Monday, June 15, 2026

திருமணம் ஒரு திருவருட்சாதனம்

திருமணம் ஒரு திருவருட்சாதனம்

இன்றைய உலகில் திருமண வாழ்க்கை பல சவால்களை எதிர்கொள்கிறது: வேலைப் பளு, பொருளாதார அழுத்தம், சமூக ஊடகங்களின் தாக்கம், நேரமின்மை, கருத்து வேறுபாடுகள், அதிகரித்து வரும் விவாகரத்து, தனிமனித மைய சிந்தனை போன்றவை. இவற்றை மனதில் கொண்டு, திருமண தம்பதியருக்கு மிகவும் தேவையான மூன்று முக்கிய பண்புகள்:

திருமணம் எப்படி பார்க்கப்படுகிறது? 

பீட சிறுவர்கள் ஏக்கமாக, வயதானவர்கள் பாவமாக  உங்களை பார்க்கிறார்கள்

எனக்கு வாழ்நாளில் கிடைக்காத, ஏன் உங்களுக்கே இரண்டாவது வாய்ப்பில்லாத நிலையில் இது கிடைக்கிறது. 


1. Understanding: 

திருச்சபையின் போதனையின்படி, திருமணம் ஒரு திருவருட்சாதனம். அது வெறும் சமூக ஒப்பந்தமோ சட்டப்பூர்வ உடன்படிக்கையோ அல்ல; மாறாக, இறைவனால் ஏற்படுத்தப்பட்ட புனித உடன்படிக்கை.

ஒன்றித்தன்மை (Unity): ஒரு ஆணும் ஒரு பெண்ணும் ஒருவருக்கொருவர் முழுமையாக அர்ப்பணித்து, வாழ்நாள் முழுவதும் ஒரே துணையாக வாழ்வது. “இருவர் ஒரே உடலாயிருப்பர்.” (மத் 19:5)

பிரிக்க முடியாத தன்மை (Indissolubility)

திருமண பந்தம் வாழ்நாள் முழுவதும் நிலைத்திருக்கும். “கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும்.” (மத் 19:6)


கிறிஸ்துவுக்கும் திருச்சபைக்கும் அடையாளம் (Sign of Christ’s Love for the Church)

கணவன்-மனைவியின் அன்பு, கிறிஸ்து தனது திருச்சபையை நேசித்த அன்பின் அடையாளமாக அமைகிறது.


2. Sacrifice: அன்பான உரையாடல் (Healthy Communication)

  • ஒருவரை ஒருவர் கவனமாகக் கேட்பது.
  • உணர்வுகளையும் தேவைகளையும் வெளிப்படையாகப் பகிர்வது.
  • குற்றம் சாட்டாமல் பேசுவது.
  • தவறான புரிதல்களை உடனடியாகச் சரிசெய்வது.
  • பொறுமையும் மன்னிப்பும் (Patience and Forgiveness)
  • யாரும் நிறைவானவர்கள் அல்ல என்பதை ஏற்றுக்கொள்வது.
  • சிறிய குறைகளை பெரிதுபடுத்தாமல் இருப்பது.
  • மனக்கசப்புகளைச் சேர்த்து வைக்காமல் மன்னிப்பது.
  • மீண்டும் மீண்டும் உறவைப் புதுப்பிப்பது.


3. Affection: அன்பின் உடன்படிக்கை (Covenant of Love) அர்ப்பணிப்பும் விசுவாசமும் (Commitment and Fidelity)

கவர்ச்சியான அன்பிலிருந்து பரஸ்பரமான அன்பிற்கு மாற வேண்டும். 

* உணர்ச்சிகளை மட்டும் அல்ல, முடிவையும் அடிப்படையாகக் கொண்ட அன்பு.

* எந்தச் சூழலிலும் உறவைப் பாதுகாக்கும் மனநிலை.

* குடும்பத்தை முன்னுரிமையாகக் கருதுதல்.

* இறைவனை மையமாக வைத்து வாழ்தல்.

*  உயிரை உருவாக்குவதற்கான திறந்த மனம் (Openness to Life)


Friday, June 12, 2026

Sacred Heart of Jesus

இயேசுவின் திருஇருதயம், பெருவிழா


இச 7:6-11. 1 யோவா 4:7-16. மத் 11:25-30

கடவுள் அன்பாய் இருக்கிறார்

24 அக்டோபர் 2024 அன்று திருத்தந்தை பிரான்சிஸ் ‘திலெக்ஸித் நோஸ்’ (‘அவர் நம்மை அன்பு செய்தார்’) என்னும் தன் நான்காவது சுற்றுமடலை வெளியிட்டார். இச்சுற்றுமடலின் நோக்கம் என்ன? (அ) இயேசு கிறிஸ்துவின் அன்பைப் புரிந்துகொள்தல். (ஆ) மேலோட்டமான இந்த உலகத்தை விடுத்து நம் வாழ்வின் மையத்துக்குக் கடந்துசெல்தல். (இ) இயேசுவின் தூய்மைமிகு இதய பக்திமுயற்சி நமக்கு விடுக்கும் சமூக கடமைகளைப் புரிந்துகொள்தல்.

(அ) பெருவிழா வரலாற்றுப் பின்புலம்

1. விவிலியத்தில் ஈட்டியால் குத்தித் திறக்கப்பட்ட விலா குறித்தும் இயேசுவின் இதயம் குறித்துக்காட்டும் அன்பு பற்றியும் பல திரு அவை குருக்கள் எழுதியுள்ளார்கள்.

2. இயேசுவின் திருஇதய பக்தியும் வணக்கமும் பரவலாக்கம் செய்ததில் முக்கியமானவர் புனித மார்கரெட் மேரி அலகாக் (1647-1690) ஆவார். பல முறை இவருக்குத் தோன்றுகிற இயேசு தம் இதயத்தைத் திறந்து காட்டி, திருஇருதய பக்தி முயற்சிகளைத் தொடங்குமாறு அறிவுறுத்துகிறார். மனம் திரும்புதல், நற்கருணை ஆராதனை, முதல் வெள்ளிக் கிழமைகளில் நற்கருணை, திருஇதயத்துக்கு அர்ப்பணித்தல், திருஇதயப் படம் நிறுவுதல் என பல பக்தி முயற்சிகள் உருவாகின்றன.

3. திருத்தந்தை 9-ஆம் பயஸ் (1856) அகில உலக திருஅவையின் கொண்டாட்டமாக இத்திருவிழாவை அறிவித்தார். திருத்தந்தை 13-ஆம் லியோ (1899) அகில உலகத்தையும் இயேசுவின் திருஇதயத்துக்கு அர்ப்பணம் செய்தார். திருத்தந்தை 11-ஆம் பயஸ் ‘இரக்கம்நிறை மீட்பர்’ என்னும் சுற்றுமடல் (1928) வழியாக இயேசுவின் திருஇதய பக்தி முயற்சியின் பொருளை உலகறியச் செய்தார்.

(ஆ) திருஇதய பக்தி முயற்சிகள்

1. படம் அல்லது திருவுருவம் நோக்குதல்: இயேசுவின் திருஇதயப்படத்தை அல்லது திருவுருவத்தை நோக்கி, அதில் காணும் அடையாளங்களை தியானித்தல்.

2. இயேசுவின் திருஇதயத்துக்கு தனிநபர் மற்றும் குடும்பங்களை அர்ப்பணம் செய்தல்: தங்களுடைய வாழ்வு இயேசுவின் திருஇதயத்தை மையமாகக் கொண்ட வாழ்வாக இருக்கும் என்று உறுதி ஏற்றல்.

3. பரிகாரங்கள் செய்தல்: நம் குற்றங்கள் அல்லது தவறுகளால் இயேசுவின் திருஇதயத்தை மனம் நோகச் செய்த நேரங்களுக்காகப் பரிகாரம் செய்தல்.

4. திருஇதய செபமாலை: திருஇதய செபமாலை, மன்றாட்டு மாலை செபித்தல்.

