Saturday, May 2, 2026

பாஸ்கா காலம் ஐந்தாம் ஞாயிறு

3 மே 2026

திப 6:1-7. 1 பேது 2:4-9. யோவா 14:1-12.

இன்றைய உலகம் வேகத்தின் உலகம்.
எதுவும் உடனே கிடைக்க வேண்டும் என்பதே நம் மனநிலை.

Indian Premier League: முன்பெல்லாம் கிரிக்கெட்டில் 5 நாள் டெஸ்ட் போட்டிகள் நடந்தன. பொறுமையுடன் விளையாடி, முடிவை காத்திருக்க வேண்டும். பிறகு 50 ஓவர் போட்டி வந்தது. இப்போது 20 ஓவர் போட்டி — ஐபிஎல். சில மணி நேரத்தில் முடிவு தெரிந்துவிட வேண்டும். காத்திருக்க யாருக்கும் நேரமில்லை.

அதேபோல், வீட்டிலும் மாற்றம். முன்பு அம்மாக்கள் நாட்களாக உழைத்து மசாலா, மாவு, வடகம் எல்லாம் தயாரிப்பார்கள். இன்று எல்லாம் ரெடிமேட்.
ஒரு ஸ்விக்கி ஆர்டர் கிளிக்கில் உணவு வீட்டுக்கு வருகிறது. 

இது ஒரு உண்மை: நாம் பொறுமையை இழந்து வருகிறோம். காத்திருப்பது யாருக்கும் பிடிப்பதில்லை. வெற்றி, தோல்வியை அவசரமாக அனுபவிக்க எத்தனிக்கிறோம். இதே மனநிலையை நற்செய்தியிலும் பார்க்கிறோம். 

  1. தோமாவின் கேள்வி: “ஆண்டவரே, நீர் எங்கே போகிறீர்?”
  2. பிலிப்பு சொல்கிறார்: “தந்தையை எங்களுக்குக் காட்டும்.”

இவர்கள் கேள்விகள் பொறுமையின்மையையும், அவசரத்தையும் காட்டுகிறது. “எங்களுக்கு உடனே புரிய வேண்டும்… எளிதாகக் காட்டுங்கள்…” என்ற மனநிலை. இதை ஆன்மிக அவசரம் என்று சொல்லலாம்.

ஆனால் இயேசு விரும்புவது? இறையனுபவம் என்பது ஒரு “இன்ஸ்டன்ட் அனுபவம்” அல்ல. அது ஒரு நீண்ட பயணம். அவரோடு இருந்து, பயணித்து அனுபவிப்பது. இறைவனை அறிதல் என்பது: நீடித்த நிலையான அனுபவம். பேருந்தில் ஏறி இன்னொரு பக்கம் இறங்கிவிடும் குறுகிய அனுபவம் அல்ல. 


நம் இறைவேண்டலும் இறையனுபவமும் அவசரம் கலந்ததாக இருக்கிறது. 

என்னுடைய ஆன்மிகத்தந்தை Domenico Sagginario, , san Giovanni Rotondo நகரத்தைச் சார்ந்தவர், புனித பியோ அவர்களின் பீடச் சிறுவராக இருந்தவர். ஒவ்வொரு திருப்பலியின் போதும்  ஐந்து காயங்கள் Stigmata, எட்டிப்பார்ப்பாராம். அப்போது தந்தை பியோ அவருக்கு கூறியது, "Do not be curious to know everything, you will know slowly by experieces". 

வாழ்க்கை எப்போதுமே ஸ்வீட்டாக, ரொமாண்டிக்காக இருப்பதில்லை. பொறுமையின்மையையும், அவசரத்தையும் கைவிட்டு, வாழ்க்கையின் பயணத்தில் "வழியும் உண்மையும் வாழ்வுமான" என்றுஇயேசுவைஅனுபவிக்கவேண்டும். 

முதல் வாசகம் : தொ.கிறிஸ்தவர்கள் வாழ்வு, ‘அவர்கள் ஒரே உள்ளமும் ஒரே உயிருமாய் இருந்தனர். எல்லாம் அவர்களுக்குப் பொதுவாக இருந்தது’ என ரொம்ப ரொமான்டிக்காகவே வாசிக்கின்றோம். ஆனால், தொடக்கக் கிறிஸ்தவர்களின் தேனிலவு முடிந்தது என்பதை இன்றைய முதல் வாசகம் நமக்குச் சொல்கிறது. முதல் முதலாக குழுமத்தில் சண்டை, குழப்பம், பிரச்சினை ஆரம்பிக்கிறது: 

(அ) உணவு பிரச்சினை: (முதல் பிரச்சினை சாப்பாட்டில்தான்) உணவு பரிமாறப்படுவதில் பாரபட்சம். கிரேக்க மொழி பேசுவோர் தங்களுடைய கைம்பெண்கள் அன்றாடப் பந்தியில் முறையாகக் கவனிக்கப்படவில்லை’. 

(ஆ) மொழிப் பிரச்சினை: எபிரேய மொழி பேசுவோர் தங்களையே மேன்மையானவர்கள் என நினைத்து கிரேக்க மொழி பேசுவோரைத் தாழ்வாக நடத்துகின்றனர்.

(இ) முணுமுணுத்தல்: ஏன் முணுமுணுத்தல்? பிரச்சினையை சொல்வதற்கு எங்கெல்லாம் வடிகால் இல்லையோ அங்கெல்லாம் மக்கள் முணுமுணுப்பார்கள். 

கடவுளது வார்த்தையின்படி: இந்தப் பிரச்சினையைக் கேள்விப்படுகின்ற திருத்தூதர்கள் தீர்வுகாண முயல்கின்றார்கள்: ‘நாங்கள் கடவுளது வார்த்தையைக் கற்பிப்பதை விட்டுவிட்டு பந்தியில் பரிமாறும் பணியில் ஈடுபடுவது முறையல்ல!’ ஞானமிகு வார்த்தைகள் இவை. ‘நாங்களோ இறைவேண்டலிலும் இறைவார்த்தைப் பணியிலும் நிலைத்திருப்போம்’ என்றனர், உங்களின் பிரச்சினைகளின் தீர்வை விவிலியத்தில் தேடுங்கள். 

பிறர்மேல் கைகளை வைத்து இறைவேண்டல்: தங்கள் கைகளை தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்மேல் வைத்து இறைவனிடம் வேண்டுகின்றனர். அவ்வளவுதான். பிரச்சினை தீர்ந்தாயிற்று. எந்த ஒரு பேப்பர் ஒர்க்கும் இல்லாமல், எந்த ஒரு மீட்டிங்கும் இல்லாமல், எந்த ஒரு அவைக்குறிப்பும் இல்லாமல் இனிதே நடந்தேறுகிறது கூட்டம். தீர்வு கண்டாயிற்று. பெரியவர்கள் பிறர்மீது கைகள் வைத்து தூயஆவி செபத்தை செபிக்கப்பழகுங்கள். 

இந்த நிகழ்வு நமக்குச் சொல்லும் பாடம் என்ன? இந்த நிகழ்வு திருத்தூதர்கள் வாழ்விலும், தொடக்கத் திருஅவை வாழ்விலும் ஒரு சறுக்கலாக அல்லது, ஒரு சிறிய இறப்பாக இருந்திருக்க வேண்டும். இருந்தாலும் புத்துயிர் பெற்று எழுகிறார்கள். ஏனெனில் அவர்கள், இன்றைய இரண்டாம் வாசகம் (காண். 1 பேது 2:4-9), அவர்கள், ‘தேர்ந்தெடுக்கப்பட்ட வழிமரபினர், அரச குருக்களின் கூட்டத்தினர், தூய மக்களினத்தார், அவரது உரிமைச் சொத்தான மக்கள்.’

நம் வாழ்வில் நாம் சந்திக்கும் பிரச்சினைகள் நம்முடைய தற்காலிக இறப்புக்களே. இவற்றை நாம் எப்படி எதிர்கொள்வது? பொறுமையின்மையையும், அவசரத்தையும் கைவிட்டு, வாழ்க்கையின் பயணத்தில் "வழியும் உண்மையும் வாழ்வுமான" என்றுஇயேசுவைஅனுபவிக்கவேண்டும். நற்செய்தி வாசகத்தில், ‘வழியும் உண்மையும் வாழ்வும் நானே’ என அறிக்கையிடுகிறார் இயேசு. 

இது யோவான் நற்செய்தியில் இயேசு பயன்படுத்தும் ஆறாவது ‘நானே’ வாக்கியம். இந்த வாக்கியத்தில் மூன்று கூறுகள் உள்ளன: ‘வழி’ (கிரேக்கத்தில், ‘ஹோடோஸ்’), ‘உண்மை’ (கிரேக்கத்தில், ‘அலேத்தேயா’), ‘வாழ்வு’ (கிரேக்கத்தில், ‘ஸ்ஷோயே’).

