3 மே 2026 திப 6:1-7. 1 பேது 2:4-9. யோவா 14:1-12.
இன்றைய உலகம் வேகத்தின் உலகம். எதுவும் உடனே கிடைக்க வேண்டும் என்பதே நம் மனநிலை.
Indian Premier League: முன்பெல்லாம் கிரிக்கெட்டில் 5 நாள் டெஸ்ட் போட்டிகள் நடந்தன. பொறுமையுடன் விளையாடி, முடிவை காத்திருக்க வேண்டும். பிறகு 50 ஓவர் போட்டி வந்தது. இப்போது 20 ஓவர் போட்டி — ஐபிஎல். சில மணி நேரத்தில் முடிவு தெரிந்துவிட வேண்டும். காத்திருக்க யாருக்கும் நேரமில்லை.
அதேபோல், வீட்டிலும் மாற்றம். முன்பு அம்மாக்கள் நாட்களாக உழைத்து மசாலா, மாவு, வடகம் எல்லாம் தயாரிப்பார்கள். இன்று எல்லாம் ரெடிமேட். ஒரு ஸ்விக்கி ஆர்டர் கிளிக்கில் உணவு வீட்டுக்கு வருகிறது.
இது ஒரு உண்மை: நாம் பொறுமையை இழந்து வருகிறோம். காத்திருப்பது யாருக்கும் பிடிப்பதில்லை. வெற்றி, தோல்வியை அவசரமாக அனுபவிக்க எத்தனிக்கிறோம். இதே மனநிலையை நற்செய்தியிலும் பார்க்கிறோம்.
- தோமாவின் கேள்வி: “ஆண்டவரே, நீர் எங்கே போகிறீர்?”
- பிலிப்பு சொல்கிறார்: “தந்தையை எங்களுக்குக் காட்டும்.”
இவர்கள் கேள்விகள் பொறுமையின்மையையும், அவசரத்தையும் காட்டுகிறது. “எங்களுக்கு உடனே புரிய வேண்டும்… எளிதாகக் காட்டுங்கள்…” என்ற மனநிலை. இதை ஆன்மிக அவசரம் என்று சொல்லலாம்.
ஆனால் இயேசு விரும்புவது? இறையனுபவம் என்பது ஒரு “இன்ஸ்டன்ட் அனுபவம்” அல்ல. அது ஒரு நீண்ட பயணம். அவரோடு இருந்து, பயணித்து அனுபவிப்பது. இறைவனை அறிதல் என்பது: நீடித்த நிலையான அனுபவம். பேருந்தில் ஏறி இன்னொரு பக்கம் இறங்கிவிடும் குறுகிய அனுபவம் அல்ல.
நம் இறைவேண்டலும் இறையனுபவமும் அவசரம் கலந்ததாக இருக்கிறது.
என்னுடைய ஆன்மிகத்தந்தை Domenico Sagginario, , san Giovanni Rotondo நகரத்தைச் சார்ந்தவர், புனித பியோ அவர்களின் பீடச் சிறுவராக இருந்தவர். ஒவ்வொரு திருப்பலியின் போதும் ஐந்து காயங்கள் Stigmata, எட்டிப்பார்ப்பாராம். அப்போது தந்தை பியோ அவருக்கு கூறியது, "Do not be curious to know everything, you will know slowly by experieces".
வாழ்க்கை எப்போதுமே ஸ்வீட்டாக, ரொமாண்டிக்காக இருப்பதில்லை. பொறுமையின்மையையும், அவசரத்தையும் கைவிட்டு, வாழ்க்கையின் பயணத்தில் "வழியும் உண்மையும் வாழ்வுமான" என்றுஇயேசுவைஅனுபவிக்கவேண்டும்.
முதல் வாசகம் : தொ.கிறிஸ்தவர்கள் வாழ்வு, ‘அவர்கள் ஒரே உள்ளமும் ஒரே உயிருமாய் இருந்தனர். எல்லாம் அவர்களுக்குப் பொதுவாக இருந்தது’ என ரொம்ப ரொமான்டிக்காகவே வாசிக்கின்றோம். ஆனால், தொடக்கக் கிறிஸ்தவர்களின் தேனிலவு முடிந்தது என்பதை இன்றைய முதல் வாசகம் நமக்குச் சொல்கிறது. முதல் முதலாக குழுமத்தில் சண்டை, குழப்பம், பிரச்சினை ஆரம்பிக்கிறது:
(அ) உணவு பிரச்சினை: (முதல் பிரச்சினை சாப்பாட்டில்தான்) உணவு பரிமாறப்படுவதில் பாரபட்சம். கிரேக்க மொழி பேசுவோர் தங்களுடைய கைம்பெண்கள் அன்றாடப் பந்தியில் முறையாகக் கவனிக்கப்படவில்லை’.
(ஆ) மொழிப் பிரச்சினை: எபிரேய மொழி பேசுவோர் தங்களையே மேன்மையானவர்கள் என நினைத்து கிரேக்க மொழி பேசுவோரைத் தாழ்வாக நடத்துகின்றனர்.