(இ) திருஇதயம் நமக்கு முன்வைக்கும் பாடங்கள்


2. அன்பே சிவம்: அன்பு என்னும் செயல்

அவர் தம் மக்கள்மேல் கொண்ட அன்பினால் அவர்களைப் பாதுகாத்து வழிநடத்துகிறார். கடவுளின் அன்பு என்பது வெறும் உணர்வு அல்ல, மாறாக, நம் உள்ளத்தில் உணரும் ஒரு சிந்தனை அல்ல. மாறாக, நமக்கு வெளியே காணக்கூடிய அளவில் நிகழ்ந்தேறும் செயல். நாம் வாழ்வில் ஏற்படும் மாற்றம். எவ்வளவு பெரிய மனிதர்களாக இருந்தாலும் அன்புக்காக ஏங்குகிறோம். வலிமையான யானை, அன்பு ஒருவனை மாற்றுகிறது ஒருவனை குணப்படுத்துகிறது. காரணம் அன்பே அன்பே கடவுள். 

2. அன்பு நம்மை காயப்படுத்தும்: நம் அன்புக்குத் தூண்டுதல்

அவர் நிபந்தனை இல்லாமல் நம்மை அன்பு செய்கிறார். அவரைக் காயப்படுத்தினாலும் அவர் நம்மை அன்பு செய்கிறார். இயேசுவின் இதயத்தில் முட்கள் நமக்குள் இருந்து வழிந்து ஓடும் ரத்தம் போர் வீரர்கள் படைவீரர்கள் சிலுவையிலும் அவர் குணப்படுத்துகிறார். தண்ணீரும், இரத்தமும்.

நாம் பாவம் செய்யும்போது கடவுளை காயப்படுத்துகிறோம் கடவுளுடைய இதயத்துக்கு எதிராக குற்றம் செய்கிறோம். 


3. தொடர் கற்றல்

நம் சுமைகளை அகற்றுவதாக வாக்களிக்கிற இயேசு அவருடைய சுமைகளை நம்மேல் ஏற்றுமாறு நம்மை அழைக்கிறார் (நற்செய்தி வாசகம்). ‘என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள்’ என்கிறார். நாம் சொற்களைப் பயன்படுத்திப் பேசும்போது நம் மொழி வளர்வதுபோல, அன்பு என்னும் செயலும் நாம் தொடர்ந்து செய்யும்போது நமக்கு எளிதாகிறது.

நீங்களும் ஆண்டவரைப் போல அன்பு செய் கடவுளைப் போல அன்பு செய்ய வேண்டும் ஒருவரை ஒருவர் அன்பு செய்கிற நிபந்தனை இல்லாமல் அன்பு செய் காயப்படுத்துகிறது உங்களுக்கு உபத்திரம் செய்பவர்களுக்கு அன்பு செய்யுங்கள். 

Saturday, May 23, 2026

Pentecost Sunday (Holy Spirit)

பெந்தகோஸ்தே (தூய ஆவி) ஞாயிறு
திப 2:1-11. 1 கொரி 12:3-7, 12-13. யோவா 20:19-23

இன்று நம் திருஅவையின் பிறந்த நாளாகிய தூய ஆவியாரின் பெருவிழாவைக் கொண்டாடி மகிழ்கிறோம். “தூய ஆவியார்” என்ற இந்த பெருவிழா நம்முள் பல கேள்விகளை எழுப்புகிறது: யார் இந்த தூய ஆவியார்?

அன்னை மரியாள், புனித அந்தோணியார், புனித சூசையப்பர் போன்ற புனிதர்களைப் பற்றி நாம் அறிந்திருக்கிறோம். ஆனால், “தூய ஆவியார் யார்?” என்ற கேள்விக்கு திருஅவையில் பலருக்கும் தெளிவான புரிதல் இல்லை. ஊர்வலம், சப்பரம், நவநாள் திருப்பலிகள் கிடையாது. இதைத்தான் பவுல் எபேசு நகரில் எதிர்கொண்டார்: “தூய ஆவி என்னும் ஒன்று உண்டு என்றுகூட நாங்கள் கேள்விப்பட்டதில்லையே!” (காண். திப 19:1-10).

இன்று ‘பெந்தகோஸ்தெ’ என்றழைக்கப்படும் பிரிந்த சபையினர் தூய ஆவியானவரை மட்டுமே இறைவனாகக் கருதுகின்றனர். பொட்டு, பூ அணியக் கூடாது, வெள்ளைஆடைதான் அணிய வேண்டும் என்று சொல்லி, ‘நீங்கள் அக்கினி அபிஷேகம் பெற்றுவிட்டீர்களா?’ என்று கேட்கிறார்கள். மற்றும் ‘அருங்கொடையாளர்கள்’ (‘கரிஸ்மேடிக்ஸ்’) என்று தங்களையே, நம் திருஅவை மரபிற்குள் இருந்துகொண்டே ஒரு மாற்று வழிபாட்டு முறையையும் முன்வைக்கின்றனர். ஆனால், திருஅவை நமக்குக் கற்றுத்தருவது என்னவெனில், தூய ஆவியார் மூவொரு இறைவனின் மூன்றாம் நபர்; வெறும் சக்தி அல்ல, உயிருள்ள இறைநபர்.

விவிலியத்தில் ‘தூய ஆவி’ என்ற பெயர் 4 நிலைகளில் கையாளப்படுகின்றது:

‘ஆண்டவரின் ஆவி.’ எபிரேயத்தில் ‘ருவா’. இந்த ‘ஆவி’ தான் படைப்பின் தொடக்கத்தில் நீரின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தவர் (தொநூ 1:2). ஆதாமின் உடலுக்குள் ஊதப்பட்டவர். அரசர்கள் மற்றும் இறைவாக்கினர்கள்மேல் இறங்கி வந்தவர். இயேசுவின் திருமுழுக்கின்மேல் அவர்மேல் இறங்கி வந்தவரும், அவரை பாலைநிலத்திற்கு அழைத்துச் சென்றவரும், ‘ஆண்டவரின் ஆவி என்மேல் உளது’ என்று இயேசு தொழுகைக்கூடத்தில் சொன்னவரும் இவர்தான். ‘இயேசுவின் ஆவி.’ தன் உயிர்ப்புக்குப் பின் தன் சீடர்கள் மேல் ஊதுகின்ற இயேசு, ‘தூய ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்’ (யோவா 20:22) என்கிறார். 

தூய ஆவியார் பற்றிய சில புரிதல்கள்:

1. தூயஆவியார் ஒரு நபர், அவர், அவர் உங்களுக்கு ஆறுதல் தருவார். ‘மூவொரு இறைவனில் ஓர் ஆள்.’ தன் இறுதி இராவுணவில் சீடர்களின் பாதங்களைக் கழுவிவிட்டு அவர்களோடு தொடர்ந்து உரையாடும் இயேசு (காண். யோவா 13 -1 6) அவர்களிடம், ‘தூய ஆவியானவர்’ என்னும் துணையாளரைத் தான் அனுப்பவதாகவும், அவர் அவர்களுக்கு திடமளிப்பார், கலங்க விட மாட்டார். 

2. ‘அனைவருக்கும் தூய ஆவி:  முதல் ஏற்பாட்டில் தூய ஆவி சிலருக்கே வழங்கப்பட்டார்: அரசர்கள், இறைவாக்கினர்கள் போன்றோருக்கு. ஆனால் பெந்தகோஸ்தே நாளில், திருத்தூதர்களும் அன்னை மரியாளும் தூய ஆவியைப் பெற்றுக்கொள்கிறார்கள். பின்னர் எல்லா மக்கள்மேலும் ஆவியார் அருளப்படுகிறார். இனி ஆவியார் ஒரு குறிப்பிட்டவருக்கே அல்ல; கடவுளைத் தேடும் அனைவருக்கும்.