  1. வழி என்றால் பாதை மட்டும் அல்ல, மாறாக, வாய்ப்பும் தீர்வும்கூட. நம் வாழ்வுபாதையை நெறிப்படுத்துகிறார் இயேசு.
  2. உண்மை என்றால் இருத்தல் மற்றும் அறிதல். நம் கடந்த, நிகழ், எதிர் காலங்களை....
  3. வாழ்வு என்றால் இயங்குதல் மற்றும் வளர்தல். நம் இயக்கத்தையும் வளர்ச்சியையும் நெறிப்படுத்துகிறார் இயேசு.

தொடக்கத் திருஅவை தன்னில் எழுந்த விருந்துப் பிரச்சினையால் இறந்து மீண்டும் உயிர் பெற்றது. பிரச்சினைகள் தீர்ந்ததால் ஆழமான அமைதி வந்தது. நம்முடைய பங்கில்/குடும்பத்தில் பிரச்சனைகள் தீர இயேசுவை வழியாக/உண்மை/வாழ்வாக பற்றிக்கொள்ளல் வேண்டும். 


Sunday, April 12, 2026

“இறை இரக்கத்தின் ஞாயிறு” (Divine Mercy Sunday)

திருத்தந்தை Pope John Paul II அவர்கள், இரண்டாயிரமாம் ஆண்டில் போலந்து நாட்டைச் சேர்ந்த புனிதர் Saint Faustina Kowalska அவர்களுக்கு புனிதர் பட்டம் வழங்கினார். அதே நாளில், பாஸ்கா காலத்தின் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமையை “இறை இரக்கத்தின் ஞாயிறு” (Divine Mercy Sunday) என்று திருச்சபை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

புனிதர் Saint Faustina Kowalska அவர்களுக்கு 1930 ஆம் ஆண்டில் இயேசுவின் திருஇருதயக் காட்சி அருளப்பட்டது. அந்தக் காட்சியின் மூலம், உலகமெங்கும் இறை இரக்கத்தின் செய்தி பரவ வேண்டுமென்று ஆண்டவர் அவரை அழைத்தார். 

உயிர்த்த இயேசு ஆண்டவருடைய திரு இதயத்தில் இருந்து வெண்மை மற்றும் சிவப்பு நிற கதிர்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. வெள்ளைக்கதிர் திருமுழுக்கையும்,  சிவப்பு  நற்கருணை திருவருட்சாதனத்தையும் குறிப்பிடுகிறது. இதனால் நாம் அறிந்து கொள்ள வேண்டியது: இயேசுவின் வேதனை நிறைந்த பாடுகளின் வழியாக நாமும் இந்த அகில உலகமும் மீட்கப்படுகின்றோம். இந்த நாளில் நாம் என்ன செய்ய வேண்டும்? ஒப்புரவு அருட்சதனம் பெற்றுக்கொண்டு, நற்கருணையை உண்டோமேயென்றால் நம்முடைய அனைத்து  நிந்தைகளுக்கும் பரிகாரம் கிட்டும். 

பெற்றோர்கள் சிறுவயதிலேயே பிள்ளைகளுக்கு கடவுளை "தண்டிக்கும் கடவுளாக" அறிமுகப்படுத்துகிறார்கள். தவறு செய்தால் கடவுள் கண்ணை குத்திவிடுவார். தீமைகள் செய்பவர்கள் நரகத்தில் எண்ணெய் கொப்பரையில் போலப்படுவர் என்று ஆயுதம் ஏந்திய கடவுளாக நாம் அறிமுகப்படுத்துகின்றோம். ஆனால் திருத்தந்தி பிரான்சிஸ் "கடவுளின் முகம் இரக்கம்" என்று அழைக்கிறார். 

கடவுளின் இரக்கம் எப்படி வெளிப்படுகிறது? என்பதை இன்றைய வாசகங்கள் தெளிவுபடுத்துகின்றன. குறிப்பாக நற்செய்தி, கடவுள் அவரது இதயத்தை நம் விரலால் தொடக்கூடிய அளவுக்கு நெருங்கி வருகிறார் என்று சொல்கிறது. பலவீனம் பலவீனங்கள் கொண்ட இந்த மானுட உலகை, கடவுள் நேசிக்கிறார், ஏற்றுக்கொள்கிறார். அவர்களை தம்முடைய இதயத்தைத் தொட, இதயத்தில் இருந்து அருளை பெற்றுக்கொள்ள அழைக்கிறார். 

இயேசு, குறைபாடுகள், பலவீனங்கள், அச்சம், கலக்கம், பயம் கொண்ட சீடர்கள் மேல், ஊதி, தூய அனுப்புகிறார், அவர் அவர்கள்மேல் ஊதி, “தூய ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள். எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவை மன்னிக்கப்படா” என்கிறார். சீடர்கள் ஒருவரை மற்றொருவர் மன்னிக்க அவர்களுக்கு அதிகாரம் கொடுக்கிறார். பாவ சங்கீர்த்தனம் என்னும் திருவருட்சாதனம் மீது நான் நம்பிக்கை வைக்க வேண்டும். திருத்தந்தையே பாவ அறிக்கை செய்கிறார்.  ஆகவே நாம் அனைவரும் பாவிகள். நம் உடல் மன நோய்கள் பாவக்கட்டுகள் அகல நாம் பாவ மன்னிப்பு அறிக்கை செய்ய வேண்டும். பிலிப்பைன்ஸ் நாட்டில் மரணப்படுக்கையில் இருப்பவர்களுக்காக நோயிற்பூசுதல் தந்த அனுபவம். ஆகவே ஆன்மீக தயாரிப்பு அவசியம். 

திரு அவையில் எவ்வளவுதான், கூட்டு அறிக்கை அல்லது கூட்டு ஜெபத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டாலும், தனிப்பட்ட விசுவாசம், இறை நம்பிக்கை மற்றும் தனிப்பட்ட ஜெபத்திற்கு எப்போதுமே வல்லமை உண்டு . இறைவன் அதை விரும்புகிறார். இயேசுவின் சீடரான தோமையார், "அவருடைய கைகளில் ஆணிகளால் ஏற்பட்ட தழும்பைப் பார்த்து, அதில் என் விரலை விட்டு, அவர் விலாவில் என் கையை இட்டாலன்றி நான் நம்பமாட்டேன்" 

தோமா இயேசுவின் இதயத்தை தொட்டு அவரை தனிப்பட்ட அனுபவத்தினால் அடைய எண்ணுகிறார். அனுபவம் பெறுகிறார்; "என் கடவுளே! என் ஆண்டவரே! என அறிக்கையிடுகிறார். இயேசுவின் ஐந்து காயங்களும் தழும்புகளும் எதை குறிக்கின்றன? தன் நண்பர்களுக்காக உயிரைக் கொடுத்த இயேசுவின் உண்மையான அன்பை குறிக்கின்றது. (யோவான் 15:13)

உடல் காயம் மற்றும் மன காயங்களால் துன்புறும் மனிதர்களை மதிக்கிறோமா?


Wednesday, April 8, 2026

Easter Vigil

பாஸ்கா ஞாயிறு 

பாஸ்கா ஞாயிறு திருவிழிப்பு திருப்பலி, திருச்சபையில் “அனைத்து திருப்பலிகளின் தாய்” என அழைக்கப்படுகிறது. இதற்குக் காரணம், இந்த இரவில் நாம் உயிர்த்தெழுந்த ஆண்டவர் இயேசுவை விழித்திரந்து, எதிர்நோக்கி, மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம் என்பதுதான். இது சாதாரண ஒரு திருப்பலி அல்ல; இருளிலிருந்து ஒளிக்குச் செல்லும் மனித வரலாற்றின் மாபெரும் மாற்றத்தை நினைவுகூரும் புனிதமான விழிப்பு.

நேற்றைய நாள்—புனித வெள்ளி—துயரத்தின் நாள், அமைதியின் நாள், இருளின் நாள். “மூன்று மணி முதல் இருள் உண்டாயிற்று” என்று நற்செய்தி சொல்வதை நாம் கேட்டோம். அது மனிதன் பயத்தில், குழப்பத்தில், நம்பிக்கையிழந்த நிலையில் வாழ்ந்த தருணத்தை நினைவூட்டுகிறது. சீடர்களும் பயத்தில் சிதறிப்போனார்கள்; மனித உள்ளங்கள் இருளால் மூடப்பட்டிருந்தன.

ஆனால், இன்றைய நற்செய்தி வாசகத்தின் தொடக்கமே நமக்குப் புதிய நம்பிக்கையை அளிக்கிறது: “வாரத்தின் முதல் நாளில், விடியற்காலையில் பெண்கள் கல்லறையை நோக்கிச் சென்றார்கள்.” இந்த ‘விடியல்’ என்பது ஒரு சாதாரண கால குறிப்பல்ல; அது இருள் முடிந்து ஒளி பிறக்கும் தருணம். அது மரணம் முடிந்து உயிர் வெல்லும் தருணம். அது பயம் நீங்கி நம்பிக்கை எழும் தருணம்.

