Showing posts with label FILM REVIEW. Show all posts
Showing posts with label FILM REVIEW. Show all posts

Monday, December 1, 2025

FRANKENSTEIN (2025)

இயக்குனர் Guillermo del Toroன் திரைப்படங்களின் அடிநாதமாக பரிசுத்தமான அன்பு இழையோடும். யார்யார் மீதெல்லாம் எதன் மீதெல்லாம் அன்பே வராது என்று வரையறுக்கப்பட்டதோ, அதன் மீது மட்டுமே அன்பை வாரிக்கொடுக்கும் ஒரு கதாபாத்திரம் படத்தினுள் இருக்கும். அந்தக் கதாபாத்திரம் எப்படியான அன்பிற்குள் திகழ்கிறதோ அவ்வாறாக பார்வையாளர்களை திகழ வைத்துவிடுவது Guillermo del Toroவின் மாயம். 


1818ஆம் ஆண்டு எழுதப்பட்ட நாவல் 'Frankenstein'  இன்று வரை மொத்தம் 423 முழுநீள திரைப்படங்கள், 204 குறும்படங்கள், 78 தொலைக்காட்சி தொடர்களில் இந்த நாவல் எடுத்தாளப் பட்டிருக்கிறது. இப்போது Guillermo del Toro இயக்கத்தில் ஒரு வடிவம், 

இது முற்றிலும் நாவலைத் தழுவியது என்று சொல்ல முடியாது, நாவலின் சில பகுதிகளை எடுத்து, சில மாற்றங்கள் செய்து  அதன் மீது Guillermo del Toro தன் முத்திரையைப் பதித்து இருக்கிறார். இந்த இயக்குனர் ஹாலிவுட்டின் சிறந்த இயக்குனர் என்றே சொல்வேன். The Shape of Water க்காக சிறந்த இயக்குனர் விருது பெற்றவர். 

கதை: மருத்துவர் victor Frankensteinக்கு விபரீத எண்ணம் ஒன்று உண்டாகிறது. இறந்தவர்களை உயிர்ப்பிக்க வேண்டும். பல்வேறு இறந்தவர்களின் உடலில் இருந்து ஒவ்வொரு பாகமாகப் பிரித்து ஒன்றாக இணைத்து ஒரே ஆளாக ஓர் உயிரை உண்டாக்கிவிடவேண்டும், அதற்கான ஆராய்ச்சியில் இருக்கிறார். அரசாங்கம் இதனை கடவுளுக்கு எதிரான செயல் என மறுக்கிறது. செல்வந்தர் ஒருவரின் துணையோடு இந்த ஆராய்ச்சியை செய்து ஒரு மனிதனை உண்டாக்கியும் விடுகிறார். அந்த மனிதனுக்கு இறப்பு என்பதே இல்லை. அவனை யாராலும் அழிக்கவும் முடியாது. அளப்பரிய உடல் பலத்தோடு இருக்கிறான், எல்லா காயங்களும் உடனுக்குடன் தாமாகவே ஆறிவிடுகின்றன. எந்த ஆயுதமும் அவனை சாகடிக்காது. இத்தனை ஆற்றல் இருக்கக் கூடிய ஒருவன் மனிதன் அல்ல மிருகம் என நினைக்கிறார் victor Frankenstein. தன் முயற்சி தோல்வி அடைந்து விட்டது. தன்னால் ஒரு மிருகத்தை தான் உண்டாக்க முடிகிறது. மனிதனை அல்ல என்று நினைத்து அவனை அழிக்கப் பார்க்கிறார். அவன் ஆய்வுக்கூடத்தில் இருந்து தப்பித்து, கொஞ்சம் கொஞ்சமாக வெளியுலகைப் பற்றி அறிந்து, ஒரு குழந்தை எப்படி எல்லாவற்றையும் கற்றுக்கொள்கிறதோ அவ்வாறாக கற்றுக்கொள்கிறான். கற்றுக்கொண்டு தாம் ஒரு மனிதனே அல்ல என்பதைத் தெரிந்துகொள்கிறான். 