3. ‘அவர் ஒரு மனிதர் - துணையாளர்: தூய ஆவியார் சாதாரண உதவிகள் மட்டுமல்ல! பாவச்சோதனைகள் வரும்போது துணையாக இருக்கிறார். “நீங்கள் ஊனியல்புக்கு ஏற்ப வாழ்ந்தால், சாகத்தான் போகிறீர்கள்; ஆனால், தூய ஆவியின் துணையால், உடலின் தீச்செயல்களைச் சாகடித்தால், நீங்கள் வாழ்வீர்கள்”. (உரோ 8:13). இச்சைகள் போதைகள், சோதனைகள், பாவ உணர்வுகள், தற்கொலை எண்ணங்கள் வரும்போது, துணையாளரின் உதவி நமக்கு தேவை. நான் ஜிம், மூச்சுபயிற்சி, ஜாக்கிங் செய்கிறேன், எனக்கு சோதனைகள் வராது என்று சொல்ல இயலாது. தூயஆவியார் தைரியம் தருகிறார். அடைக்கலம் தரும்போது,, கலக்கம் இல்லை. நமக்குள்ளே எழும் எண்ணங்கள் பல நேரங்களில் நம்மை சிறைப்படுத்துகின்றன. நமக்கு வெளியே நோக்கி தொடர்ந்து நகர நம்மை அழைக்கிறார் ஆவியார்.

4. கற்றுத் தருபவர் தூயஆவியார்:  தூய ஆவியாரின் கொடைகள் ஞானம், அறிவு, புத்தி. எந்த யுனிவர்சிட்டியும் சென்று கல்வி கற்றிராத பேதுரு, தூய ஆவியின் வல்லமையால் முதல் பிரசங்கத்தில் மூவாயிரம் பேரையும், இரண்டாவது பிரசங்கத்தில் ஐயாயிரம் பேரையும் மனமாற்றத்திற்கு அழைத்தார். இதுவே தூய ஆவியாரின் செயல். இசை, மொழிகள், குணமாக்கும் வரங்கள், ஊழியத்திற்கான திறமைகள்—இவை அனைத்தும் தூய ஆவியாரின் அருள்கொடைகள். (இசைக்கருவிகள் மீட்டுவதற்கு, புதிய மொழிகள் கற்றுக்கொள்வதற்கு, குணமாக்கும் வல்லமை பெறுவதற்கு) எத்தனை ஊழியத்திற்கான வரங்கள்,  யோவான் 16:8-ல் இயேசு கூறுகிறார்: “தூய ஆவியார் வந்து பாவம், நீதி, தீர்ப்பு பற்றிய உலகத்தின் தவறான கருத்துகளை எடுத்துக்காட்டுவார்.” இன்று “பாவம் என்று ஒன்றே இல்லை” என்று சிலர் கூறுகின்றனர். மற்றவர்களின் தவறுகளை மட்டும் பார்க்கிறோம்; நம்மை ஆராய்வதில்லை. ஆனால் எது பாவம், எது நன்மை என்பதை உணர்த்துபவர் தூய ஆவியார்.

5. தூய ஆவி உண்மையை நோக்கி வழினடத்துவார்: உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது அவர் முழு உண்மையை நோக்கி உங்களை வழிநடத்துவார். யோ 16:13. உலகம் பொய் நிறைந்த உலகம். உண்மையை நோக்கி வழிநடத்துவார். விண்ணகம் பற்றிய, நரகம் பற்றிய உண்மைகள் நமக்கு உணர்த்துவார்.  

தூய ஆவியைப் பெற்றவர்கள் எப்படி வாழ வேண்டும்? ஆவியின் பிள்ளைகளாக வாழ வேண்டும். 

மனமாற்றம் அடைய வேண்டும். பேதுருவின் முதல் பிரசங்கத்திற்குப் பிறகு 3000 பேர் மனம் மாறினர். உண்மையான மனமாற்றம் இல்லாமல் ஆவிக்குரிய வாழ்வு இல்லை. வெளிவேடம் அல்ல, உள்ளார்ந்த தூய்மை தேவை. பல ஆண்டுகளாக நம்மை கட்டிப்போட்டிருக்கும் பாவங்கள், பழக்கங்கள், வெறுப்புகள் ஆகியவற்றிலிருந்து விடுதலை பெற வேண்டும். சிலர் தன்னைப்பற்றியேபேசி கொண்டு இருப்பர். எதுவும் சரியில்லை. குறைகள், திருவிழா, யாருக்கும் வழினடத்த தெரியவில்லை. ஆவியின் வெளிப்பாடு உள்ள சகோதரர்கள் அவர்களுக்கு அனைத்து உண்மைகளும் தெரியும், நாம் பாவத்துக்குள்ளே இருக்கும்போது, திருச்சபை - பாவ சங்கீர்த்தனம்.  அசுத்த வாழ்க்கை மறையும்போது ஆவியானவர் தூய்மை அடையும். பல ஆண்டுகள் பாவம் கட்டுக்களாக இருக்கும். 

இறுதியாக, தூய பவுல் குறிப்பிடும் “உடலின் செயல்கள்” — “பரத்தைமை, கெட்ட நடத்தை, காமவெறி, சிலைவழிபாடு, பகைமை, பொறாமை, சீற்றம், பிரிவினை, குடிவெறி...” ஆகியவற்றை விட்டு, “அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, பரிவு, நன்னயம், நம்பிக்கை, கனிவு, தன்னடக்கம்” (காண். கலா 5:22-23) ஆகிய ஆவியின் கனிகளை நோக்கி நாம் நகர வேண்டும்.

நற்செய்தி வாசகத்தில் உயிர்த்த ஆண்டவர் தம் சீடர்கள்மேல் ஊதி, “தூய ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்!” என்கிறார். படைப்பின் தொடக்கத்தில் கடவுள் மனிதனுக்குள் உயிர் ஊதியது போல, இங்கே இயேசு தம் சீடர்களைப் புதிய படைப்பாக மாற்றுகிறார்.

மூவொரு இறைவனில் நாம் அடிக்கடி மறந்துவிடும் நபர் தூய ஆவியார். இந்த ஆவியாரின் துணையை வேண்டி நாம் மன்றாடுவோம். ஏனெனில், இவர்மூலமாகவே நாம் கடவுளோடு உரையாடுகிறோம்; இவர்மூலமாகவே கடவுளின் உண்மையையும் அன்பையும் அனுபவிக்கிறோம்.

Saturday, May 9, 2026

பாஸ்கா காலம் 6ஆம் ஞாயிறு

ஞாயிறு, 10 மே 2026 - திப 8:5-8,14-17. 1 பேது 3:15-18. யோவா 14:15-21

வெகுவிரைவில் நம் திருஅவையில் இரண்டு முக்கியமான பெருவிழாக்களை நாம் கொண்டாட இருக்கிறோம்: Feast of the Ascension - இயேசுவின் விண்ணேற்றப் பெருவிழா மற்றும் Pentecost-  தூயஆவியாரின் பெருவிழா. இன்றைய வாசகங்கள் இந்த இரு பெருவிழாக்களையும் அர்த்தமுள்ள முறையில் கொண்டாட நம்மைத் தயாரிக்கின்றன.

இப்போது பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான காலம். பல பள்ளிகள் 100 சதவீதத் தேர்ச்சி பெற்றுள்ளன. அதிக மதிப்பெண் பெற்றவர்கள் பாராட்டப்படுகிறார்கள். சில சமயங்களில்  "கடைசி பெஞ்சில் இருக்குமானவர்கள் எப்பவுமே மக்காக இருப்பர் என்ற எண்ணம் ஆசிரியர்களின் கம்பளைண்ட் மட்டுமல்ல, சமுதாயத்தில் இருக்கிறது". ஆனால் அது எப்போதும் உண்மையல்ல. முதல் மதிப்பெண் பெறுவதும், வாழ்க்கையில் உயர்வதும் கடின உழைப்பாலும், இறைவனின் அருளாலும் தான் நிகழ்கிறது.

இன்றைய முதல் வாசகம் கடைஇனத்தவர் என்று கருதப்பட்ட “சமாரியர்களின் பெந்தகோஸ்து” என்று அழைக்கப்படுகிறது. யூதர்களால் தாழ்த்தப்பட்டவர்களாகவும், அந்நியர்களாகவும் கருதப்பட்ட சமாரியர்கள்மீதும் தூய ஆவியானவர் இறங்குகிறார். இதன் மூலம் கடவுளின் அருள் சிலருக்கே சொந்தமானது அல்ல; அனைவருக்குமானது என்பதை திருவிவிலியம் வெளிப்படுத்துகிறது.