“ஈஸ்டர்” என்ற சொல் itself கிழக்கில் உதிக்கும் சூரியனை நினைவூட்டுகிறது. அதனால் தான் பாஸ்கா பெருவிழா ஒளியின் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. இன்றைய திருப்பலியில் நாம் அனுபவிக்கும் ஒவ்வொரு சடங்கும்—புதிய நெருப்பு, பாஸ்கா மெழுகுவர்த்தி, ஒளி பகிர்தல்—அனைத்தும் ஒரு மெய்ப்பொருளை அறிவிக்கின்றன: இருள் நிரந்தரமல்ல; ஒளியே இறுதியில் வெல்லும்.

எனவே, இந்த புனித இரவில் நாம் நினைவுகூர வேண்டியது ஒன்றே: எவ்வளவு இருள் இருந்தாலும், கடவுளின் ஒளி அதை வெல்லும். எவ்வளவு பயம் இருந்தாலும், உயிர்த்தெழுந்த கிறிஸ்து நமக்கு துணைநிற்கிறார். இந்த விழிப்பு நமக்கு ஒரு அழைப்பு—இருளில் தங்காமல், ஒளியில் நடக்கவும்; நம்பிக்கையில்லாமல் வாழாமல், உயிர்த்தெழுந்த ஆண்டவருடன் புதிய வாழ்வைத் தொடங்கவும்

கத்தோலிக்கர்களில் பலர் இயேசுவின் உயிர்ப்பை உறுதியாக நம்புகிறார்கள். அதே சமயம், இயேசுவின் உயிர்ப்பை நம்ப மறுப்பவர்களும் ஏராளமாக உள்ளனர். ஒரு நீதிமன்றத்தில் உண்மையை நிரூபிக்க “உண்மை” மட்டும் போதாது; அதற்கு தகுந்த ஆதாரங்கள், சாட்சியங்கள், ஆவணங்கள் தேவையாகின்றன. அப்போதுதான் அது நியாயமான உண்மையாக ஏற்கப்படும்.

அப்படியானால், இயேசுவின் உயிர்ப்பு எப்படி நிகழ்ந்தது என்பதை நாம் எப்படி நிரூபிக்க முடியும்? அந்த காலத்தில் இன்றையபோல் வங்கிகள், கடைகள், வீடுகள் போன்ற இடங்களில் இருக்கும் சிசிடிவி கேமராக்கள் கிடையாது. கல்லறையின் கல் எவ்வாறு உருண்டு அகன்றது? வானதூதரின் தோற்றம் எப்படி இருந்தது? அவர்கள் சொன்ன வார்த்தைகள் பதிவு செய்யப்பட்டதா? இவையெல்லாவற்றிற்கும் வெளிப்படையான ஆதாரங்களை நாம் காட்ட முடியாது.

ஆனால், நண்பர்களே, உயிர்ப்பின் உண்மை கேமராவில் பதிவாக வேண்டிய ஒன்று அல்ல; அது நம் இதயத்தில் நம்பப்பட வேண்டிய உண்மை. இந்த உண்மைக்கு வலுவான சாட்சிகள் யார் என்றால், சீடர்களே. அவர்களின் வாழ்க்கை முறை, அவர்களின் சாட்சிய வாழ்வு, அவர்கள் சந்தித்த துன்பங்களும் தியாகங்களும்—இவை அனைத்தும் உயிர்த்த இயேசுவை அவர்கள் உண்மையாக அனுபவித்ததற்கான வலுவான சான்றுகளாகின்றன. பயத்தில் ஓடியவர்கள் தைரியமான சாட்சிகளாக மாறினர்; இதுவே உயிர்ப்பின் ஆழ்ந்த சாட்சி.

இன்றைய உலகில் நாம் பல கேள்விகளுக்கான பதில்களை ChatGPT, Google, AI Gemini போன்றவற்றில் எளிதாகக் காணலாம். ஆனால் வாழ்க்கையின் ஆழமான உண்மைகள், அனுபவங்கள்—அவை இயந்திரங்களால் அல்ல, அனுபவித்த மனிதர்களால் மட்டுமே நமக்கு வெளிப்படுகின்றன

ஏசுவின் சிலுவை மரணத்திற்குப் பிறகு, சீடர்கள் கதவுகளை மூடி பயத்தில் மறைந்து இருந்தார்கள். மரணப் பயத்தால் ஓடியவர்கள் அவர்கள். ஆனால் உயிர்ப்புக்குப் பிறகு, அதே சீடர்கள் வெளியில் வந்து இறைவார்த்தையை தைரியமாக பகிரங்கமாக அறிவிப்பவர்களாக மாறினார்கள்.

பேதுரும் யோவானும் திருத்தூதர் செயல்கள் 4:20-ல் தலைமைச்சங்கத்தின் முன், குருமார்களிடம் உறுதியாகச் சொல்கிறார்கள்: “நாங்கள் கண்டதையும் கேட்டதையும் பேசாமல் இருக்க முடியாது.” உயிர்த்த ஏசுவைப் பற்றிய அவர்களின் அனுபவம் அவர்களுக்கு இந்தத் தைரியத்தை அளித்தது. இந்த வீரம் எங்கே இருந்து வந்தது? 

அவர்கள் பல துன்பங்களையும் தாங்கினர். பலர் சிறை சென்றார்கள். பவுல் குறைந்தது நான்கு அல்லது ஐந்து முறை சிறைவாசம் அனுபவித்தார். பிலிப்பியில், சீலாவுடன் சேர்ந்து அடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சேசரியாவில் சுமார் இரண்டு ஆண்டுகள் சிறையில் இருந்தார். அந்தச் சிறைவாசத்திலேயே அவர் கடிதங்களை எழுதத் தொடங்கினார். சிறையிலிருந்தபோதும் பல அதிசயங்கள் நிகழ்ந்தன; சிறைக் காவலரும் அவரது குடும்பத்தாரும் இரட்சிப்பைப் பெற்றார்கள்.

ஆகவே, உயிர்த்த ஏசுவின் அனுபவம் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. கல்லறையை நோக்கி வந்தவர்களை, அவர் கலிலேயாவை நோக்கி புறப்படச் செய்கிறார். இறப்பை நோக்கி பயத்தில் வாழ்ந்தவர்களை, புதிய வாழ்வை நோக்கி அழைக்கிறார். “கலிலேயாவுக்குச் செல்லுங்கள்” என்ற அழைப்பு, புதிய தொடக்கத்திற்கான அழைப்பாக மாறுகிறது.

“நற்செய்தியில் ‘உங்களுக்கு முன்பாக கலிலேயாவுக்கு போய்க் கொண்டிருக்கிறார் ஏசு’ என்ற வார்த்தைகளின் மூலம், ஆண்டவர் ஒரு புதிய செய்தியை அளிக்கிறார். அதாவது: “பின்சென்று பார்க்காதீர்கள்; திரும்பிப் போகாதீர்கள்; முன்னேறிக் கொண்டே செல்லுங்கள்” என்ற அழைப்பு.

ஏசு எப்போதும் முன்னேற்றத்திற்கே அழைக்கிறார். கடந்த கால வலிகள், பாவங்கள், பழிவாங்கல்கள்—இவற்றில் சிக்கிக்கொண்டு வாழ வேண்டாம் என்று அறிவுறுத்துகிறார். அவற்றை மனதில் பிடித்துக்கொண்டு இருப்பதை விட, அவற்றை விட்டுவிட்டு புதிய வாழ்க்கையை நோக்கி செல்ல வேண்டும் என்று அழைக்கிறார்.

சில நேரங்களில், நம்முடைய வாழ்க்கையில், நாமும் பழைய வாழ்க்கையின் கட்டுப்பாடுகளையும், துன்பங்களையும் விட்டுவிடாமல் பிடித்துக்கொள்கிறோம்.

ஆனால், இயேசு நமக்குக் கொடுக்கும் அழைப்பு தெளிவானது: கடந்ததை விட்டுவிட்டு, புதிய வாழ்க்கையை நோக்கி முன்னேறுங்கள். உயிர்த்த ஆண்டவர் நம்மை எப்போதும் முன்னே செல்லச் செய்கிறார்; பின்னோக்கி அல்ல

நாம் வாழ்க்கையில் “கடந்து செல்லும்” மனிதர்களாக இருக்க வேண்டும் என்ற அனுபவத்தை, இன்றைய வாசகங்கள் நமக்கு அளிக்கின்றன. குறிப்பாக, இஸ்ரவேல் மக்கள் எகிப்தில் பாஸ்கா விழாவைக் கொண்டாடிய போது, ஆண்டவரின் தூதர் “கடந்து சென்றார்” என்று நாம் வாசிக்கிறோம். அந்தக் கடத்தல் ஒரு சாதாரண நிகழ்வு அல்ல; அது விடுதலையின் தொடக்கம். அவர் கடந்து சென்றபோது, எகிப்தியர்களின் வல்லமையை முறியடித்து, இஸ்ரவேல் மக்களை பாதுகாத்தார்.

