
Showing posts with label Lent 3rd Sunday. Show all posts

Saturday, March 7, 2026

மணமகனும், இறைமகனும் நீரே! சமாரியப்பெண்ணின் தேடல்!

தவக்காலம் மூன்றாம் ஞாயிறு
விப 17:3-7. உரோ 5:1-2,5-8. யோவா 4:5-42

உணவு இல்லாமல் நீர் குடித்துக்கொண்டு ஒரு மனிதன் பொதுவாக 3 முதல் 8 வாரங்கள் வரை உயிர்வாழ முடியும். ஆனால் நீர் இல்லாமல் ஒரு மனிதனால் 3 அல்லது 4 நாட்கள் மட்டுமே உயிர்வாழ முடியும். காரணம், நம் உடலில் 60% க்கும் மேல் நீர் உள்ளது. நீர் குறைந்தால் உடல் உறுப்புகள் செயலிழக்கத் தொடங்கும்.

தவக்காலத்தின் முதல் வாரங்களில் நாம் மூன்று பின்புலங்களைப் பார்க்கிறோம்: பாலைவனம், மலை, கிணறு. இன்றைய நற்செய்தி நம்மை கிணற்றருகே கொண்டு செல்கிறது.

பயணக் களைப்பால் இயேசு கிணற்றருகே அமர்ந்திருக்கிறார். அப்போது ஒரு சமாரியப் பெண் தண்ணீர் எடுக்க வருகிறாள். இயேசு அவளிடம் ஒரு எளிய வேண்டுகோளை முன்வைக்கிறார்: “குடிக்க எனக்கு தண்ணீர் கொடு.”


விவிலியத்தில் கிணறு என்பது வெறும் தண்ணீர் எடுக்கும் இடமல்ல. அது கடவுளும் மனிதனும் சந்திக்கும் இடமாகும். பழைய ஏற்பாட்டில் கிணறு, ஒரு ஆண் ஒரு பெண்ணை சந்திக்கும் டேட்டிங் Dating இடமாக கருதப்பட்டது. பல முக்கியமான Love proposal சந்திப்புகள் கிணற்றருகில்தான் நிகழ்கின்றன. இது கிணற்றை “இறைவனின் திட்டம் வெளிப்படும் இடம்” நிச்சயதார்த்தத்திற்கு முன்னதான ஒரு சந்திப்பு இடமாக காட்டுகிறது. ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான உரையாடல் தொடங்கும் இடம். ஆண் அவளை அணுகி அவளுக்கு தண்ணீர் கொண்டு வர முடியுமா என்று கேட்கிறான். அந்தப் பெண் ஏற்றுக்கொண்டு தண்ணீர் கொடுத்தால், அவனை ஏற்றுக்கொள்கிறாள், அவள் அவனை தன் தந்தையின் மதிய உணவிற்கு அழைக்க வேண்டும். அழைக்கப்பட்ட இந்த மனிதனுக்கு உணவளிக்கப்படுகிறது. அவளை நிச்சயம் செய்கிறார் என்று பொருள். 

  • ஈசாக்கிற்கான மணமகளாக ரெபெக்காவை கிணற்றருகில் சந்திக்கிறார் (Gen 24: 10-61 ).
  • யாக்கோபு ராகேலை கிணற்றருகில் சந்திக்கிறார் (Gen 29:1-10). 
  • மோயீசன் செபோரவை கிணற்றடியில் சந்திக்கிறார் (Ex 2:15-21)
  • இன்று இயேசு சமாரியப் பெண்ணை கிணற்றருகில் சந்திக்கிறார். 

இந்தச் சந்திப்பில் இயேசு இரண்டு பெரிய மரபுகளை மீறுகிறார். முதலாவது: யூதர்கள் சமாரியர்களுடன் தொடர்பு கொள்ள மாட்டார்கள். இரண்டாவது: யூத ரபிகள் பொதுவிடங்களில் பெண்களுடன் பேச மாட்டார்கள். ஆனால் இயேசு அந்த எல்லைகளையும் தாண்டி பேசுகிறார்.

 அந்தப் பெண் நண்பகலில் தண்ணீர் எடுக்க வருகிறாள். பொதுவாக பெண்கள் காலை அல்லது மாலை நேரங்களில் தண்ணீர் எடுக்க வருவார்கள். நண்பகலில் வருவது, அவள் மற்றவர்களைத் தவிர்க்க விரும்பியதைக் காட்டுகிறது. அவளது வாழ்க்கையில் காயங்கள் இருந்தன. தனிமை இருந்தது.

ஆனால் இயேசு அவளை குற்றம் சாட்டவில்லை. அவளைத் தேடி வந்தார்.

விவிலியத்தில் “ஏழு” என்ற எண் நிறைவை / முழுமையை குறிக்கிறது.

  • இறைவன் உலகத்தை ஆறு நாட்களில் படைத்தார்; ஏழாவது நாளில் ஓய்வு கொண்டார்.
  • பரிசுத்த ஆவியின் ஏழு வரங்கள் உள்ளன.
  • திருச்சபையின் ஏழு திருவருட்சாதனங்கள் உள்ளன.