திருவிவிலியத்தில் தூயஆவியாரின் வருகை மூன்று முக்கியக் குழுக்களிடம் நிகழ்வதை பார்க்கிறோம்: யூதர்கள், சமாரியர்கள் மற்றும் புறவினத்தார். இன்றைய முதல் வாசகத்தில், பிலிப்பு சமாரியாவுக்கு அனுப்பப்படுகிறார். கவனிக்க வேண்டியது என்னவென்றால், அவர் திருத்தூதர் அல்ல; திருத்தொண்டர். ஆனால் அவர் இறைவார்த்தையை அறிவிப்பதோடு மட்டுமல்லாமல், மக்களின் நோய்களையும் குணமாக்குகிறார். அதாவது, நற்செய்தி அறிவித்தலும், நலம் தருதலும் இணைந்து செல்கின்றன.

ஒருகாலத்தில் சமாரியர்களும் யூதர்களே. ஆனால் அசிரியர்கள் சமாரியாவைக் கைப்பற்றியபின் கலப்பினத் திருமணங்கள் ஏற்பட்டதால், யூதர்கள் அவர்களை “தூய்மையை இழந்தவர்கள்” என்று கருதி சமயத்திலும் சமூகத்திலும் ஒதுக்கினர். அதனால் யூதர்களுக்கு நற்செய்தி அறிவிப்பதை திருத்தூதர்கள் மேற்கொண்டாலும், சமாரியர்களிடம் பிலிப்பு (திருத்தொண்டர், தூதர் அல்ல!) அனுப்பப்படுகிறார். ஒருவேளை இந்த திருத்தொண்டருடைய பணி ஒரு தோல்வியாக மாறும் என்று நினைத்திருக்கலாம். ஆனால் கடவுள் அங்கே செயல்படுகிறார். கடவுளுடைய வார்த்தை ஏற்றுக்கொள்ளப்பட்டது. சமாரியர்கள் இறைவார்த்தையை ஏற்றுக்கொள்கிறார்கள். திருத்தூதர்கள் பேதுருவையும் யோவானையும் அங்கே அனுப்புகிறார்கள். அவர்கள் கைகளை வைத்து செபிக்கும்போது தூய ஆவியார் அவர்கள்மேல் இறங்குகிறார்.

இதன் மூலம் ஒரு பெரிய மாற்றம் நிகழ்கிறது. “தூய ஆவியார் யூதர்களுக்கே” என்ற எண்ணம் உடைக்கப்படுகிறது. தூய ஆவியார் அனைவருக்குமான கொடை. யாரையும் ஒதுக்கவோ, தடுக்கவோ நமக்கு அதிகாரமில்லை. கடவுள் அனைவருக்கும் பொதுவானவர்.

இரண்டாம் வாசகம் தொடக்க திருச்சபையில் இருந்த துன்புறுத்தல்களை (persecution) நினைவுபடுத்துகிறது. ஆனால் அந்த சூழலிலும், “பணிவோடும், மரியாதையோடும், பொறுமையோடும்” வாழ அழைக்கிறது. “நன்மை செய்து துன்புறுவது மேல்” என்று பேதுரு எடுத்துரைக்கிறார்.

இன்றைய சமூகத்திலும் இதை நாம் பார்க்கிறோம். கருத்து வேறுபாடுகள் காரணமாக மக்கள் ஒருவரை ஒருவர் இழிவாக நடத்துகிறார்கள். எ.கா: தேர்தல் முடிவுகள் நேரத்தில் பார்க்கிறோம். மரியாதை குறைவாக நடத்துவது, பழிப்பது. கருத்து வேறுபாடுகள் என்பது வேறு, மரியாதை என்பது வேறு, அவரவர் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப ஒரு கட்சியை ஆதரிக்கிறோம், ஆனால் மற்றவர்களை மரியாதையோடு நடத்தவேண்டும். கிறிஸ்தவர்களின் அடையாளம் மரியாதை, பொறுமை, கனிவு ஆகியவையாக இருக்க வேண்டும்.

நற்செய்தி வாசகமான யோவான் 14:15-21, விண்ணேற்றமும் பெந்தகோஸ்தும் நோக்கி நம்மை வழிநடத்துகிறது. “நான் உங்களை திக்கற்றவர்களாக விடமாட்டேன்” என்று இயேசு கூறுகிறார். அதாவது, “நான் உங்களை அனாதைகளாக விடமாட்டேன்” என்று உறுதியளிக்கிறார். இங்கே இயேசு தந்தை, தாம், மற்றும் தூயஆவியார் என மூவொரு இறைவனைப் பற்றிய ஒரு ஆழமான வெளிப்பாடாகும்.

இயேசு தூயஆவியாரை “உண்மையை வெளிப்படுத்தும் ஆவி” என்று அழைக்கிறார். சில நேரங்களில் நமக்கு உண்மை மறைக்கப்படுகிறது. எது சரி, எது தவறு என்று புரியாமல் போகிறது. அப்போது தூயஆவியார் உண்மையை வெளிச்சமிட்டு காட்டுகிறார். ஆனால் உலகம் அவரை ஏற்றுக்கொள்ள முடியாது என்று இயேசு சொல்கிறார். ஏனெனில் உலகம் பல நேரங்களில் இருளிலும் பாவத்திலும் வாழ்கிறது. இருள் நிறைந்த இடத்தில் ஒளி நிலைக்க முடியாததுபோல, பாவம் நிறைந்த மனதில் தூயஆவியாரின் செயல் தடைபடுகிறது.

“துணையாளர்” என்பதற்காக பயன்படுத்தப்படும் கிரேக்கச் சொல் Paracletos. இதன் பொருள்: உடனிருந்து வழிநடத்துபவர், ஆறுதல் தருபவர், பாதுகாப்பவர், நலம் தருபவர்.

நற்செய்தியின் மையக்கருத்தை ஒரு எடுத்துக்காட்டின் மூலம் புரிந்துகொள்ளலாம். குட்டியானையாக இருக்கும்போது ஒரு சிறிய சங்கிலியில் கட்டப்பட்ட யானை, பெரியதாக வளர்ந்த பிறகும் அந்த சங்கிலியை உடைக்க முயற்சிக்காது. ஏன்? “இதிலிருந்து நான் வெளியே வர முடியாது” என்ற எண்ணம் அதன் மனதில் பதிந்துவிடுகிறது. இதையே “Self-limiting belief” என்று கூறுகிறார்கள்.

அதேபோல திருத்தூதர்களும் ஆரம்பத்தில் “தூயஆவியார் யூதர்களுக்கே” என்று நினைத்தனர். ஆனால் கடவுள் அந்த வரம்புகளை உடைத்தார். சமாரியர்கள்மீதும் தூயஆவியார் இறங்கினார். இதுவே திருச்சபையின் புதிய விழிப்புணர்வு.

நம்முடைய வாழ்க்கையிலும் பல வரையறைகள் இருக்கின்றன: சாதி, குடும்பப் பின்னணி, மொழி, சமூக நிலை போன்றவை. இவற்றைத் தாண்டி வெளியே வர அழைக்கப்படுகிறோம். மூன்று எளிய சிந்தனைகள்

  1. மனிதர்களை பிரிக்கும் எல்லைகளை உடைப்போம்.
  2. பணிவையும் கனிவையும் பிறருக்கு தருவோம்.
  3. நம் வாழ்க்கையின் திசையை காட்டும் தூயஆவியாரின் வழிநடத்தலை ஏற்றுக்கொள்வோம்.

அப்போது நாம் இந்த உலகில் வாழும்போதே உள்ளார்ந்த உயிர்ப்பைப் பெற்றவர்களாக வாழ முடியும்.

ஒருமுறை ஒரு ஆயர் குழந்தைகளுக்கான திருப்பலிக்குப் பிறகு சிறிய மறைக்கல்வி நிகழ்ச்சி நடத்தினார். அவர் ஒரு ஆப்பிளை கையில் பிடித்துக் கொண்டு கேட்டார்: “கடவுள் எங்கே இருக்கிறார் என்று சொன்னால் இந்த ஆப்பிளை உனக்குக் கொடுப்பேன்.”