அதேபோல், செங்கடலைக் கடக்கவும் ஆண்டவர் துணையாக இருந்தார். இஸ்ரவேல் மக்களின் பார்வையில் கடல் என்பது அச்சத்தையும் தீமையையும் குறிக்கும் ஒரு அடையாளமாக இருந்தது. ஆனால் அந்தக் கடலைக் கடந்து சென்ற அனுபவத்தின் முடிவில், அவர்கள் கடவுளிலும் மோசேயிலும் நம்பிக்கை கொள்ளத் தொடங்கினார்கள்.

இதனால், “கடந்து செல்லுதல்” என்பது நம்முடைய வாழ்க்கைக்கும் ஒரு முக்கியமான அழைப்பு. துன்பங்களையும், சோதனைகளையும், தீமைகளையும் கடந்து செல்ல வேண்டும்; அவற்றில் நின்று விடக்கூடாது.

இரண்டாவது, அபிரகாம் தனது மகன் இசாக்கைப் பலியிடுவதற்காக மூரியா மலைக்கு சென்றதை நாம் நினைவுகூர்கிறோம். அது ஒரு பெரிய சோதனை. ஆனால் அவர் பின்வாங்கவில்லை; நம்பிக்கையுடன் முன்னேறினார். அதுபோல, இயேசுவும் சிலுவையைச் சுமந்து முன்னேறினார். அவர் மூன்று முறை விழுந்தார்; ஆனாலும் ஒருபோதும் பின்வாங்கவில்லை.

கடவுள், அபிரகாமுக்கு இசாக்கை மீண்டும் அளித்தது போலவே, உயிர்த்தெழுந்த இயேசுவை நமக்குக் கொடுக்கிறார். இது நமக்கு புதிய நம்பிக்கையையும் புதிய வாழ்வையும் அளிக்கிறது.

மேலும், ழைய ஏற்பாட்டில், தொடக்க நூல் 19:24-ல், சோதோம் நகரத்தை கடவுள் அழித்ததை நாம் வாசிக்கிறோம். கந்தகமும் நெருப்பும் பொழியச் செய்து அந்த நகரம் அழிக்கப்பட்டது. ஆனால் லோத்தின் குடும்பத்தாருக்கு மட்டும் ஒரு கட்டளை வழங்கப்பட்டது: “திரும்பிப் பார்க்காமல் செல்லுங்கள்” என்று. ஆனால் லோத்தின் மனைவி திரும்பிப் பார்த்தாள்; அதனால் அவள் உப்புத்தூணாக மாறினாள். ஏன் இவ்வளவு கடுமையான தண்டனை? விவிலியத்தின் பார்வையில் “திரும்பிப் பார்த்தல்” என்பது கடவுளின் இறை பராமரிப்புக்கு எதிரான பாவம்.

உயிர்த்தெழுந்த இயேசு நமக்கு ஒளியின் நாளை அளிக்கிறார்; புதிய வாழ்வை வழங்குகிறார். எனவே அவர் நமக்குக் கூறும் அழைப்பு தெளிவானது: “திரும்பிப் பார்க்காதீர்கள்.” கடந்த வாழ்க்கை, கடந்த காயங்கள், கடந்த பாவங்கள், கடந்த அவமானங்கள், தோல்விகள்—இவற்றில் தங்கிவிடாதீர்கள். நமது கடந்த காலத்தைப் பற்றி தொடர்ந்து நினைத்து, அதில் சிக்கிக்கொண்டு இருப்பதை நிறுத்த வேண்டும். வேதனையான அனுபவங்கள் நிரந்தரமானவை அல்ல; அவை தற்காலிகமானவை. அந்த வேதனைகளே நம்மை வளர்ச்சிக்குத் தள்ளும் ஒரு வலிமையாக மாறலாம்.

ஆகையால், இந்த உயிர்ப்பு பெருவிழாவில், புதிய நம்பிக்கையுடன் ஒரு புதிய தொடக்கத்தை மேற்கொள்வோம்.

அனைவருக்கும் உயிர்ப்பு பெருவிழா நல்வாழ்த்துக்கள்.



.


Thursday, April 2, 2026

எந்தக் கடவுள் போரை நிறுத்துவார்?

புனித வெள்ளி மறையுரை

அன்புடைய சகோதரர் சகோதரிகளே,

மனித வரலாறு இரண்டு மரங்களின் நடுவே நிற்கிறது.

முதல் மரம் – தொடக்க நூலில் காணப்படும் நன்மைத் தீமை அறியக் கூடிய மரம்.

அது கண்களுக்கு இனிமையானது. விரும்பத் தக்கது.

மனிதன் கீழ்ப்படியாமையைத் தேர்ந்தெடுத்தான். 

அந்த மரத்தின் கனியை உண்டபோது, பாவம் உலகிற்குள் நுழைந்தது.

கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையிலான உறவு முறிந்தது.

அந்த மரம் அழகாகத் தோன்றினாலும், அதன் விளைவு மரணம்.

இரண்டாவது மரம் – சிலுவை மரம்.

அது அவமானத்தின் சின்னம். குற்றவாளிகளுக்கே உரிய தண்டனை.

ஆனால் அந்த சிலுவைமேல் நின்றவர் இயேசு.

அவர் கீழ்ப்படிதலைத் தேர்ந்தெடுத்தார்:

“அப்பா, என் சித்தமல்ல, உமது சித்தமே ஆகட்டும்” என்றார்.


திரு. பவுல் சொல்லும் வார்த்தை நமக்கு நினைவில் வருகிறது (ரோமர் 5):

"ஒரு மனிதனால் பாவம் உலகில் நுழைந்தது; மற்றொரு மனிதனால் இரட்சிப்பு உலகில் வந்தது."


  • அந்த முதல் மரம் மனிதனை வீழ்த்தியது.
  • இந்த இரண்டாவது மரம் மனிதனை எழுப்புகிறது.

இன்று உலகம் முழுவதும் புனித வெள்ளி சடங்குகள் நடைபெறுகின்றன.

ஆனால் சில இடங்களில்—இஸ்ரேல், காசா, லெபனான்— பாதுகாப்பு காரணமாக அந்த சடங்குகளே தடைபடுகின்றன.


நாம் கேட்கத் தொடங்குகிறோம்: இது புனித பூமியா? அல்லது சபிக்கப்பட்ட பூமியா?

எத்தனை போர்கள்!எத்தனை அழிவுகள்!

சாதாரண மனிதர்கள் கட்டிய வீடுகள், அன்புடன் வளர்த்த பிள்ளைகள் எங்கேயோ இருந்து வரும் குண்டுகளால் அழிக்கப்படுகின்றனர்.


திருத்தந்தை ஃபிரான்சிஸ் கூறியதுபோல்:“போரில் யாரும் வெற்றி பெறவில்லை; அனைவரும் தோல்வியடைந்தவர்களே.” In a war, there is no real winner, all are losers.

அப்போது மனிதன் கேட்கிறான்: “கடவுள் எங்கே?” “எந்த கடவுளை நோக்கி நாம் ஜெபிக்க வேண்டும்?” “எந்தக் கடவுள் இந்த போரை நிறுத்துவார்?”


ஒரு மனிதன் சாலையில் சென்று கொண்டிருந்தான். திடீரென பாதாள சாக்கடியில் விழுந்துவிட்டான். முதல் இருவர் கம்பும் கயிறும் கொடுத்தனர்—அவர்கள் உதவி செய்ய விரும்பினர், ஆனால் தொலைவில் இருந்தனர்.

மூன்றாவது ஒருவர் வந்தார். அவர் சற்றும் தாமதிக்காமல் உடனே உள்ளே குதித்தார். தன்னுடைய தோள்களில் அவனைத் தாங்கி அவனை காப்பாற்றினார். அந்த மனிதனைத் தனது தோள்களில் சுமந்து மேலே கொண்டுவந்தார்.

அவர்தான் இயேசு.

மற்றவர்கள் கற்றுக்கொடுக்கிறார்கள்;

இயேசு காப்பாற்றுகிறார்.


அதுவே சிலுவையின் அர்த்தம்:

தொலைவில் இருந்து பார்க்கும் கடவுள் அல்ல,

உள்ளே இறங்கி நம்மைத் தூக்கும் கடவுள்.


பிலிப்பியர் 2:10-11:

“இயேசுவின் நாமத்தில் விண்ணிலும், மண்ணிலும், மண்ணுக்குக் கீழிலும் உள்ள அனைவரும் மண்டியிடுவார்கள்; அனைத்து நாவுகளும் ‘இயேசு கிறிஸ்து ஆண்டவர்’ என்று அறிவிப்பார்கள்.”