அந்தப் பெண்ணின் வாழ்க்கையிலும் ஒரு எண்ணிக்கை வருகிறது. அவளுக்கு ஐந்து கணவர்கள் இருந்தனர். இப்போது ஒருவன் இருக்கிறான். மொத்தம் ஆறு. ஏழாவது உண்மையான மணமகன் யார்?

அவர் இயேசு.

‘உனக்கு ஐந்து கணவர்கள் உண்டு’ என இயேசு சொல்வதை ‘உனக்கு ஐந்து கடவுளர்கள் உண்டு’ எனவும் மொழிபெயர்க்கலாம் (பாகால் என்றால் கடவுள் என்றும் பொருள்). பல கடவுள்களை வணங்குவது (விவிலியத்தின்படி) ஆன்மீக விபச்சாரத்தைக் குறிக்கிறது. இஸ்ரேல் யெகோவாவை கைவிட்டு மற்ற கடவுள்களுக்குப் பின்னால் சென்றது ஆன்மிகவிபச்சாரம் என்று அழைக்கப்பட்டது. இப்போது சமாரிய வழிபாட்டின் வரலாற்றைத் திரும்பிப் பார்ப்போம். சமாரியா பாகாலின் வழிபாட்டின் மையமாக இருந்தது. கடந்த கால வரலாற்றில், ஐந்து வெவ்வேறு நாட்டுமக்கள் வெவ்வேறு காலங்களில் சமாரியாவை அடைந்தனர். சமாரியாவில் ஐந்து கோவில்களை கட்டினர். 2 அரசர்கள் 17:30-34 இல் நாம் படிக்கும்படி அசீரியர்கள் சமாரியாவிற்கு கொண்டு வந்த ஐந்து கடவுள்களை உருவகமாக மணந்தனர்.

இயேசு கூறுகிறார்; மொத்தம் ஐந்து கடவுளர்களை வழிபட்டாய்! இப்போதும் ஒரு தெய்வத்தை வணங்கிக் கொண்டிருக்கிறாய். ஆனால் ஏழாவது ஒரு தெய்வம் ஆண்டவரே! இறைமகன். ‘இந்த மலையிலும் அல்ல. அந்த மலையிலும் அல்ல. இயேசு அவளிடம் கூறுகிறார்:

“உண்மையிலும் ஆவியிலும் கடவுளை வணங்குவோர் அவரை வணங்குவார்கள்.”

அந்தச் சந்திப்பு அவளது வாழ்க்கையை மாற்றுகிறது. அவள் தண்ணீர் குடத்தை அப்படியே விட்டுவிட்டு ஊருக்குள் ஓடுகிறாள். தன்னை மறைத்துக் கொண்டிருந்த மக்களிடமே இப்போது சென்று கூறுகிறாள்: “நான் செய்த அனைத்தையும் சொல்லிய ஒருவரை நான் கண்டேன்.” அவளது சாட்சியத்தைக் கேட்ட மக்கள் இயேசுவிடம் வருகின்றனர். அவர்கள் கூறுகிறார்கள்: “இப்போது உன் சொல்வதற்காக மட்டும் நாங்கள் நம்பவில்லை. நாங்களே கேட்டோம். அவர் உண்மையில் உலகின் மீட்பர்.”

நம் நம்பிக்கை வாழ்வும் இப்படித்தான் இருக்க வேண்டும். மற்றவர்கள் சொல்வதன் மூலம் நாம் இயேசுவைப் பற்றி அறியலாம். ஆனால் ஒருநாள் நாம் அவரை தனிப்பட்ட கிணற்றுஅனுபவத்தில் சந்திக்க வேண்டும்.

  • “எனக்கு தாகமாய் இருக்கிறது” என்று இயேசு சிலுவையிலும் சொல்கிறார்.
  • இன்று நாமும் தாகமாய் இருக்கிறோம்—உள்ளத்தின் தாகம்.

சில நேரங்களில் இந்த உலகத்துக் கானல் நீர் தாகத்தைத் தணிக்காது. உண்மையான வாழ்வின் நீர் ஒரே ஒருவர்—இயேசு.

  • தண்ணீர் எடுக்கச் சென்ற அந்தப் பெண் வாழ்வின் ஊற்றைக் கண்டாள்.
  • அவள் காலிக்குடத்துடன் வந்தாள்; நிரம்பிய உள்ளத்துடன் திரும்பினாள்.
  • மணவாளன், ‘இறைவாக்கினர்,’ ‘கிறிஸ்து,’ ‘மீட்பர்’ என அடுத்தடுத்த அடையாளத்தைப் பெறுகின்றார் இயேசு.

இன்றைய நாளில் நாம் பெண்கள் தினத்தையும் நினைவுகூருகிறோம். அந்த சமாரியப் பெண்ணைப் போல நாமும் வாழ்வின் ஊற்றை கண்டடைய வேண்டுமாக.

HAPPY WOMEN'S DAY!

Popular Posts