ஒரு சிறுமி சிரித்துக்கொண்டு சொன்னாள்: “ஆயரே, கடவுள் இல்லாத இடம் எங்கே என்று நீங்கள் சொல்லுங்கள்; நான் உங்களுக்கு இரண்டு ஆப்பிள் தருகிறேன்!”

இதுதான் ஞானம். தூயஆவியாரின் ஏழு கொடைகளில் ஒன்று ஞானம். ஞானம் என்பது அதிக புத்தகங்கள் படிப்பது மட்டும் அல்ல. கடவுள் எங்கும் இருக்கிறார் என்பதை உணர்ந்து, நல்லதைத் தேர்ந்தெடுத்து வாழும் மனமே உண்மையான ஞானம். “கடவுள்பயம் — அதுவே ஞானத்தின் தொடக்கம்.”

அன்பானவர்களே, தூயஆவியானவர் நாம் சம்பாதிக்கும் ஒன்றல்ல. அவர் கடவுள் இலவசமாக அளிக்கும் அருட்கொடை. பெந்தகோஸ்து பெருவிழாவை எதிர்நோக்கி வாழும் இந்த நாட்களில், இன்றைய வாசகம் ஒரு வரலாற்று நிகழ்வை மட்டும் நினைவூட்டவில்லை; அது நம்முடைய வாழ்விலும் தொடர்ந்து நடைபெற வேண்டிய ஒரு ஆன்மிக அனுபவமாக இருக்க வேண்டும்.

Saturday, May 2, 2026

பாஸ்கா காலம் ஐந்தாம் ஞாயிறு

3 மே 2026

திப 6:1-7. 1 பேது 2:4-9. யோவா 14:1-12.

இன்றைய உலகம் வேகத்தின் உலகம்.
எதுவும் உடனே கிடைக்க வேண்டும் என்பதே நம் மனநிலை.

Indian Premier League: முன்பெல்லாம் கிரிக்கெட்டில் 5 நாள் டெஸ்ட் போட்டிகள் நடந்தன. பொறுமையுடன் விளையாடி, முடிவை காத்திருக்க வேண்டும். பிறகு 50 ஓவர் போட்டி வந்தது. இப்போது 20 ஓவர் போட்டி — ஐபிஎல். சில மணி நேரத்தில் முடிவு தெரிந்துவிட வேண்டும். காத்திருக்க யாருக்கும் நேரமில்லை.

அதேபோல், வீட்டிலும் மாற்றம். முன்பு அம்மாக்கள் நாட்களாக உழைத்து மசாலா, மாவு, வடகம் எல்லாம் தயாரிப்பார்கள். இன்று எல்லாம் ரெடிமேட்.
ஒரு ஸ்விக்கி ஆர்டர் கிளிக்கில் உணவு வீட்டுக்கு வருகிறது. 

இது ஒரு உண்மை: நாம் பொறுமையை இழந்து வருகிறோம். காத்திருப்பது யாருக்கும் பிடிப்பதில்லை. வெற்றி, தோல்வியை அவசரமாக அனுபவிக்க எத்தனிக்கிறோம். இதே மனநிலையை நற்செய்தியிலும் பார்க்கிறோம். 

  1. தோமாவின் கேள்வி: “ஆண்டவரே, நீர் எங்கே போகிறீர்?”
  2. பிலிப்பு சொல்கிறார்: “தந்தையை எங்களுக்குக் காட்டும்.”

இவர்கள் கேள்விகள் பொறுமையின்மையையும், அவசரத்தையும் காட்டுகிறது. “எங்களுக்கு உடனே புரிய வேண்டும்… எளிதாகக் காட்டுங்கள்…” என்ற மனநிலை. இதை ஆன்மிக அவசரம் என்று சொல்லலாம்.

ஆனால் இயேசு விரும்புவது? இறையனுபவம் என்பது ஒரு “இன்ஸ்டன்ட் அனுபவம்” அல்ல. அது ஒரு நீண்ட பயணம். அவரோடு இருந்து, பயணித்து அனுபவிப்பது. இறைவனை அறிதல் என்பது: நீடித்த நிலையான அனுபவம். பேருந்தில் ஏறி இன்னொரு பக்கம் இறங்கிவிடும் குறுகிய அனுபவம் அல்ல. 


நம் இறைவேண்டலும் இறையனுபவமும் அவசரம் கலந்ததாக இருக்கிறது. 

என்னுடைய ஆன்மிகத்தந்தை Domenico Sagginario, , san Giovanni Rotondo நகரத்தைச் சார்ந்தவர், புனித பியோ அவர்களின் பீடச் சிறுவராக இருந்தவர். ஒவ்வொரு திருப்பலியின் போதும்  ஐந்து காயங்கள் Stigmata, எட்டிப்பார்ப்பாராம். அப்போது தந்தை பியோ அவருக்கு கூறியது, "Do not be curious to know everything, you will know slowly by experieces". 

வாழ்க்கை எப்போதுமே ஸ்வீட்டாக, ரொமாண்டிக்காக இருப்பதில்லை. பொறுமையின்மையையும், அவசரத்தையும் கைவிட்டு, வாழ்க்கையின் பயணத்தில் "வழியும் உண்மையும் வாழ்வுமான" என்றுஇயேசுவைஅனுபவிக்கவேண்டும். 

முதல் வாசகம் : தொ.கிறிஸ்தவர்கள் வாழ்வு, ‘அவர்கள் ஒரே உள்ளமும் ஒரே உயிருமாய் இருந்தனர். எல்லாம் அவர்களுக்குப் பொதுவாக இருந்தது’ என ரொம்ப ரொமான்டிக்காகவே வாசிக்கின்றோம். ஆனால், தொடக்கக் கிறிஸ்தவர்களின் தேனிலவு முடிந்தது என்பதை இன்றைய முதல் வாசகம் நமக்குச் சொல்கிறது. முதல் முதலாக குழுமத்தில் சண்டை, குழப்பம், பிரச்சினை ஆரம்பிக்கிறது: 

(அ) உணவு பிரச்சினை: (முதல் பிரச்சினை சாப்பாட்டில்தான்) உணவு பரிமாறப்படுவதில் பாரபட்சம். கிரேக்க மொழி பேசுவோர் தங்களுடைய கைம்பெண்கள் அன்றாடப் பந்தியில் முறையாகக் கவனிக்கப்படவில்லை’. 

(ஆ) மொழிப் பிரச்சினை: எபிரேய மொழி பேசுவோர் தங்களையே மேன்மையானவர்கள் என நினைத்து கிரேக்க மொழி பேசுவோரைத் தாழ்வாக நடத்துகின்றனர்.

(இ) முணுமுணுத்தல்: ஏன் முணுமுணுத்தல்? பிரச்சினையை சொல்வதற்கு எங்கெல்லாம் வடிகால் இல்லையோ அங்கெல்லாம் மக்கள் முணுமுணுப்பார்கள். 

கடவுளது வார்த்தையின்படி: இந்தப் பிரச்சினையைக் கேள்விப்படுகின்ற திருத்தூதர்கள் தீர்வுகாண முயல்கின்றார்கள்: ‘நாங்கள் கடவுளது வார்த்தையைக் கற்பிப்பதை விட்டுவிட்டு பந்தியில் பரிமாறும் பணியில் ஈடுபடுவது முறையல்ல!’ ஞானமிகு வார்த்தைகள் இவை. ‘நாங்களோ இறைவேண்டலிலும் இறைவார்த்தைப் பணியிலும் நிலைத்திருப்போம்’ என்றனர், உங்களின் பிரச்சினைகளின் தீர்வை விவிலியத்தில் தேடுங்கள். 

பிறர்மேல் கைகளை வைத்து இறைவேண்டல்: தங்கள் கைகளை தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்மேல் வைத்து இறைவனிடம் வேண்டுகின்றனர். அவ்வளவுதான். பிரச்சினை தீர்ந்தாயிற்று. எந்த ஒரு பேப்பர் ஒர்க்கும் இல்லாமல், எந்த ஒரு மீட்டிங்கும் இல்லாமல், எந்த ஒரு அவைக்குறிப்பும் இல்லாமல் இனிதே நடந்தேறுகிறது கூட்டம். தீர்வு கண்டாயிற்று. பெரியவர்கள் பிறர்மீது கைகள் வைத்து தூயஆவி செபத்தை செபிக்கப்பழகுங்கள். 