Every knee Shall Babu in front of the grass every time shall profess the name of Christ?

புனித வெள்ளியில் நாம் என்ன செய்வோம்?

ஜெபிப்போம்.

போரால் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஜெபிப்போம்.

நம் தலைவர்களுக்காக ஜெபிப்போம்.

மன்னிப்போம். மன்னிப்பு கேட்போம்.


ஏனெனில்,

முதல் மரம் பாவத்தை கொண்டு வந்தது;

சிலுவை மரம் மன்னிப்பை அளிக்கிறது.


முதல் மரம் மனிதனை கடவுளிடமிருந்து பிரித்தது;

சிலுவை மரம் மனிதனை மீண்டும் கடவுளோடு இணைக்கிறது.

இன்று நாம் தேர்வு செய்ய வேண்டியது இதுதான்:

கீழ்ப்படியாமையின் மரமா?

அல்லது கீழ்ப்படிதலின் சிலுவையா?


ஆமென்.


Tuesday, March 31, 2026

பெரிய வியாழன் 2026

கத்தோலிக்க நாடுகளில் புனித வாரம் என்பது வெறும் விடுமுறை நாட்கள் அல்ல; அது நினைவு, குடும்பம், விசுவாசம், புதுப்பிப்பு ஆகியவற்றின் காலமாகக் கொண்டாடப்படுகிறது. பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள் அரசு விடுமுறையாக இருக்கும். பிலிப்பைன்ஸ் போன்ற கத்தோலிக்க பெரும்பான்மை நாடுகளில் இது 4–5 நாள் நீண்ட தேசிய விடுமுறையாக அமைகிறது; லத்தீன் அமெரிக்க நாடுகளில் பல இடங்களில் முழு வாரம் விடுமுறை இருக்கும். மக்கள் சொந்த ஊருக்குச் சென்று, தாத்தா பாட்டிகளைச் சந்தித்து, குடும்பத்தோடு நேரம் செலவிட்டு, யாத்திரை அல்லது சுற்றுலா அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.

ஆனால் நமக்கு - இந்த நாள் வெறும் விடுமுறை அல்ல.
நாற்பது நாள் தவம், நோன்பு, மனந்திரும்புதல் ஆகியவற்றின் உச்சநிலையை அடையும் முப்பெரும் திருவிழாவின் துவக்கம் இது (கறி, செருப்பு அணியாமல், தண்ணி அருந்தாமல்).
பெரிய வியாழன், புனித வெள்ளி, பாஸ்கா ஞாயிறு—இந்த Triduum நம் விசுவாசத்தின் இதயம்.

இன்றைய பெரிய வியாழன் திருவிழா மூன்று ஆழமான உண்மைகளை நமக்கு நினைவூட்டுகிறது:
(1) பாதம் கழுவும் சடங்கு
(2) நற்கருணை துவஙங்கப்பட்ட நாள்
(3) குருத்துவம் ஏற்படுத்தப்பட்ட நாள்

1. பாதம் கழுவும் சடங்கு:  Maundy Thursday என்ற பெயர் Mandatum என்ற இலத்தீன் சொல்லிலிருந்து வருகிறது. அதாவது “கட்டளை”.
இன்றைய நாள் இயேசு ஒரு புதிய கட்டளையைக் கொடுக்கிறார்: “நான் உங்களை அன்பு செய்ததுபோல, நீங்களும் ஒருவரை ஒருவர் அன்பு செய்யுங்கள்.” அவர் சொல்லிமட்டும் விடவில்லை; செய்தும் காட்டினார்.
சீடர்களின் காலடிகளைத் தாமே கழுவினார்.

இயேசு சீடர்கள்மேல் வைத்த ஆகச் சிறந்த அன்பின் அடையாளம்/ வெளிப்பாடு. 
அன்பு என்பது வார்த்தை அல்ல; அது மண்டியிடும் பணிவு.

நற்செய்தியில் இதற்கு முன், இயேசுவின் பாதங்களை யார் கழுவினார்?
லூக்கா 7:37–38-ல்,

“அந்த ஊரில் பாவியான ஒரு பெண்… தன் கண்ணீரால் அவரது பாதங்களை நனைத்து, தன் தலைமுடியால் துடைத்தாள்.”

யூத மரபில் பெண்ணின் தலைமுடி அவளின் கண்ணியத்தின் அடையாளம். பொதுவிடத்தில் அதை அவிழ்ப்பது மிகுந்த தாழ்மையையும், அவமானத்தையும் அதே நேரம், தன்னைத்தானே முழுமையாக ஒப்படைக்கும் அன்பையும் குறிக்கும்.
யூதப்பெண் இரண்டே இடங்களில் மட்டும்தான், தன்னுடைய கூந்தலை அவிழ்த்துவிட்டு இருக்க வேண்டும். ஒன்று, அவள் விலைமாதுவாக இருக்க வேண்டும் அல்லது கணவனுடன் இருக்கக்கூடிய அன்பான் நேரங்களில். ஆகச் சிறந்த அன்பை இயேசுவுக்கு வெளிப்படுத்துகிறார். அந்தப் பெண் அன்பினால் செய்ததை, இன்று இயேசு தம் சீடர்களுக்குச் செய்கிறார்.

லூக்கா 22:15-ல் இயேசு சொல்கிறார்: “நான் பாடுபடுவதற்கு முன், இந்த பாஸ்கா விருந்தை உங்களோடு உண்ண மிகுந்த ஆவலாயிருந்தேன்.”

யோவான் இந்தச் செயலை மிக நுணுக்கமாக விவரிக்கிறார்: “இயேசு எழுகிறார், மேலாடையை கழற்றுகிறார், துணியை இடுப்பில் கட்டுகிறார், தண்ணீர் ஊற்றுகிறார், பாதங்களை கழுவுகிறார், துடைக்கிறார்”.

இதைப்போன்ற தொடர்ச்சியான செயல்வினைகள் (transitional verbs) நல்ல சமாரியனின் உவமையிலும் (லூக் 10:34) ஒலிக்கின்றன:
அணுகுதல், காயம் கட்டுதல், தூக்கிச் செல்வது, கவனித்தல். (“ஒருவர் அருகில் வந்து அவரை அணுகி, காயங்களில் திராட்சை மதுவும் எண்ணெயும் வார்த்து, அவற்றைக் கட்டி, தாம் பயணம் செய்த விலங்கின் மீது ஏற்றி, ஒரு சாவடிக்குக் கொண்டுபோய் அவரைக் கவனித்துக் கொண்டார்”. நல்ல சமாரியனின் (லூக் 10:34)

இதன் மூலம் ஒரு ஆழமான உண்மை தெரிகிறது:
இயேசு சீடர்களின் கால்களை மட்டும் கழுவவில்லை; அவர்களின் ஈகோவையும் கழுவினார்.
பெருமை, போட்டி மனப்பான்மை, சுயநலம்—இவற்றை குணப்படுத்தினார்.

2. இன்று நற்கருணை என்னும் திருவருட்சாதனம் ஏற்படுத்தப்பட்ட நாள்:

எந்த ஒரு மொழியிலும் இல்லாத அழகு/பொருள் தமிழில் உள்ளது:

  • நற் = நல்ல, புனித, உயர்ந்த
  • கருணை = இரக்கம், அன்பு, அருள்

கிரேக்க மொழியில் Eucharistia என்பது நன்றி செலுத்துதல்.
ஆனால் தமிழில் இது இன்னும் ஆழமாகிறது: கடவுளின் அளவற்ற கருணை நமக்குள் உடலாக இறங்கும் தருணம்.

பலர் Eucharistic miracles பற்றி பேசுவார்கள். நற்கருணை புதுமைகள் மற்ற அனைத்து புதுமைகளையும் விட (மரியா மற்றும் புனித அந்தோணியார்) பெயரிலே நிறைவேற்றும் புதுமைகளைவிட மேலானது. காரணம் இங்கே ஆண்டவர் இயேசுவின் நேரடியான பிரசன்னம் செயலாற்றுகிறது. 
சமீபத்தில் Carlo Acutis பற்றிய Eucharistic miracles நூல்களும் பலரைக் கவர்ந்துள்ளன. சில நேரங்களில் மக்கள் ஐயப்படும் போது அற்புதங்கள் நிகழலாம்.

ஆனால், அன்பானவர்களே,
நாம் நம்பினாலும் நம்பாவிட்டாலும், ஒவ்வொரு திருப்பலியிலும் மிகப் பெரிய அற்புதம் நடக்கிறது. அப்பம் ஆண்டவருடைய உடலாகவும், ரசம் அவரது இரத்தமாகவும் மாறுகிறது. நம் கண்களுக்கு புலப்படாதாலும், விசுவாசக் கண்களுக்கு அது தெளிவாகத் தெரிகிறது.