மனிதனின் சகல உணர்வுகளோடும், தானொரு  மனிதனே இல்லை எனும் கவலையோடும், தன்னால் சாகவே முடியாது எனும் கொடூரமான உண்மையைத் தாளமுடியாமலும் தன்னை உண்டாக்கிய  victor Frankenstein- ஐ தேடித் போகிறான். "என்னால் தனிமையாக இருக்க முடியவில்லை, நீ என்னை ஏதோ விலங்குஎன நினைத்து அழிக்கப் பார்த்தாய். ஆனால் எனக்குள் மனித உணர்வுகள் இருக்கின்றன, என்னை மனிதர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், அதனால் எனக்கு என்னைப் போலவே இன்னொரு துணையை உண்டாக்கித் தா" விக்டர் மறுக்கிறார். - அப்படியெனில் நீ அழிய வேண்டும் என்னை உண்டாக்கி இந்த நிலைக்கு ஆளாக்கிய நீ, நான் அடையும் எல்லா துயரங்களையும் அடையவேண்டும். வலியை அனுபவிக்க வேண்டும். என்று விக்டரை துன்புறுத்தத் தொடங்குகிறான். ஒன்று நீ அழி. அல்லது என்னை அழித்து விடு. 

விடுதலையும் இல்லாமல் சிறையும் இல்லாமல் வாழ்கின்ற வாழ்க்கை நரகம். 

கதை இரண்டு கோணங்களாக சொல்லப் படுகிறது, ஒன்று மருத்துவர் victor Frankensteinன் கோணத்தில், அவர் எப்படி இந்த ஜந்துவை உண்டாக்கினார் அதனை எப்படி அழிக்கப்பார்த்தார் என்பது வரை, அதற்குப் பிறகு, ஜந்துவின் கோணத்தில் கதை நகர்கிறது. ஆய்வுக்கூடத்தில் இருந்து தப்பித்து வெளியுலகை அறிந்து கொண்டு, தாம் யார் என்பதை கண்டறிந்தது வரை. கதையின் போக்கில் நமக்கு ஜந்துவின் மீது பரிவு வந்துவிடுகிறது. காரணம் அவன் களங்கமற்ற மனிதனாக இருக்கிறான். அழுக்குகள் அற்ற ஆன்மாவாக இருக்கிறான். உலகின் தீங்குகள் பற்றி அறியாதவனாக இருக்கிறான். 

அவன் மீது எலிசெபத்க்கு வருகின்ற பிரியம்-காதல் புரிந்துகொள்ளக் கூடியதே! - The Shape of Waterன் எலிசா தான் நினைவுக்கு வந்தாள். (அற்புதமான இன்னொரு படம்!)

"To be lost and to be found, that is the lifespan of love." 

Wednesday, October 1, 2025

LAL SINGH CHADHA (2022)

ஒரு க்ளாசிக் படைப்பின் மண்ணுக்கேற்ற மாற்றம் 

உள்ளம் சொல்வதை உள்ளபடிச் செய்யும் உண்மையான உன்னதன் ஒருவனது வாழ்க்கையில் வெவ்வேறு காலக்கட்டங்களில் நடக்கும் சம்பவங்களின் தொகுப்புதான் 'லால் சிங் சத்தா'.

மெல்லிய இசையின் உந்துதலுடன், தள்ளாடிக்கொண்டே பலரின் புறக்கணிப்புகளையும் தாண்டி, காற்றில் மிதந்தபடியே லால் சிங் சத்தா (ஆமீர்கான்) காலில் வந்து விழுகிறது அந்த வெண் சிறகு. அந்த வெண் சிறகைப் போலத்தான் அவனது வாழ்க்கையும். ஏதோ ஓர் அறிமுகமில்லா புள்ளியில் தொடங்கி, பல புறக்கணிப்புகளைக் கடந்து இலக்கற்ற பாதைகளில் பயணித்து இறுதியில் ஓர் இடத்திற்கு வந்தடைகிறது.