இந்த நிகழ்வு நமக்குச் சொல்லும் பாடம் என்ன? இந்த நிகழ்வு திருத்தூதர்கள் வாழ்விலும், தொடக்கத் திருஅவை வாழ்விலும் ஒரு சறுக்கலாக அல்லது, ஒரு சிறிய இறப்பாக இருந்திருக்க வேண்டும். இருந்தாலும் புத்துயிர் பெற்று எழுகிறார்கள். ஏனெனில் அவர்கள், இன்றைய இரண்டாம் வாசகம் (காண். 1 பேது 2:4-9), அவர்கள், ‘தேர்ந்தெடுக்கப்பட்ட வழிமரபினர், அரச குருக்களின் கூட்டத்தினர், தூய மக்களினத்தார், அவரது உரிமைச் சொத்தான மக்கள்.’

நம் வாழ்வில் நாம் சந்திக்கும் பிரச்சினைகள் நம்முடைய தற்காலிக இறப்புக்களே. இவற்றை நாம் எப்படி எதிர்கொள்வது? பொறுமையின்மையையும், அவசரத்தையும் கைவிட்டு, வாழ்க்கையின் பயணத்தில் "வழியும் உண்மையும் வாழ்வுமான" என்றுஇயேசுவைஅனுபவிக்கவேண்டும். நற்செய்தி வாசகத்தில், ‘வழியும் உண்மையும் வாழ்வும் நானே’ என அறிக்கையிடுகிறார் இயேசு. 

இது யோவான் நற்செய்தியில் இயேசு பயன்படுத்தும் ஆறாவது ‘நானே’ வாக்கியம். இந்த வாக்கியத்தில் மூன்று கூறுகள் உள்ளன: ‘வழி’ (கிரேக்கத்தில், ‘ஹோடோஸ்’), ‘உண்மை’ (கிரேக்கத்தில், ‘அலேத்தேயா’), ‘வாழ்வு’ (கிரேக்கத்தில், ‘ஸ்ஷோயே’).

  1. வழி என்றால் பாதை மட்டும் அல்ல, மாறாக, வாய்ப்பும் தீர்வும்கூட. நம் வாழ்வுபாதையை நெறிப்படுத்துகிறார் இயேசு.
  2. உண்மை என்றால் இருத்தல் மற்றும் அறிதல். நம் கடந்த, நிகழ், எதிர் காலங்களை....
  3. வாழ்வு என்றால் இயங்குதல் மற்றும் வளர்தல். நம் இயக்கத்தையும் வளர்ச்சியையும் நெறிப்படுத்துகிறார் இயேசு.

தொடக்கத் திருஅவை தன்னில் எழுந்த விருந்துப் பிரச்சினையால் இறந்து மீண்டும் உயிர் பெற்றது. பிரச்சினைகள் தீர்ந்ததால் ஆழமான அமைதி வந்தது. நம்முடைய பங்கில்/குடும்பத்தில் பிரச்சனைகள் தீர இயேசுவை வழியாக/உண்மை/வாழ்வாக பற்றிக்கொள்ளல் வேண்டும். 


Sunday, April 12, 2026

“இறை இரக்கத்தின் ஞாயிறு” (Divine Mercy Sunday)

திருத்தந்தை Pope John Paul II அவர்கள், இரண்டாயிரமாம் ஆண்டில் போலந்து நாட்டைச் சேர்ந்த புனிதர் Saint Faustina Kowalska அவர்களுக்கு புனிதர் பட்டம் வழங்கினார். அதே நாளில், பாஸ்கா காலத்தின் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமையை “இறை இரக்கத்தின் ஞாயிறு” (Divine Mercy Sunday) என்று திருச்சபை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

புனிதர் Saint Faustina Kowalska அவர்களுக்கு 1930 ஆம் ஆண்டில் இயேசுவின் திருஇருதயக் காட்சி அருளப்பட்டது. அந்தக் காட்சியின் மூலம், உலகமெங்கும் இறை இரக்கத்தின் செய்தி பரவ வேண்டுமென்று ஆண்டவர் அவரை அழைத்தார். 

உயிர்த்த இயேசு ஆண்டவருடைய திரு இதயத்தில் இருந்து வெண்மை மற்றும் சிவப்பு நிற கதிர்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. வெள்ளைக்கதிர் திருமுழுக்கையும்,  சிவப்பு  நற்கருணை திருவருட்சாதனத்தையும் குறிப்பிடுகிறது. இதனால் நாம் அறிந்து கொள்ள வேண்டியது: இயேசுவின் வேதனை நிறைந்த பாடுகளின் வழியாக நாமும் இந்த அகில உலகமும் மீட்கப்படுகின்றோம். இந்த நாளில் நாம் என்ன செய்ய வேண்டும்? ஒப்புரவு அருட்சதனம் பெற்றுக்கொண்டு, நற்கருணையை உண்டோமேயென்றால் நம்முடைய அனைத்து  நிந்தைகளுக்கும் பரிகாரம் கிட்டும். 

பெற்றோர்கள் சிறுவயதிலேயே பிள்ளைகளுக்கு கடவுளை "தண்டிக்கும் கடவுளாக" அறிமுகப்படுத்துகிறார்கள். தவறு செய்தால் கடவுள் கண்ணை குத்திவிடுவார். தீமைகள் செய்பவர்கள் நரகத்தில் எண்ணெய் கொப்பரையில் போலப்படுவர் என்று ஆயுதம் ஏந்திய கடவுளாக நாம் அறிமுகப்படுத்துகின்றோம். ஆனால் திருத்தந்தி பிரான்சிஸ் "கடவுளின் முகம் இரக்கம்" என்று அழைக்கிறார். 

கடவுளின் இரக்கம் எப்படி வெளிப்படுகிறது? என்பதை இன்றைய வாசகங்கள் தெளிவுபடுத்துகின்றன. குறிப்பாக நற்செய்தி, கடவுள் அவரது இதயத்தை நம் விரலால் தொடக்கூடிய அளவுக்கு நெருங்கி வருகிறார் என்று சொல்கிறது. பலவீனம் பலவீனங்கள் கொண்ட இந்த மானுட உலகை, கடவுள் நேசிக்கிறார், ஏற்றுக்கொள்கிறார். அவர்களை தம்முடைய இதயத்தைத் தொட, இதயத்தில் இருந்து அருளை பெற்றுக்கொள்ள அழைக்கிறார். 

இயேசு, குறைபாடுகள், பலவீனங்கள், அச்சம், கலக்கம், பயம் கொண்ட சீடர்கள் மேல், ஊதி, தூய அனுப்புகிறார், அவர் அவர்கள்மேல் ஊதி, “தூய ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள். எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவை மன்னிக்கப்படா” என்கிறார். சீடர்கள் ஒருவரை மற்றொருவர் மன்னிக்க அவர்களுக்கு அதிகாரம் கொடுக்கிறார். பாவ சங்கீர்த்தனம் என்னும் திருவருட்சாதனம் மீது நான் நம்பிக்கை வைக்க வேண்டும். திருத்தந்தையே பாவ அறிக்கை செய்கிறார்.  ஆகவே நாம் அனைவரும் பாவிகள். நம் உடல் மன நோய்கள் பாவக்கட்டுகள் அகல நாம் பாவ மன்னிப்பு அறிக்கை செய்ய வேண்டும். பிலிப்பைன்ஸ் நாட்டில் மரணப்படுக்கையில் இருப்பவர்களுக்காக நோயிற்பூசுதல் தந்த அனுபவம். ஆகவே ஆன்மீக தயாரிப்பு அவசியம். 

