Showing posts with label Lazzarus. Show all posts
Showing posts with label Lazzarus. Show all posts

Saturday, March 21, 2026

“வேண்டும்! மரியாதைக்குரிய மரணம்!”

தவக்காலம் ஐந்தாம் ஞாயிறு  - எசே 37:12-14. உரோ 8:8-11. யோவா 11:1-45

சமீபத்தில் இந்திய உச்சநீதிமன்றம், Harish Rana; euthanasia case என்ற வழக்கில், மாண்புடன் மரணிக்கும் உரிமையை (Right to die with dignity) நடைமுறையில் அனுமதித்தது.

வட இந்தியாவில் கல்லூரியில் படித்து வந்த 'ஹரிஷ் ரானா' என்ற இளைஞர், ஒரு விபத்தால் கோமா நிலையில் சுமார் 13 ஆண்டுகள் படுக்கையிலேயே இருந்தார். அவருடைய பெற்றோர் இறுதிவரை அன்போடு பணிவிடை செய்தார்கள். கடைசியில் எந்த முன்னேற்றமும் இல்லாத நிலையில், அவர்களுக்கு மனவேதனையோடு ஒரு முடிவை எடுக்க வேண்டிய சூழ்நிலை வந்தது: ஆம்! இந்தியாவின் முதல் கருணைக்கொலை.

இந்த நிகழ்வு நமக்கு ஒரு ஆழமான உண்மையை நினைவூட்டுகிறது. 

  • வாழ்க்கை வணக்கத்திற்குரியது; 
  • ஆனால் மரணமும் மரியாதைக்குரியது.

சமாரிய பெண்ணுக்கு வாழ்வு தரும் தண்ணீரைக் கொடுத்த இறைவன் (யோவா 3), பிறவியிலேயே பார்வையற்றவருக்கு பார்வை தந்த இறைவன் (யோவா 9)இன்றைய வாசகங்கள் பெயராக சாவை வெல்லும் வாழ்வை தருகிறார்.  இன்றைய வாசகங்கள் வழியாக அவர் தரும் பாடங்கள் 3.


1. இறப்பு என்னும் எதார்த்தத்தை ஏற்றுக்கொள்ளும் ஞானம்:

நவீனகால மனிதன் மரணத்தை வெல்ல முயற்சிக்கிறான். Elon Musk போன்றவர்கள் புதிய உலகங்களை உருவாக்க முயற்சிக்கிறார்கள். மருத்துவமும், அறிவியலும் போட்டி போட்டுக் கொண்டு மனித வாழ்வை நீட்டிக்க முயற்சிக்கிறது.

ஆனால் ஒரு உண்மை மட்டும் மாறாது: இறப்பு என்பது மனித வாழ்வின் தவிர்க்க முடியாத எதார்த்தம். இன்று நாம் அழுகை, கண்ணீர், சோகம் இல்லாத உலகத்தை கனவு காணலாம். ஆனால் அவை இல்லாத உலகம் மனித உலகமல்ல.

இயேசு இலாசருக்கு உயிர் தந்தாரே ஒழிய, அழியா வாழ்வைத்தரவில்லை. யாயிரின் மகள், இலாசர், நயீன் நகரத்து இளைஞன் இவர்கள் மூவரும் வாழ்க்கையை இரண்டாம் முறை வாழ (ரெசுசிடேஷன்) வாய்ப்பு பெற்றார்களே தவிர, அழியா வாழ்வை (ரெசுரெக்ஷன்) பெறவில்லை. 

லாசருக்கு உயிர் தந்த இறைவன், 

சாவை சந்தோஷமாக சந்திக்கிறார். சாவிற்கு சவடால் விடவில்லை, அதை வரவேற்கிறார். சில நேரங்களில் உங்களின் இதயத்திற்கு நெருக்கமானவரின் மரணம் உங்களை புரட்டிப் போடும், ஆனால் ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும்.

இன்றைய வாசகம் நமக்குத் தரும் முதல் பாடம்: சாவக்கண்டு அஞ்ச வேண்டாம்; எதார்த்தமாக ஏற்றுக்கொள்ளுங்கள். சாவைச் சந்திக்கத் தயாராகுங்கள்.

கிரேக்க தத்துவஞானி சாக்ரடீஸ் அவரின் இறப்பு நமக்கு ஒரு பாடமாக திகழ்கிறது. அவருக்கு எதிராக “இளைஞர்களை தவறாக வழிநடத்துதல்” மற்றும் “கடவுள்களை மதிக்காதது” என்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அவருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. ஒரு விஷச் செடியைக் குடித்து இறக்க வேண்டும். சாக்ரடீஸ் பயப்படவில்லை, தப்பிக்க வாய்ப்பு இருந்தும் மறுத்தார், அமைதியாக நண்பர்களுடன் பேசிக்கொண்டே இருந்தார். அவரது சீடர்கள் நேரத்தை நீட்டிக்க அனுமதி பெற்றனர். என்றாலும் அவர் இறக்க விரும்பினனார். அவர் விஷத்தை குடித்த பிறகு: உடல் மெதுவாக உறைந்து கொண்டது, கால்களில் இருந்து மேலே நோக்கி உணர்வு குறைந்தது, இறுதியில் அமைதியாக உயிர் நீங்கினார். “இறப்பை அனுபவித்து வாழ வேண்டும்” என்பதன் அர்த்தம். மரணம் ஒரு முடிவு அல்ல; அது ஒரு மாற்றம்.