வெறும் நான்கு பேரால் ஆக்கிரமிக்கப்பட்டதுதான் லாலின் உலகம். அன்பும், கருணையும், பாசமும், ஏக்கமும், ஏமாற்றமும், வலியும் நிரம்பிக் கிடக்கும் அந்த உலகத்திற்குள் நம்மையும் கைப்பிடித்து அழைத்துச் சென்று தன்னுடைய வாழ்வின் வெவ்வேறு காலக்கட்டங்களில் நடக்கும் சம்பவங்களை அழகான கதையாகத் தொகுத்து சொல்லும் படம் தான் 'லால் சிங் சத்தா'. ஹாலிவுட் க்ளாசிக் என புகழப்படும் 'ஃபாரஸ்ட் கம்ப்' படத்தின் அதிகாரபூர்வ இந்தியத் தழுவல்.

ஆரம்பத்தில் 'ஃபார்ஸ்ட் கம்ப்' படம் மறு ஆக்கம் செய்யப்படுகிறது என்ற அறிவிப்பு அப்படத்தின் தீவிர ரசிகர்களுக்குச் சற்று ஏமாற்றத்தை அளித்திருக்கலாம். காரணம், ரீமேக்குகள் பெரும்பாலும் கைகூடாத திரைமொழியால் அச்சுறுத்தக் கூடியவை. ஆனால், இந்தப் படம் ரீமேக் என கூறப்பட்டாலும், தேவையான இடங்களில் நிலப்பரப்புக்கு தகுந்தாற்போல சில காட்சிகளும், திரைக்கதையும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அந்த மாற்றங்கள் படத்தை பாதிக்காமலிருந்தது சிறப்பு.

எல்லாவற்றையும் தாண்டி, ஹாலிவுட்டிலிருந்து மிதந்து வந்த அந்த வெண்சிறகு ஆமீர்கானிடம் வந்து சேர்ந்திருக்கிறது. படத்தின் உயிரே அதன் நாயக கதாபாத்திரம்தான். அதனை தனது அப்பாவித்தனமான முகபாவனை, குழந்தைத்தனமான உடல்மொழி, வெள்ளந்திச் சிரிப்பு என 'லால் சிங் சத்தா' கதாபாத்திரத்தை மெனக்கெடலுடன் மெருகேற்றியிருக்கிறார் ஆமீர்கான். குறிப்பாக அந்தந்த காலக்கட்டங்களுக்கு தகுந்தாற்போல உடல் எடையை குறைத்தும், கூட்டியும் படத்திற்காக அவர் செலுத்தியிருக்கும் உழைப்பு பாராட்ட வைக்கிறது.ஆனால், 'பிகே' படத்தின் உடல்மொழி அவ்வப்போது எட்டிப்பார்ப்பை தவிர்க்க முடியவில்லை. பிகேவும் ஃபாரஸ்ட் கம்ப் போன்றவன் தானே.

கரீனா கபூர், மோனா சிங் இருவரின் நடிப்பும் காட்சிகளுக்கான நேர்த்தியைக் கூட்டுகின்றன. நாக சைதன்யா சிறிது நேரமே வந்தாலும், நடிப்புக்காக கூடுதல் உழைப்பைக் கொடுத்துச் சென்றிருக்கிறார். ஆனால், தென்னிந்திய கதாபாத்திரமான நாக சைதன்யாவுக்கான லட்சியத்தை நிர்ணயிக்கும்போது கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். அது தொடக்கத்தில் நகைச்சுவையுடன் அணுகப்படுகிறது. ஷாருக்கானின் சிறப்புத் தோற்றம் அப்லாஸ் அள்ளுகிறது. லெஃப்டினட் ஜெனரலாக நடித்திருக்கும் மானவ் விஜ் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்துகிறார்.

அதுல் குல்கர்னி திரைக்கதை எழுத, அத்வைத் சந்தன் படத்தை இயக்கியுள்ளார். 'ஃபாரஸ்ட் கம்ப்' படத்தைப் பார்த்தவர்களுக்கு ட்ரெயினில் கதை சொல்லத் தொடங்கும் காட்சி சற்று ஏமாற்றம். அது 'துள்ளாத மனமும் துள்ளும்' படத்தில் விஜய் கதை சொல்வதைப் போன்ற உணர்வை தட்டி எழுப்பிவிடுகிறது. அதைக் கடந்து சென்றால், சின்னச் சின்ன மாற்றங்களால் சில சர்பரைஸ்கள் உண்டு.