திரு அவையில் எவ்வளவுதான், கூட்டு அறிக்கை அல்லது கூட்டு ஜெபத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டாலும், தனிப்பட்ட விசுவாசம், இறை நம்பிக்கை மற்றும் தனிப்பட்ட ஜெபத்திற்கு எப்போதுமே வல்லமை உண்டு . இறைவன் அதை விரும்புகிறார். இயேசுவின் சீடரான தோமையார், "அவருடைய கைகளில் ஆணிகளால் ஏற்பட்ட தழும்பைப் பார்த்து, அதில் என் விரலை விட்டு, அவர் விலாவில் என் கையை இட்டாலன்றி நான் நம்பமாட்டேன்" 

தோமா இயேசுவின் இதயத்தை தொட்டு அவரை தனிப்பட்ட அனுபவத்தினால் அடைய எண்ணுகிறார். அனுபவம் பெறுகிறார்; "என் கடவுளே! என் ஆண்டவரே! என அறிக்கையிடுகிறார். இயேசுவின் ஐந்து காயங்களும் தழும்புகளும் எதை குறிக்கின்றன? தன் நண்பர்களுக்காக உயிரைக் கொடுத்த இயேசுவின் உண்மையான அன்பை குறிக்கின்றது. (யோவான் 15:13)

உடல் காயம் மற்றும் மன காயங்களால் துன்புறும் மனிதர்களை மதிக்கிறோமா?


Wednesday, April 8, 2026

Easter Vigil

பாஸ்கா ஞாயிறு 

பாஸ்கா ஞாயிறு திருவிழிப்பு திருப்பலி, திருச்சபையில் “அனைத்து திருப்பலிகளின் தாய்” என அழைக்கப்படுகிறது. இதற்குக் காரணம், இந்த இரவில் நாம் உயிர்த்தெழுந்த ஆண்டவர் இயேசுவை விழித்திரந்து, எதிர்நோக்கி, மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம் என்பதுதான். இது சாதாரண ஒரு திருப்பலி அல்ல; இருளிலிருந்து ஒளிக்குச் செல்லும் மனித வரலாற்றின் மாபெரும் மாற்றத்தை நினைவுகூரும் புனிதமான விழிப்பு.

நேற்றைய நாள்—புனித வெள்ளி—துயரத்தின் நாள், அமைதியின் நாள், இருளின் நாள். “மூன்று மணி முதல் இருள் உண்டாயிற்று” என்று நற்செய்தி சொல்வதை நாம் கேட்டோம். அது மனிதன் பயத்தில், குழப்பத்தில், நம்பிக்கையிழந்த நிலையில் வாழ்ந்த தருணத்தை நினைவூட்டுகிறது. சீடர்களும் பயத்தில் சிதறிப்போனார்கள்; மனித உள்ளங்கள் இருளால் மூடப்பட்டிருந்தன.

ஆனால், இன்றைய நற்செய்தி வாசகத்தின் தொடக்கமே நமக்குப் புதிய நம்பிக்கையை அளிக்கிறது: “வாரத்தின் முதல் நாளில், விடியற்காலையில் பெண்கள் கல்லறையை நோக்கிச் சென்றார்கள்.” இந்த ‘விடியல்’ என்பது ஒரு சாதாரண கால குறிப்பல்ல; அது இருள் முடிந்து ஒளி பிறக்கும் தருணம். அது மரணம் முடிந்து உயிர் வெல்லும் தருணம். அது பயம் நீங்கி நம்பிக்கை எழும் தருணம்.

“ஈஸ்டர்” என்ற சொல் itself கிழக்கில் உதிக்கும் சூரியனை நினைவூட்டுகிறது. அதனால் தான் பாஸ்கா பெருவிழா ஒளியின் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. இன்றைய திருப்பலியில் நாம் அனுபவிக்கும் ஒவ்வொரு சடங்கும்—புதிய நெருப்பு, பாஸ்கா மெழுகுவர்த்தி, ஒளி பகிர்தல்—அனைத்தும் ஒரு மெய்ப்பொருளை அறிவிக்கின்றன: இருள் நிரந்தரமல்ல; ஒளியே இறுதியில் வெல்லும்.

எனவே, இந்த புனித இரவில் நாம் நினைவுகூர வேண்டியது ஒன்றே: எவ்வளவு இருள் இருந்தாலும், கடவுளின் ஒளி அதை வெல்லும். எவ்வளவு பயம் இருந்தாலும், உயிர்த்தெழுந்த கிறிஸ்து நமக்கு துணைநிற்கிறார். இந்த விழிப்பு நமக்கு ஒரு அழைப்பு—இருளில் தங்காமல், ஒளியில் நடக்கவும்; நம்பிக்கையில்லாமல் வாழாமல், உயிர்த்தெழுந்த ஆண்டவருடன் புதிய வாழ்வைத் தொடங்கவும்

கத்தோலிக்கர்களில் பலர் இயேசுவின் உயிர்ப்பை உறுதியாக நம்புகிறார்கள். அதே சமயம், இயேசுவின் உயிர்ப்பை நம்ப மறுப்பவர்களும் ஏராளமாக உள்ளனர். ஒரு நீதிமன்றத்தில் உண்மையை நிரூபிக்க “உண்மை” மட்டும் போதாது; அதற்கு தகுந்த ஆதாரங்கள், சாட்சியங்கள், ஆவணங்கள் தேவையாகின்றன. அப்போதுதான் அது நியாயமான உண்மையாக ஏற்கப்படும்.

அப்படியானால், இயேசுவின் உயிர்ப்பு எப்படி நிகழ்ந்தது என்பதை நாம் எப்படி நிரூபிக்க முடியும்? அந்த காலத்தில் இன்றையபோல் வங்கிகள், கடைகள், வீடுகள் போன்ற இடங்களில் இருக்கும் சிசிடிவி கேமராக்கள் கிடையாது. கல்லறையின் கல் எவ்வாறு உருண்டு அகன்றது? வானதூதரின் தோற்றம் எப்படி இருந்தது? அவர்கள் சொன்ன வார்த்தைகள் பதிவு செய்யப்பட்டதா? இவையெல்லாவற்றிற்கும் வெளிப்படையான ஆதாரங்களை நாம் காட்ட முடியாது.

ஆனால், நண்பர்களே, உயிர்ப்பின் உண்மை கேமராவில் பதிவாக வேண்டிய ஒன்று அல்ல; அது நம் இதயத்தில் நம்பப்பட வேண்டிய உண்மை. இந்த உண்மைக்கு வலுவான சாட்சிகள் யார் என்றால், சீடர்களே. அவர்களின் வாழ்க்கை முறை, அவர்களின் சாட்சிய வாழ்வு, அவர்கள் சந்தித்த துன்பங்களும் தியாகங்களும்—இவை அனைத்தும் உயிர்த்த இயேசுவை அவர்கள் உண்மையாக அனுபவித்ததற்கான வலுவான சான்றுகளாகின்றன. பயத்தில் ஓடியவர்கள் தைரியமான சாட்சிகளாக மாறினர்; இதுவே உயிர்ப்பின் ஆழ்ந்த சாட்சி.

இன்றைய உலகில் நாம் பல கேள்விகளுக்கான பதில்களை ChatGPT, Google, AI Gemini போன்றவற்றில் எளிதாகக் காணலாம். ஆனால் வாழ்க்கையின் ஆழமான உண்மைகள், அனுபவங்கள்—அவை இயந்திரங்களால் அல்ல, அனுபவித்த மனிதர்களால் மட்டுமே நமக்கு வெளிப்படுகின்றன

ஏசுவின் சிலுவை மரணத்திற்குப் பிறகு, சீடர்கள் கதவுகளை மூடி பயத்தில் மறைந்து இருந்தார்கள். மரணப் பயத்தால் ஓடியவர்கள் அவர்கள். ஆனால் உயிர்ப்புக்குப் பிறகு, அதே சீடர்கள் வெளியில் வந்து இறைவார்த்தையை தைரியமாக பகிரங்கமாக அறிவிப்பவர்களாக மாறினார்கள்.

பேதுரும் யோவானும் திருத்தூதர் செயல்கள் 4:20-ல் தலைமைச்சங்கத்தின் முன், குருமார்களிடம் உறுதியாகச் சொல்கிறார்கள்: “நாங்கள் கண்டதையும் கேட்டதையும் பேசாமல் இருக்க முடியாது.” உயிர்த்த ஏசுவைப் பற்றிய அவர்களின் அனுபவம் அவர்களுக்கு இந்தத் தைரியத்தை அளித்தது. இந்த வீரம் எங்கே இருந்து வந்தது? 