(இ) முணுமுணுத்தல்: ஏன் முணுமுணுத்தல்? பிரச்சினையை சொல்வதற்கு எங்கெல்லாம் வடிகால் இல்லையோ அங்கெல்லாம் மக்கள் முணுமுணுப்பார்கள்.
கடவுளது வார்த்தையின்படி: இந்தப் பிரச்சினையைக் கேள்விப்படுகின்ற திருத்தூதர்கள் தீர்வுகாண முயல்கின்றார்கள்: ‘நாங்கள் கடவுளது வார்த்தையைக் கற்பிப்பதை விட்டுவிட்டு பந்தியில் பரிமாறும் பணியில் ஈடுபடுவது முறையல்ல!’ ஞானமிகு வார்த்தைகள் இவை. ‘நாங்களோ இறைவேண்டலிலும் இறைவார்த்தைப் பணியிலும் நிலைத்திருப்போம்’ என்றனர், உங்களின் பிரச்சினைகளின் தீர்வை விவிலியத்தில் தேடுங்கள்.
பிறர்மேல் கைகளை வைத்து இறைவேண்டல்: தங்கள் கைகளை தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்மேல் வைத்து இறைவனிடம் வேண்டுகின்றனர். அவ்வளவுதான். பிரச்சினை தீர்ந்தாயிற்று. எந்த ஒரு பேப்பர் ஒர்க்கும் இல்லாமல், எந்த ஒரு மீட்டிங்கும் இல்லாமல், எந்த ஒரு அவைக்குறிப்பும் இல்லாமல் இனிதே நடந்தேறுகிறது கூட்டம். தீர்வு கண்டாயிற்று. பெரியவர்கள் பிறர்மீது கைகள் வைத்து தூயஆவி செபத்தை செபிக்கப்பழகுங்கள்.
இந்த நிகழ்வு நமக்குச் சொல்லும் பாடம் என்ன? இந்த நிகழ்வு திருத்தூதர்கள் வாழ்விலும், தொடக்கத் திருஅவை வாழ்விலும் ஒரு சறுக்கலாக அல்லது, ஒரு சிறிய இறப்பாக இருந்திருக்க வேண்டும். இருந்தாலும் புத்துயிர் பெற்று எழுகிறார்கள். ஏனெனில் அவர்கள், இன்றைய இரண்டாம் வாசகம் (காண். 1 பேது 2:4-9), அவர்கள், ‘தேர்ந்தெடுக்கப்பட்ட வழிமரபினர், அரச குருக்களின் கூட்டத்தினர், தூய மக்களினத்தார், அவரது உரிமைச் சொத்தான மக்கள்.’
நம் வாழ்வில் நாம் சந்திக்கும் பிரச்சினைகள் நம்முடைய தற்காலிக இறப்புக்களே. இவற்றை நாம் எப்படி எதிர்கொள்வது? பொறுமையின்மையையும், அவசரத்தையும் கைவிட்டு, வாழ்க்கையின் பயணத்தில் "வழியும் உண்மையும் வாழ்வுமான" என்றுஇயேசுவைஅனுபவிக்கவேண்டும். நற்செய்தி வாசகத்தில், ‘வழியும் உண்மையும் வாழ்வும் நானே’ என அறிக்கையிடுகிறார் இயேசு.
இது யோவான் நற்செய்தியில் இயேசு பயன்படுத்தும் ஆறாவது ‘நானே’ வாக்கியம். இந்த வாக்கியத்தில் மூன்று கூறுகள் உள்ளன: ‘வழி’ (கிரேக்கத்தில், ‘ஹோடோஸ்’), ‘உண்மை’ (கிரேக்கத்தில், ‘அலேத்தேயா’), ‘வாழ்வு’ (கிரேக்கத்தில், ‘ஸ்ஷோயே’).
- வழி என்றால் பாதை மட்டும் அல்ல, மாறாக, வாய்ப்பும் தீர்வும்கூட. நம் வாழ்வுபாதையை நெறிப்படுத்துகிறார் இயேசு.
- உண்மை என்றால் இருத்தல் மற்றும் அறிதல். நம் கடந்த, நிகழ், எதிர் காலங்களை....
- வாழ்வு என்றால் இயங்குதல் மற்றும் வளர்தல். நம் இயக்கத்தையும் வளர்ச்சியையும் நெறிப்படுத்துகிறார் இயேசு.
தொடக்கத் திருஅவை தன்னில் எழுந்த விருந்துப் பிரச்சினையால் இறந்து மீண்டும் உயிர் பெற்றது. பிரச்சினைகள் தீர்ந்ததால் ஆழமான அமைதி வந்தது. நம்முடைய பங்கில்/குடும்பத்தில் பிரச்சனைகள் தீர இயேசுவை வழியாக/உண்மை/வாழ்வாக பற்றிக்கொள்ளல் வேண்டும்.