இங்கே சாக்லெட்டுக்குப் பதிலாக பானிபூரி முன்வைக்கப்படுகிறது. அதையொட்டி வரும், 'எங்க அம்மா சொல்லுவாங்க பானிபூரி சாப்டா வயிறு நிறையும் மனசு நிறையாது' வசனம், வாழ்க்கையை மையப்படுத்தி ஃபாரஸ்ட் கம்ப் படத்தில் எழுதப்பட்ட (Life is like a box of chocolates, you never know what you're going to get.) அழுத்தமான வசனத்தை பழிவாங்கி விடுகிறது.

தவிர, 'ஆப்ரேஷன் புளு ஸ்டார்', 'எமர்ஜென்சி', 'கார்கில் போர்', 'ரத யாத்திரை' போன்ற சென்சிடிவான வரலாற்றுச் சம்பவங்களை கவனமாக கையாண்டிருக்கின்றனர். குறிப்பாக மத மோதல்களையும், வன்முறைகளையும், உயிரைக் கொல்லும் வைரஸுடன் ஒப்பிட்டு எழுதப்பட்ட வசனம் கவனம் பெறுகிறது. அதேசமயம், முஸ்லிம் கதாபாத்திரத்தை காட்சிப்படுத்தியிருக்கும் விதம் சற்றே தடுமாற்றம். 'கடவுள் ஒண்ணு சொன்னா அத சொல்றவன் வேற ஒண்ணு சொல்றான்' என்ற வசனம் அழுத்தமாக கடந்து செல்கிறது.

ஆமீர்கான் - கரீனா இடையேயான கெமிஸ்ட்ரி ஒத்துப்போவதால் காதல் காட்சிகள் உயிர் பெறுகின்றன. கடைசி அரைமணி நேரத்தில் சேர்க்கப்பட்ட பாடல், பொறுமையாக நகரும் காட்சிகளில் மட்டும் ட்ரிம் டூலை பயன்படுத்தியிருக்கலாம்.

ஒளிப்பதிவு, விஎஃப்எக்ஸ் என தொழில்நுட்ப நேர்த்தி படத்தைப் பார்க்கும் பார்வையாளர்களான சிறந்த காட்சி அனுபவத்திற்கு உதவியுள்ளது. பிரித்தமின் பிண்ணனி இசை எமோஷனல் காட்சிகளில் காதுகளுக்குள் கரைகிறது.

ஆயிரம் சொன்னாலும் எனக்கு என்னவோ ஆங்கிலத்தின் Forrest Gump இன் Tom Hanks, Robin Wright கதாபாத்திரங்கள் கண்ணுக்குள்ளே இருக்கின்றார்கள். இந்தி படத்திற்கு நேர்மறையான விமர்சனங்கள் வந்த போதிலும், திரையரங்குகளில் பெரிய அளவில் கூட்டம் கூடவில்லை.  படத்தின் நாயகன் ஆமீர்கான் படத்தில் நடித்தற்கான ஊதியத்தை வாங்கவில்லை. இந்தியில் ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது, ஒரு க்ளாஸிக் சினிமாவை பெரிய அளவில் சிதைத்து துன்புறுத்தாமல், மண்ணுக்கேற்றபடி மாற்றியமைத்ததில் சிற் சில குறைகள் தென்பட்டாலும், 'லால் சிங் சத்தா' உஙங்கள் மனதை நிச்சயம் டிஸ்டர்ப் செய்யும். 

COLD WAR (2018)

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு சோவியத் யூனியனின் கட்டுப்பாட்டில் இயங்கும் கம்யூனிச நாடாக மாறிப் போயிருந்தது போலந்து. 