“நாப்பொலியில் புனிதர் ஜென்னாரோவின் இரத்தம் (San Gennaro / St. Januarius) ஆண்டுக்கு மூன்று முறை உருகும் புதுமையை மக்கள் ஆச்சரியத்தோடு காண்கிறார்கள். நாப்பொலி பேராலயத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் முன், அந்த உறைந்த இரத்தம் திரவமாக உருகுகிறது என்று சாட்சியமளிக்கப்படுகிறது. இரத்தம் உருகினால் அருள், பாதுகாப்பு, சமாதானம் கிடைக்கும் என்று நம்புகிறார்கள். சில ஆண்டுகளில் அது உடனே உருகாமல் தாமதிக்கலாம்; அப்போது இயற்கை சீற்றங்கள் நிகழும். இது பல நூற்றாண்டுகளாக நடைபெற்று வருகிறது. அதிகாரப்பூர்வமாக 1389 முதல் இதற்கான பதிவுகள் உள்ளன. 

ஆனால் நம் ஆலயத்தில் ஒவ்வொரு திருப்பலியிலும் அதைவிட உயர்ந்த புதுமை நடக்கிறது. அங்கே இரத்தம் உருகுவது அல்ல; அப்பம் ஆண்டவரின் உடலாகவும், திராட்சை ரசம் அவரது இரத்தமாகவும் மாறுகிறது.”

நற்கருணைய 
Dine-in and Take-away அனுபவம் போல காணவேண்டும்.
ஒரு உணவகத்தில் உட்கார்ந்து சுவைப்பது போல, ஆலயத்தில் ஆண்டவரின் பிரசன்னத்தில் நற்கருணையைப் பெறலாம்.
அல்லது அதை எடுத்துச் சென்று நோயாளிகளுக்கும், வீட்டிலிருப்போருக்கும் நம்மைக் காண்போருக்கும் வழங்கலாம்.
இரண்டிலும் ஆண்டவரின் அன்பே மையம்.  ஆனால் நினைவில் கொள்ளுங்கள்:
நற்கருணை உங்களை மாற்றுகிறது; உங்களால் சமூகம் மாற்றப்படுகிறது.
இயேசுவை உட்கொண்டவர், இன்னொரு இயேசுவாக உலகில் செயல்பட வேண்டும்.

3. இன்று இயேசு குருத்துவத்தையும் ஏற்படுத்திய நாள். நற்கருணையையும் குருத்துவத்தையும் பிரிக்க முடியாது.
ஒரு குரு வெறும் நிர்வாகி அல்ல; அவர் அருட்பணியாளர் (நாங்கள் துறவிகள்) திருவருட்சாதனங்களின் பணியாளர். தாய்த் திருச்சபை ஒவ்வொரு ஆண்டும் இந்த நாளில் திருத்தைலத் திருப்பலியில் குருக்கள் தங்கள் குருத்துவ வாக்குறுதிகளை ஆயர்முன் புதுப்பிக்க அழைக்கிறது.

ஐரோப்பிய நாடுகளில் குருவாக விரும்புவரின் எண்ணிக்கை மிகமிக குறைவு. ஆகவே இன்று,
குருக்களுக்காக ஜெபியுங்கள்:

  • இளங்குருக்கள்
  • நோயுற்ற குருக்கள்
  • மறைப்பணியில் உழைக்கும் குருக்கள்
  • தனிமையில் வாடும் குருக்கள்
  • முதிய குருக்கள்

உண்மை நிகழ்வு - மறைப்பணியில் உள்ள குருக்களுக்கு நேரும் அவலங்களும், ஆபத்துகளும். Tom Uzhunnalil என்ற இந்தியாவைச் சேர்ந்த சலேசிய குரு  2016ஆம் ஆண்டு ஏமனில் Missionaries of Charity பணியாற்றிக் கொண்டிருந்தார். அங்கிருந்த மிஷனரிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி, அவரை கடத்திச் சென்றனர். சுமார் 18 மாதங்கள் அவர் சிறையில் வைக்கப்பட்டார். சித்திரவதைக்குப்பிறகு விடுவிக்கப்பட்டார். ஆனால் அவர் பின்னர் கூறிய ஒரு சாட்சி மிகவும் ஆழமானது: “என்னை உயிரோடே வைத்தது என் ஜெபம்தான்.” எந்த சூழ்நிலையிலும் அவர் நம்பிக்கையை இழக்கவில்லை. ஜெபமும், கடவுள்மீது வைத்திருந்த முழு நம்பிக்கையும் அவருக்கு பலமாக இருந்தது. இறுதியில் அவர் பாதுகாப்பாக விடுவிக்கப்பட்டார்.

மனிதர்கள் நம்மை கட்டிப்போடலாம்; ஆனால் கடவுள்மீது நம்பிக்கை கொண்ட இதயத்தை யாராலும் கட்டுப்படுத்த முடியாது.

அவர்களின் பணி ஓய்வில்லாத பணி. தன்னலமற்ற குருக்கள், எளிமையான குருக்கள், குணமளிக்கும் குருக்கள், பேயோட்டும் வல்லமை படைத்த குருக்கள், என்று அவர்கள் கடவுளின் பிரதிநிதியாக செயல்படுகின்றனர். 
கற்பித்தல், அர்ச்சித்தல், மேய்த்தல்—இந்த மூவகைப் பணி அவர்களின் வாழ்நாள் அழைப்பு.

பவுல் சொல்வது போல: “இந்தச் செல்வத்தை மண்பாண்டங்கள் போன்ற நாங்கள் கொண்டிருக்கிறோம்” (2 கொரி 4:7). அவர்களிடமிருந்து வரும் வல்லமை அவர்களுடையது அல்ல; அது கடவுளுக்கே உரியது.

இதற்குச் சிறந்த சாட்சி திருத்தூதர் பணிகள் 3:6: “வெள்ளியும் பொன்னும் என்னிடத்தில் இல்லை; ஆனால் என்னிடத்தில் உள்ளதை உனக்குக் கொடுக்கிறேன்: நாசரேத்து இயேசு கிறிஸ்துவின் பெயரால், எழுந்து நட.”

இதுவே குருத்துவத்தின் இதயம்:
தன்னிடம் உள்ள கிறிஸ்துவை பிறருக்கு அளிப்பது.

இறுதியாக, இன்றைய திருவிழாவை ஆலயத்திலே மட்டும் விட்டுவிடாதீர்கள்.
வீட்டிற்குச் செல்லும்போது,
உங்கள் தாய், தந்தை, தாத்தா, பாட்டி—அவர்களிடம் அன்பைக் காட்டுங்கள்.
அவர்களின் பாதங்களைக் கழுவ வேண்டியதில்லை;
ஆனால் அவர்களின் மனக்காயங்களை அன்பால் கழுவுங்கள்.
மன்னிப்புக் கேளுங்கள் (pardon).
நன்றி சொல்லுங்கள் (Thanks).
“நான் உங்களை நேசிக்கிறேன் (I love you)” என்று சொல்லுங்கள்.

இதுவே பெரிய வியாழனின் உண்மையான வாழ்வு. கடவுள் 3 கொடைகளைத் தந்தார்:
அன்பின் பணிவு, நற்கருணையின் அருள், குருத்துவத்தின் சேவை. இந்த மூன்றையும் வாழ்வில் செயல்படுத்தினால்,
நம் வீடு, நம் திருச்சபை, நம் சமூகம்—அனைத்தும் மாற்றமடையும்.

Saturday, March 28, 2026

குருத்தோலை மட்டும் ஏந்தாதீர்கள்; சிலுவையையும் ஏந்துங்கள் - குருத்து ஓலை ஞாயிறு

மத்தேயு 21:1-11. எசா 50:4-7. பிலி 2:6-11.

அன்பான சகோதர சகோதரிகளே,

இன்று நாம் கொண்டாடும் குருத்து ஓலை ஞாயிறு (Palm Sunday) ஒரு நிகழ்வு மட்டும் அல்ல; அது புனித வார வாழ்க்கைப் பயணத்தின் தொடக்கம். சென்ற ஆண்டும் இதே நாளில் குருத்தோலை ஏந்தி வந்தோம். பின்னர் அந்த ஓலைகள் சாம்பலாகி நெற்றியில் பூசப்பட்டு, 40 நாள் தவப்பயணத்தை மேற்கொண்டோம். இன்று மீண்டும் புதிய குருத்தோலைகளை ஏந்துகிறோம். இதுவே கிறிஸ்தவ வாழ்க்கை: மகிழ்ச்சியிலிருந்து சோதனை, சோதனையிலிருந்து தியாகம், தியாகத்திலிருந்து உயிர்ப்பு.