2. மரணத்தின் வலியைப் பகிர அழைப்பு:

  • இன்றைய முதல் வாசகத்தில் இஸ்ரேல் மக்கள் பாபிலோனுக்கு கடத்தப்பட்ட போது, இறைவாக்கினர் எசேக்கியேலும் அவர்களோடு பயணிக்கிறார். 
  • மகிழ்ச்சியான தருணங்களில் மட்டுமல்ல! தங்கள் சொந்த நாட்டை விட்டு, வலியோடு புறப்பட்ட போதும் அடிமைகளோடு அடிமைகளாக அவரோடு பயணிக்கிறார் இறைவாக்கினர்.

 உங்கள் நண்பர்களாக இருந்தாலும் உறவுகளாக இருந்த போதும், அவர்களுடைய மகிழ்ச்சியான பயணத்தில் நீங்கள் இணைந்திருந்தது போன்று, இறப்பை நோக்கிய வலியான பயணத்திலும்  உங்கள் உடனிருப்பை உறுதி செய்ய வேண்டும்.  உங்கள் எதிரிகளாகவே இருந்தாலும், நோயாளிகளாக இருந்தால் எள்ளி நகையாடக் கூடாது.

நற்செய்தியில், "இயேசு கண்ணீர்விட்டு அழுதார்", என வாசிக்கக் காண்கிறோம். கடவுளாய் இருந்தும் ஏன் மானிடனுக்காய் அழுகிறார்? அது நமக்கு ஒரு பாடம்:

மரணத்தின் முன் கண்ணீர் பலவீனம் அல்ல; அது அன்பின் மொழி. சாவு வீட்டில் "நான் இருக்கிறேன்" என்று ஆறுதல் கூறுகிறார்.

“மீண்டும் உள்ளம் குமுறியவராக இயேசு கல்லை அகற்றி விடுங்கள்” என்று கட்டளையிடுகிறார். புதுமைகள் செய்பவர் கல்லை புரட்டிப் போட ஏன் மற்றவரை அழைக்க வேண்டும்? 

ஆண்டவராகிய கடவுள் நாம் எதைச் செய்ய இயலுமோ அதை செய்ய நமக்கு அழைப்பு  கொடுக்கிறார். கல்லை அகற்றுவது நம்மால் இயலக்கூடியது. கட்டுக்களை அவிழ்வது என்பது நம்மால் நிகழக்கூடியது. நமக்கு இயன்றதை நாம் செய்ய வேண்டும்; அதற்கு அப்பாற்பட்டதை கடவுள் செய்வார்.

இன்று நம் சமூகத்தில்:

  • மரணத்தருவாயில் இருப்பவர்களுடன் உடன் இருப்பது, அவர்களுக்காக ஜெபிப்பது
  • அவர்களை தெருக்களிலும், முதியோர் இல்லங்களிலும் கைவிடாமல் கவனிப்பது

இவை எல்லாம் கடவுள் நமக்கு கொடுத்த பணி. அந்த ஹரிஷின் பெற்றோர்களைப் போன்று மரணத்தின் விளிம்பு வரை நம்மால் எதை எதை முடியுமோ அவற்றை பணிவிடை செய்து மரணம் தருவாயில் இருப்பவர்களுக்கு நம்பிக்கையும் ஆறுதலையும் கொடுக்க வேண்டும்.

 “அருகில் நின்று அழுவது தான் மனிதத்தின் உயர்ந்த மொழி.”


3. உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே

இயேசு மார்த்தாவிடம் கூறுகிறார்: “உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே.” மார்த்தா நம்பிக்கை வெளிப்படுத்துகிறார்: “ஆம் ஆண்டவரே, நீரே மெசியா!”

இயேசு கல்லறையைத் திறக்கக் கூறியதும், மக்கள் “ஆண்டவரே நான்கு நாள் ஆயிற்று! நாற்றம் அடிக்குமே" என்கிறனர். எபிரேய நம்பிக்கையின் அடிப்படையில், இறந்த ஒருவருடைய ஆன்மா அவரை சுற்றி மூன்று நாட்கள் இருக்கும் என்பது நம்பிக்கை. அந்த மூன்றாவது நாள் கடந்த பிற்பாடு அந்த ஆன்மா அந்த உடலை விட்டு வேறு எங்காவது சென்றுவிடும். ஏனென்றால் உடலுடைய முகம் மாற தொடங்கும். இந்த உடல் மீதும், உறவுகள் மீதும் அதீத பற்று கொண்ட மனித ஆன்மாக்கள் இவ்வுலகில் சுற்றி சுற்றி வருமாம். 

ஆனால் ஆண்டவர் இயேசு மேல நம்பிக்கை வைக்கிற ஆன்மாக்கள் அந்த ஆண்டவரிலே இளைப்பாறுதல் அடையும். 

நம்முடைய வாழ்வு பாவம் காரணமாக, எவ்வளவு நாற்றம் அடிக்க கூடியதாக இருந்தாலும், அவர் நம் அருகில் வருகின்றார் நமக்கு வாழ்வும், உயிரும் தருகின்றார். பாவங்களை மீட்டெடுக்கிறார்! காயங்களை குணமாக்குகிறார் !

ஆம்! எப்பேர்பட்ட நாற்றத்தையும், நறுமணமாக்க வல்லவர் நம் இயேசு. 

என்னில் நம்பிக்கை கொள்பவன் இறப்பின் வாழ்வான் என்றவர்

நமக்கு நித்திய வாழ்வை அளிக்கிறார்.

Popular Posts