மேற்கு நாடுகள், குறிப்பாக பிரான்ஸ், இங்கிலாந்து, அமெரிக்கா அனைத்தும் “சுதந்திர ஜனநாயக நாடுகள்” எனக் கருதப்பட்டாலும், கம்யூனிச ஆட்சிகள் அவற்றை எதிரி நாடுகளாக பார்த்தன. போலந்தில் நடப்பதும் கம்யூனிச ஆட்சி என்பதால் தாமாகவே அவை போலந்துக்கும் எதிரி நாடுகள் ஆகிவிட்டன. இந்த உலக நாடுகளில் அரசியல் சூழலுக்கு இடையில் ததும்பிப் பெருகிய ஒரு காதலின் கதைதான் Cold War (2018 film) 


போர்முடிந்த பிறகு நாயகனும் அவனது மேலாளரும் சேர்ந்து போலந்து நாட்டின் நாட்டுப்புற இசையை வளர்த்தெடுக்கும் வேலையை அரசு உதவியுடன் செய்கிறார்கள். கிராமங்களில் இருக்கும் வெள்ளந்தி மனிதர்களின் இசையைக் கண்டுபிடித்து ஒரு இசைக்குழு உண்டாக்குவதுதான் நோக்கம். அப்படி தங்கள் இசைத் திறமையை வெளிக்காட்ட வந்திருப்பவர்களில் ஒருத்திதான் நாயகி. அவளைப் பார்த்த கணமே நாயகனுக்குப் பிடித்து விடுகிறது. கோடி முகங்களில் ஒரு முகம் மட்டும் உயிரின் வேரில் பூவை மலர்த்துமே அது போல முதல் பார்வை முதல் ஈர்ப்பு என இருவருக்கும் இடையில் காதல் தளும்பத் தொடங்குகிறது.

இரண்டு பேரின் முகம் மட்டும் நெருக்கமாகக் காட்சிப்படுத்தப் பட்டிருக்கும் புணர்ச்சிக் காட்சியில் ஒருவர் கண்களை ஒருவர் பார்த்துக்கொண்டு முயங்கும்  தீவிரமே அவர்களின் காதல் எத்தகையது என்று சொல்லிவிடும். 

இசைக்குழுவினரை கம்யூனிச சித்தாந்தம் பற்றியும் தலைவர்கள் பற்றியும் பாடல் பாடச் சொல்லி அரசாங்கம் அறிவுறுத்தும் போது நாயகன் எதிர்க்கிறான், மேலாளன் தனது தொழில் வளர்ச்சிக்காக ஒப்புக்கொள்கிறான். நாயகிக்கோ எப்படியாவது நாயகனோடு இந்த வாழ்நாள் முழுக்க வாழ்ந்துவிட வேண்டும். இசைக்குழுவை விட்டு நீங்கும் முடிவை நாயகன் எடுக்கிறான். 

சொன்னாற்போல அரசாங்கத்தின் கட்டளைக்கு கீழ்படிந்து இயங்கியதால் பெருவாரியான அனுகூலங்களைப் பெற்று இசைக்குழு வளர்ச்சியடைந்து பல்வேறுநாடுகளுக்குப் பயணம் செய்ய வாய்க்கிறது. அப்படியொரு வாய்ப்பில் பெர்லினில் ஒரு இசை நிகழ்ச்சி நடக்கவிருக்கிறது. இசை நிகழ்ச்சியை முடித்து விட்டு நாயகனுடன் இந்த நாட்டை விட்டே ஓடிவரச் சம்மதிக்கிறாள். எங்கு ஓடிப் போகப் போகிறார்கள் என்றால் பிரான்ஸ்க்கு. போலந்து நாட்டின் எதிரி நாட்டுக்கு.

ஆனால் குறித்த நேரத்தில் குறித்த இடத்திற்கு அவள் வரவில்லை, நாயகன் மனமுடைந்து அவன் மட்டுமே பிரான்ஸ்க்கு சென்றுவிடுகிறான். 

இருவரும் இருவேறு திசையில் வாழ நேர்கிறது. காலங்கள் ஓடுகின்றன, அவனுக்குச் சில காதலிகள் வாழ்வில் வருகிறார்கள். அவளுக்குச் சில காதலன்கள் வாழ்வில் வருகிறார்கள். ஆனாலும் அணையாத சுடராய் இந்தக் காதல் மட்டும் தப்தப் என திரிவெடிக்க உள்ளுக்குள் எரிந்தபடியே இருக்கிறது. அவள் சிறந்த பாடகியாக மாறி இருக்கிறாள், அவன் ஓர் இசையமைப்பாளனாக மாறி இருக்கிறான்

சிலகாலம் கழிந்து அவளைத் தேடிச் சென்று சந்தித்து காரணம் கேட்பான், நீ ஏன் என்று வராமல் போனாய்?