இயேசு எருசலேமிற்குள் வெற்றி ஆர்ப்பரிப்போடு நுழைவதை மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகியோர் பதிவு செய்கிறார்கள். எனினும், ஒத்தமைவு (சினாப்டிக்) நற்செய்திகளோடு ஒப்பிடும்போது, மத்தேயு நற்செய்தியாளர் சில ஆழமான உண்மைகளை வலியுறுத்துகிறார்:

  1. இயேசு ஒரு கழுதையையும் அதன் குட்டியையும் கொண்டு நுழைகிறார் (மற்ற நற்செய்திகளில் குட்டிக் கழுதை மட்டும் குறிப்பிடப்படுகிறது). இதன் பொருள்: “இயேசு ஒருவராக இல்லை”; தந்தை அவரோடு இருக்கிறார். மத்தேயுவைப் பொருத்தவரை, அவர் “இமானுவேல்” – கடவுள் நம்மோடு. இது இயேசுவுக்கான உண்மை மட்டும் அல்ல; துன்பத்தில் இருக்கும் மனிதனோடு, அநீதியில் வாடும் மக்களோடு, தனிமையில் அழும் உள்ளங்களோடு கடவுள் பயணிக்கிறார்.
  2. இறைவாக்கினர் “மகள் சீயோனிடம் சொல்லுங்கள்: இதோ உன் அரசர் உன்னிடம் வருகிறார்; அவர் எளிமையுள்ளவர்; கழுதையின் மேல் ஏறி வருகிறார்.” இதுவரை இஸ்ராயேல் மக்களிடம் வந்தவர்கள்—அசீரியர்களும் பாபிலோனியர்களும்—குதிரைகளில் வந்தார்கள். அவர்கள் இரத்தத்தையும், அழுகையையும், கண்ணீரையும் கொண்டு வந்தார்கள். ஆனால் இயேசு அமைதியை கொண்டு வருகிறார்.
  3. “இவர் யார்?” என்ற கேள்வியை மத்தேயு எழுப்புகிறார். “தாவீதின் மகனுக்கு ஓசன்னா” என்று மக்கள் முழங்குகிறார்கள். மத்தேயு நற்செய்தியின் வாசகர் ஒவ்வொருவரும் “இவர் யார்?” என்ற கேள்வியைத் தமக்குள் எழுப்ப வேண்டும்.

ஆண்டவராகிய இயேசு நம் வாழ்க்கை என்னும் எருசலேமிற்குள் நுழைகிறார். இமானுவேலராக நம்மோடு நிற்கிறார். அமைதியை நமக்கு தருகிறார். இந்த நேரத்தில் நாம் ஒவ்வொருவரும் “இவர் யார்?” என்ற கேள்விக்கான பதிலை நம் இதயத்தின் அமைதியில் அளிக்க வேண்டும்.

நம் காலத்தின் சிலுவை – போர். அன்பானவர்களே, இன்று உலகம் முழுவதும் நாம் சந்திக்கும் ஒரு பெரிய உண்மை: போர்.

Strait of Hormuz ஏறக்குறைய மூடப்பட்ட நிலையில் உள்ளது. அதன் விளைவாக உலகெங்கும் எரிபொருள் தட்டுப்பாடு, பொருளாதார சிக்கல், நாடுகளுக்கிடையே அச்சம் ஆகியவை உருவாகின்றன.

சாதாரண மனிதர்கள் பாடுபட்டு கட்டிய வீடுகளும், பேணி வளர்த்த பிள்ளைகளும்—எங்கிருந்தோ விழும் குண்டுகளால் சில நொடிகளில் அழிக்கப்படுகின்றன. இந்த நேரத்தில் மனிதன் கேட்கிறான்: “கடவுள் எங்கே?”

யூதம், கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகிய உலகின் முக்கிய மதங்களின் பிறப்பிடமாக மத்திய கிழக்கு பகுதி இருக்கிறது. பண்டைய நாகரிகங்களிலும் (பாபிலோனியா, எகிப்து) பல கடவுள் நம்பிக்கைகள் இருந்தன. ஆனால் இன்று கேள்வி:

எந்தக் கடவுளிடம் நாம் செபிப்பது? எந்தக் கடவுள் இந்தப் போரை நிறுத்துவார்?

  • ஒரு மனிதன் சாலையில் சென்று கொண்டிருக்கும்போது சாக்கடையில் விழுந்துவிடுகிறான். முதல் இருவர் உதவ முயல்கிறார்கள்; ஆனால் தூரத்தில் இருந்து (கம்பு மற்றும் கயிற்றின் உதவி கொண்டு). ஆனால் முடியவில்லை.
  • மூன்றாவது ஒருவர் தாமதிக்காமல் உள்ளே குதித்து, தனது தோள்களில் அவனைச் சுமந்து காப்பாற்றுகிறார்.
  • அவரே இயேசு!.

மற்றவர்கள் கற்றுக்கொடுக்கிறார்கள் (இதிகாசங்கள்/நீதி நூல்கள்); ஆனால் இயேசு உள்ளே இறங்கி காப்பாற்றுகிறார்.

கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்ற மாயையில் வாழும் இஸ்ரேல் மக்கள், தங்கள் மதமே உயர்ந்தது என்று கூறும் இஸ்லாம் மதம், கடவுளின் பெயரால் பழிவாங்கத் துடிக்கும் குழுக்கள்—யாரும் இதுவரை போரை நிறுத்தவில்லை.

ஆனால் இயேசு இந்த வார நிகழ்வுகளில் அவரை கொல்ல திட்டமிடுவார்கள் - அவரை தீர்ப்பிடுவார்கள் - அவரை இகழ்வார்கள். ஆனால் அவர் எதிர்த்து போராடவில்லை; போர்க்கொடி தூக்கவில்லை. எசாயா 50:4–7ல் கூறும் துன்புறும் ஊழியனைப் போல: அடிப்போருக்கு முதுகை கொடுத்தார் - இகழ்ச்சியைத் தாங்கினார் - முகத்தை மறைக்கவில்லை - இயேசு சிலுவையைச் சுமக்கிறார்.

  • கடவுள் இந்தப் போரைக் கண்டும் காணாதவரல்ல. அவர் சிலுவையில் இருக்கிறார்.
  • காயமடைந்தவர்களுடன், அழும் குழந்தைகளுடன், அகதிகளுடன்
  • இயேசுவே துன்புறும் மக்களாக மாறுகிறார்.

இந்த குருத்து ஓலை ஞாயிறு நம்மை அழைக்கிறது: குருத்தோலை மட்டும் ஏந்தாதீர்கள்; சிலுவையையும் ஏந்துங்கள்.

எப்படி? நீதியின் பொருட்டு துன்புறும் ஒவ்வொரு மக்களுக்காக ஜெபிப்பதன் மூலம், அமைதிக்காக வேண்டுவதன் மூலம், போருக்கு எதிராக உள்ளத்தில் மாற்றம் கொண்டதன் மூலம்

ஜெபம்: ஆண்டவரே, போரால் பாதிக்கப்பட்ட நாடுகளில் கண்ணீர் வடிக்கும் மக்களுடன் நீர் இருங்கள். வீடுகளை இழந்தவர்களுக்கு நம்பிக்கை தாரும். தலைவர்களின் இதயங்களை மாற்றும். ஆயுதங்களை அமைதியாக மாற்றும். இந்த உலகிற்கு உமது சமாதானத்தை அருளும்.

Saturday, March 21, 2026

“வேண்டும்! மரியாதைக்குரிய மரணம்!”

தவக்காலம் ஐந்தாம் ஞாயிறு  - எசே 37:12-14. உரோ 8:8-11. யோவா 11:1-45

சமீபத்தில் இந்திய உச்சநீதிமன்றம், Harish Rana; euthanasia case என்ற வழக்கில், மாண்புடன் மரணிக்கும் உரிமையை (Right to die with dignity) நடைமுறையில் அனுமதித்தது.

வட இந்தியாவில் கல்லூரியில் படித்து வந்த 'ஹரிஷ் ரானா' என்ற இளைஞர், ஒரு விபத்தால் கோமா நிலையில் சுமார் 13 ஆண்டுகள் படுக்கையிலேயே இருந்தார். அவருடைய பெற்றோர் இறுதிவரை அன்போடு பணிவிடை செய்தார்கள். கடைசியில் எந்த முன்னேற்றமும் இல்லாத நிலையில், அவர்களுக்கு மனவேதனையோடு ஒரு முடிவை எடுக்க வேண்டிய சூழ்நிலை வந்தது: ஆம்! இந்தியாவின் முதல் கருணைக்கொலை.

இந்த நிகழ்வு நமக்கு ஒரு ஆழமான உண்மையை நினைவூட்டுகிறது. 

  • வாழ்க்கை வணக்கத்திற்குரியது; 
  • ஆனால் மரணமும் மரியாதைக்குரியது.

சமாரிய பெண்ணுக்கு வாழ்வு தரும் தண்ணீரைக் கொடுத்த இறைவன் (யோவா 3), பிறவியிலேயே பார்வையற்றவருக்கு பார்வை தந்த இறைவன் (யோவா 9)இன்றைய வாசகங்கள் பெயராக சாவை வெல்லும் வாழ்வை தருகிறார்.  இன்றைய வாசகங்கள் வழியாக அவர் தரும் பாடங்கள் 3.