அவர்கள் பல துன்பங்களையும் தாங்கினர். பலர் சிறை சென்றார்கள். பவுல் குறைந்தது நான்கு அல்லது ஐந்து முறை சிறைவாசம் அனுபவித்தார். பிலிப்பியில், சீலாவுடன் சேர்ந்து அடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சேசரியாவில் சுமார் இரண்டு ஆண்டுகள் சிறையில் இருந்தார். அந்தச் சிறைவாசத்திலேயே அவர் கடிதங்களை எழுதத் தொடங்கினார். சிறையிலிருந்தபோதும் பல அதிசயங்கள் நிகழ்ந்தன; சிறைக் காவலரும் அவரது குடும்பத்தாரும் இரட்சிப்பைப் பெற்றார்கள்.

ஆகவே, உயிர்த்த ஏசுவின் அனுபவம் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. கல்லறையை நோக்கி வந்தவர்களை, அவர் கலிலேயாவை நோக்கி புறப்படச் செய்கிறார். இறப்பை நோக்கி பயத்தில் வாழ்ந்தவர்களை, புதிய வாழ்வை நோக்கி அழைக்கிறார். “கலிலேயாவுக்குச் செல்லுங்கள்” என்ற அழைப்பு, புதிய தொடக்கத்திற்கான அழைப்பாக மாறுகிறது.

“நற்செய்தியில் ‘உங்களுக்கு முன்பாக கலிலேயாவுக்கு போய்க் கொண்டிருக்கிறார் ஏசு’ என்ற வார்த்தைகளின் மூலம், ஆண்டவர் ஒரு புதிய செய்தியை அளிக்கிறார். அதாவது: “பின்சென்று பார்க்காதீர்கள்; திரும்பிப் போகாதீர்கள்; முன்னேறிக் கொண்டே செல்லுங்கள்” என்ற அழைப்பு.

ஏசு எப்போதும் முன்னேற்றத்திற்கே அழைக்கிறார். கடந்த கால வலிகள், பாவங்கள், பழிவாங்கல்கள்—இவற்றில் சிக்கிக்கொண்டு வாழ வேண்டாம் என்று அறிவுறுத்துகிறார். அவற்றை மனதில் பிடித்துக்கொண்டு இருப்பதை விட, அவற்றை விட்டுவிட்டு புதிய வாழ்க்கையை நோக்கி செல்ல வேண்டும் என்று அழைக்கிறார்.

சில நேரங்களில், நம்முடைய வாழ்க்கையில், நாமும் பழைய வாழ்க்கையின் கட்டுப்பாடுகளையும், துன்பங்களையும் விட்டுவிடாமல் பிடித்துக்கொள்கிறோம்.

ஆனால், இயேசு நமக்குக் கொடுக்கும் அழைப்பு தெளிவானது: கடந்ததை விட்டுவிட்டு, புதிய வாழ்க்கையை நோக்கி முன்னேறுங்கள். உயிர்த்த ஆண்டவர் நம்மை எப்போதும் முன்னே செல்லச் செய்கிறார்; பின்னோக்கி அல்ல

நாம் வாழ்க்கையில் “கடந்து செல்லும்” மனிதர்களாக இருக்க வேண்டும் என்ற அனுபவத்தை, இன்றைய வாசகங்கள் நமக்கு அளிக்கின்றன. குறிப்பாக, இஸ்ரவேல் மக்கள் எகிப்தில் பாஸ்கா விழாவைக் கொண்டாடிய போது, ஆண்டவரின் தூதர் “கடந்து சென்றார்” என்று நாம் வாசிக்கிறோம். அந்தக் கடத்தல் ஒரு சாதாரண நிகழ்வு அல்ல; அது விடுதலையின் தொடக்கம். அவர் கடந்து சென்றபோது, எகிப்தியர்களின் வல்லமையை முறியடித்து, இஸ்ரவேல் மக்களை பாதுகாத்தார்.

அதேபோல், செங்கடலைக் கடக்கவும் ஆண்டவர் துணையாக இருந்தார். இஸ்ரவேல் மக்களின் பார்வையில் கடல் என்பது அச்சத்தையும் தீமையையும் குறிக்கும் ஒரு அடையாளமாக இருந்தது. ஆனால் அந்தக் கடலைக் கடந்து சென்ற அனுபவத்தின் முடிவில், அவர்கள் கடவுளிலும் மோசேயிலும் நம்பிக்கை கொள்ளத் தொடங்கினார்கள்.

இதனால், “கடந்து செல்லுதல்” என்பது நம்முடைய வாழ்க்கைக்கும் ஒரு முக்கியமான அழைப்பு. துன்பங்களையும், சோதனைகளையும், தீமைகளையும் கடந்து செல்ல வேண்டும்; அவற்றில் நின்று விடக்கூடாது.

இரண்டாவது, அபிரகாம் தனது மகன் இசாக்கைப் பலியிடுவதற்காக மூரியா மலைக்கு சென்றதை நாம் நினைவுகூர்கிறோம். அது ஒரு பெரிய சோதனை. ஆனால் அவர் பின்வாங்கவில்லை; நம்பிக்கையுடன் முன்னேறினார். அதுபோல, இயேசுவும் சிலுவையைச் சுமந்து முன்னேறினார். அவர் மூன்று முறை விழுந்தார்; ஆனாலும் ஒருபோதும் பின்வாங்கவில்லை.

கடவுள், அபிரகாமுக்கு இசாக்கை மீண்டும் அளித்தது போலவே, உயிர்த்தெழுந்த இயேசுவை நமக்குக் கொடுக்கிறார். இது நமக்கு புதிய நம்பிக்கையையும் புதிய வாழ்வையும் அளிக்கிறது.

மேலும், ழைய ஏற்பாட்டில், தொடக்க நூல் 19:24-ல், சோதோம் நகரத்தை கடவுள் அழித்ததை நாம் வாசிக்கிறோம். கந்தகமும் நெருப்பும் பொழியச் செய்து அந்த நகரம் அழிக்கப்பட்டது. ஆனால் லோத்தின் குடும்பத்தாருக்கு மட்டும் ஒரு கட்டளை வழங்கப்பட்டது: “திரும்பிப் பார்க்காமல் செல்லுங்கள்” என்று. ஆனால் லோத்தின் மனைவி திரும்பிப் பார்த்தாள்; அதனால் அவள் உப்புத்தூணாக மாறினாள். ஏன் இவ்வளவு கடுமையான தண்டனை? விவிலியத்தின் பார்வையில் “திரும்பிப் பார்த்தல்” என்பது கடவுளின் இறை பராமரிப்புக்கு எதிரான பாவம்.

உயிர்த்தெழுந்த இயேசு நமக்கு ஒளியின் நாளை அளிக்கிறார்; புதிய வாழ்வை வழங்குகிறார். எனவே அவர் நமக்குக் கூறும் அழைப்பு தெளிவானது: “திரும்பிப் பார்க்காதீர்கள்.” கடந்த வாழ்க்கை, கடந்த காயங்கள், கடந்த பாவங்கள், கடந்த அவமானங்கள், தோல்விகள்—இவற்றில் தங்கிவிடாதீர்கள். நமது கடந்த காலத்தைப் பற்றி தொடர்ந்து நினைத்து, அதில் சிக்கிக்கொண்டு இருப்பதை நிறுத்த வேண்டும். வேதனையான அனுபவங்கள் நிரந்தரமானவை அல்ல; அவை தற்காலிகமானவை. அந்த வேதனைகளே நம்மை வளர்ச்சிக்குத் தள்ளும் ஒரு வலிமையாக மாறலாம்.

ஆகையால், இந்த உயிர்ப்பு பெருவிழாவில், புதிய நம்பிக்கையுடன் ஒரு புதிய தொடக்கத்தை மேற்கொள்வோம்.

அனைவருக்கும் உயிர்ப்பு பெருவிழா நல்வாழ்த்துக்கள்.



.


Popular Posts