"என்னால் உன்னோடு வரமுடியாமல் போனதுக்கு மன்னித்துக்கொள், ஒருவேளை அன்று நாம் சேர்ந்து ஓடிப் போயிருந்தால் இருவருமே தோற்று இருப்போம். வாழ்விலும் சரி. கனவிலும் சரி"

என் இடம் வந்துவிட்டது இனி என்னைப் பின்தொடராதே என்று சொல்லிவிட்டுச் சிறுது தூரம் சென்று அடக்கமாட்டாமல் திரும்ப ஓடிவந்து முத்தம் தருவாள். அதுதான் அவர்கள் காதல், அவர்களால் விலகி இருக்கமுடியாது, நண்பர்கள் போலப் பழகிக்கொள்ள முடியாது, நிறைந்து இருப்பதெல்லாம் காதலின் தீவிரமும் நீ எனது நான் உனது எனும் வேட்கையும்தான். 

உலகநாடுகளின் அரசியல் சூழலால் அவர்கள் எப்போதாவது ஏதாவதொரு நாட்டில்தான் சந்தித்துக்கொள்ள முடியும். ஒருவருடத்திற்கு ஒரு முறை,  இரண்டு வருடத்திற்கு ஒரு முறை என்று தவணைமுறையில்தான் இந்தக் காதலை ஸ்பரிசிக்கமுடியும், அது தாளமாட்டாத ஆனந்தத்தைத் தருவது போலவே தாளமாட்டாத துயரையும் தருகிறது. பிரிவன் வாதையை எதிர்கொள்ள முடியாமல். எப்படியாவது இந்தக் காதலை நிர்மூலமாக்கினால் தேவலாம் என்று தோன்றும். நீ அறிமுகம் செய்துவைத்த பணக்கார திரைப்படத் தயாரிப்பாளரோடு நான் ஓர் இரவில் ஆறு முறை புணர்ந்தேன். அவன் உன்னைப் போல அல்ல, எல்லாவற்றிலும் சிறந்தவன் என்று நாயகனைச் சீண்டுவாள். போகட்டும் இந்தக் காதல் இப்படியாவது அழியட்டும். 

வெட்ட வெட்டப் பல்லாயிரம் கிளைகளாகப் பெருகும் காதல் இது. 

நாயகி போலந்துக்கு சென்றுவிட்டாள் என்று தெரிந்ததும், நாயகனும் போலந்துக்கு செல்வான். ஆனால் போலந்தைப் பொறுத்தவரை இவன் எதிரிநாட்டுக்கு தப்பிச் சென்றவன், தேசதுரோகி. கைது செய்யப்படுகிறான்.  பதினைந்து வருட சிறை தண்டனை. நாயகிக்குத் தெரிந்து சிறைக்குத் தேடிவருவாள். 

நீ ஏன் இங்க வந்த? போ போயி யாராவது உனக்கு உன் வாழ்க்கைக்கு ஏற்ற நல்ல ஆண்மகனாக தேர்ந்தெடுத்து சந்தோசமா வாழு. என்பான் 

அவனை அழுத்தமாக முத்தமிட்டுச் சொல்வாள். "அப்படி ஒருத்தன் இன்னும் பிறக்கல. நான் உன்னை வெளியில் கொண்டுவருவேன் எப்படியாவது."

இதற்குப் பிறகான இறுதி பத்து நிமிடக் கதையைச் சொல்லாமல் விடுகிறேன். அதைக் காணுங்கள். மனதைக் கரைத்து நினைவில் அகலாது நின்றுவிடக் கூடிய ஒரு காதல். 

உக்கிரமான ஒரு காதலால் இந்தப் பூமியில் நிலைத்து வாழமுடியாது. ஆத்மார்த்தமாக அது அழிந்து போகவேண்டும். 