1. இறப்பு என்னும் எதார்த்தத்தை ஏற்றுக்கொள்ளும் ஞானம்:

நவீனகால மனிதன் மரணத்தை வெல்ல முயற்சிக்கிறான். Elon Musk போன்றவர்கள் புதிய உலகங்களை உருவாக்க முயற்சிக்கிறார்கள். மருத்துவமும், அறிவியலும் போட்டி போட்டுக் கொண்டு மனித வாழ்வை நீட்டிக்க முயற்சிக்கிறது.

ஆனால் ஒரு உண்மை மட்டும் மாறாது: இறப்பு என்பது மனித வாழ்வின் தவிர்க்க முடியாத எதார்த்தம். இன்று நாம் அழுகை, கண்ணீர், சோகம் இல்லாத உலகத்தை கனவு காணலாம். ஆனால் அவை இல்லாத உலகம் மனித உலகமல்ல.

இயேசு இலாசருக்கு உயிர் தந்தாரே ஒழிய, அழியா வாழ்வைத்தரவில்லை. யாயிரின் மகள், இலாசர், நயீன் நகரத்து இளைஞன் இவர்கள் மூவரும் வாழ்க்கையை இரண்டாம் முறை வாழ (ரெசுசிடேஷன்) வாய்ப்பு பெற்றார்களே தவிர, அழியா வாழ்வை (ரெசுரெக்ஷன்) பெறவில்லை. 

லாசருக்கு உயிர் தந்த இறைவன், 

சாவை சந்தோஷமாக சந்திக்கிறார். சாவிற்கு சவடால் விடவில்லை, அதை வரவேற்கிறார். சில நேரங்களில் உங்களின் இதயத்திற்கு நெருக்கமானவரின் மரணம் உங்களை புரட்டிப் போடும், ஆனால் ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும்.

இன்றைய வாசகம் நமக்குத் தரும் முதல் பாடம்: சாவக்கண்டு அஞ்ச வேண்டாம்; எதார்த்தமாக ஏற்றுக்கொள்ளுங்கள். சாவைச் சந்திக்கத் தயாராகுங்கள்.

கிரேக்க தத்துவஞானி சாக்ரடீஸ் அவரின் இறப்பு நமக்கு ஒரு பாடமாக திகழ்கிறது. அவருக்கு எதிராக “இளைஞர்களை தவறாக வழிநடத்துதல்” மற்றும் “கடவுள்களை மதிக்காதது” என்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அவருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. ஒரு விஷச் செடியைக் குடித்து இறக்க வேண்டும். சாக்ரடீஸ் பயப்படவில்லை, தப்பிக்க வாய்ப்பு இருந்தும் மறுத்தார், அமைதியாக நண்பர்களுடன் பேசிக்கொண்டே இருந்தார். அவரது சீடர்கள் நேரத்தை நீட்டிக்க அனுமதி பெற்றனர். என்றாலும் அவர் இறக்க விரும்பினனார். அவர் விஷத்தை குடித்த பிறகு: உடல் மெதுவாக உறைந்து கொண்டது, கால்களில் இருந்து மேலே நோக்கி உணர்வு குறைந்தது, இறுதியில் அமைதியாக உயிர் நீங்கினார். “இறப்பை அனுபவித்து வாழ வேண்டும்” என்பதன் அர்த்தம். மரணம் ஒரு முடிவு அல்ல; அது ஒரு மாற்றம்.

2. மரணத்தின் வலியைப் பகிர அழைப்பு:

  • இன்றைய முதல் வாசகத்தில் இஸ்ரேல் மக்கள் பாபிலோனுக்கு கடத்தப்பட்ட போது, இறைவாக்கினர் எசேக்கியேலும் அவர்களோடு பயணிக்கிறார். 
  • மகிழ்ச்சியான தருணங்களில் மட்டுமல்ல! தங்கள் சொந்த நாட்டை விட்டு, வலியோடு புறப்பட்ட போதும் அடிமைகளோடு அடிமைகளாக அவரோடு பயணிக்கிறார் இறைவாக்கினர்.

 உங்கள் நண்பர்களாக இருந்தாலும் உறவுகளாக இருந்த போதும், அவர்களுடைய மகிழ்ச்சியான பயணத்தில் நீங்கள் இணைந்திருந்தது போன்று, இறப்பை நோக்கிய வலியான பயணத்திலும்  உங்கள் உடனிருப்பை உறுதி செய்ய வேண்டும்.  உங்கள் எதிரிகளாகவே இருந்தாலும், நோயாளிகளாக இருந்தால் எள்ளி நகையாடக் கூடாது.

நற்செய்தியில், "இயேசு கண்ணீர்விட்டு அழுதார்", என வாசிக்கக் காண்கிறோம். கடவுளாய் இருந்தும் ஏன் மானிடனுக்காய் அழுகிறார்? அது நமக்கு ஒரு பாடம்:

மரணத்தின் முன் கண்ணீர் பலவீனம் அல்ல; அது அன்பின் மொழி. சாவு வீட்டில் "நான் இருக்கிறேன்" என்று ஆறுதல் கூறுகிறார்.

“மீண்டும் உள்ளம் குமுறியவராக இயேசு கல்லை அகற்றி விடுங்கள்” என்று கட்டளையிடுகிறார். புதுமைகள் செய்பவர் கல்லை புரட்டிப் போட ஏன் மற்றவரை அழைக்க வேண்டும்? 

ஆண்டவராகிய கடவுள் நாம் எதைச் செய்ய இயலுமோ அதை செய்ய நமக்கு அழைப்பு  கொடுக்கிறார். கல்லை அகற்றுவது நம்மால் இயலக்கூடியது. கட்டுக்களை அவிழ்வது என்பது நம்மால் நிகழக்கூடியது. நமக்கு இயன்றதை நாம் செய்ய வேண்டும்; அதற்கு அப்பாற்பட்டதை கடவுள் செய்வார்.

இன்று நம் சமூகத்தில்:

  • மரணத்தருவாயில் இருப்பவர்களுடன் உடன் இருப்பது, அவர்களுக்காக ஜெபிப்பது
  • அவர்களை தெருக்களிலும், முதியோர் இல்லங்களிலும் கைவிடாமல் கவனிப்பது

இவை எல்லாம் கடவுள் நமக்கு கொடுத்த பணி. அந்த ஹரிஷின் பெற்றோர்களைப் போன்று மரணத்தின் விளிம்பு வரை நம்மால் எதை எதை முடியுமோ அவற்றை பணிவிடை செய்து மரணம் தருவாயில் இருப்பவர்களுக்கு நம்பிக்கையும் ஆறுதலையும் கொடுக்க வேண்டும்.

 “அருகில் நின்று அழுவது தான் மனிதத்தின் உயர்ந்த மொழி.”


3. உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே

இயேசு மார்த்தாவிடம் கூறுகிறார்: “உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே.” மார்த்தா நம்பிக்கை வெளிப்படுத்துகிறார்: “ஆம் ஆண்டவரே, நீரே மெசியா!”

இயேசு கல்லறையைத் திறக்கக் கூறியதும், மக்கள் “ஆண்டவரே நான்கு நாள் ஆயிற்று! நாற்றம் அடிக்குமே" என்கிறனர். எபிரேய நம்பிக்கையின் அடிப்படையில், இறந்த ஒருவருடைய ஆன்மா அவரை சுற்றி மூன்று நாட்கள் இருக்கும் என்பது நம்பிக்கை. அந்த மூன்றாவது நாள் கடந்த பிற்பாடு அந்த ஆன்மா அந்த உடலை விட்டு வேறு எங்காவது சென்றுவிடும். ஏனென்றால் உடலுடைய முகம் மாற தொடங்கும். இந்த உடல் மீதும், உறவுகள் மீதும் அதீத பற்று கொண்ட மனித ஆன்மாக்கள் இவ்வுலகில் சுற்றி சுற்றி வருமாம். 

ஆனால் ஆண்டவர் இயேசு மேல நம்பிக்கை வைக்கிற ஆன்மாக்கள் அந்த ஆண்டவரிலே இளைப்பாறுதல் அடையும். 

நம்முடைய வாழ்வு பாவம் காரணமாக, எவ்வளவு நாற்றம் அடிக்க கூடியதாக இருந்தாலும், அவர் நம் அருகில் வருகின்றார் நமக்கு வாழ்வும், உயிரும் தருகின்றார். பாவங்களை மீட்டெடுக்கிறார்! காயங்களை குணமாக்குகிறார் !

ஆம்! எப்பேர்பட்ட நாற்றத்தையும், நறுமணமாக்க வல்லவர் நம் இயேசு. 

என்னில் நம்பிக்கை கொள்பவன் இறப்பின் வாழ்வான் என்றவர்

நமக்கு நித்திய வாழ்வை அளிக்கிறார்.

Popular Posts