படம் பாரத்து முடித்ததில் இருந்து மனம் முழுக்க ஒரு வெறுமையும், வெறுமை முழுக்க காதலும் நிரம்பியிருக்கிறது.

Tuesday, September 2, 2025

MUMU I HEAR YOU PAPA (2025)

2025 இல் ஒரு கொரியன் எமோஷனல் ட்ராமாவாக வெளிவந்த Mumu I hear you Papa. 

படத்தின் கதை. ஹீரோ ஒரு ஏசி மெக்கானிக். மிகவும் கஷ்டப்பட்டு தன்னுடைய குடும்பத்தை வழி நடத்தி வருகிறார். இவருடைய வேலை, சம்பள குறைவு, இவற்றெல்லாம் காரணம் காட்டி இவர் விவாகரத்து செய்கிறார் மனைவி. இவர்களுக்கு பிறந்த பெண் குழந்தை தான் Mumu, என்னை கேட்டால் படத்தின் உடைய ஹீரோயின் கதாநாயகி. 


அந்த பொண்ணுதான் சொல்லப்போனா அந்த கதையின் நாயகி. நம்ம கதாநாயகனுக்கு இந்த உலகமே தன்னுடைய பொண்ணுதான். இந்த பொண்ணுக்கு உலகமே தன்னுடைய அப்பாதான். இதுக்கு இன்னொரு முக்கியமான காரணம் நம்ம கதாநாயகனுக்கு காது கேட்காது. அதனால அவர் எதை கம்யூனிகேட் பண்ணனும் அப்படின்னு நினைச்சாலும் அதை சைகையிலயேதான் வந்து அவர் கம்யூனிகேட் பண்ணுவாரு. கதாநாயகனுக்கு தன்னுடைய மகள் ரொம்ப ரொம்ப முக்கியம். அவன் மேலதான் உயிரே வச்சிருக்கேன். நம்ம கதாநாயகனுடைய மனைவி திருப்பி வருகிறாள். "என் மகளை தயவு செஞ்சு என்கிட்டயே கொடுத்துருங்க" அப்படின்னு லீகலாக அப்ரோச் பண்ண போக இதுக்கப்புறம் இந்த கதையில என்னதான் நடந்தது இதுதான் இந்த படத்துடைய மொத்த கதையே. 

இந்த படத்தை பட் நிச்சயமாக நீங்க பார்க்கும்போது உங்களுக்கு I am Sam (2001), Deiva Thirumagal (2013) கண்ணுக்குள்ள கன்பார்மா ஓடியே தீரும். 

இந்த படத்துடைய கதாநாயகனும் அட்டகாசமாக புல் ஆப் பண்ணி இருக்கிறார். அந்த குட்டி பொண்ணு நடிப்புதானா இல்ல உண்மையாவே அவருடைய சொந்த பொண்ணா அப்படிங்கிற அளவுக்கு எனக்கு ஒரு சந்தேகம். அந்த அளவுக்கு அட்டகாசமான ஒரு பெர்பார்மன்ஸ் செம்மையாக புல் ஆஃப் பண்ணிருந்தது அந்த பொண்ணு. குறிப்பாக ஒரு ஃப்ளூட் எடுத்து அந்த பொண்ணு காது கேட்காத தன்னுடைய அப்பாவுக்கு வாசிச்சு காமிக்கிற ஒரு சீன் ஒன்னு இருக்கு நீங்க பாருங்க, யாரு பார்த்தாலும் கண்கள் எல்லாம் குளமாயிடும் நமக்கு. அந்த மாதிரி ஒரு காட்சி. .

இந்த படம் ஏற்கனவே வந்து ரெண்டு பேருமே பெஸ்ட் ஆக்டருக்கு வாங்கிட்டாங்க. இவர் ஹீரோ பெஸ்ட் ஆக்டருக்கு வாங்கிட்டாரு. அந்த குட்டி பொண்ணு பெஸ்ட் ஆக்ட்ரஸ்க்கு வாங்கிருச்சு.

படத்துடைய பேக்ரவுண்ட் ஸ்கோரிங்கமே இந்த படத்திற்கு மிகப்பெரிய பலம். ஒரு ஒரு எமோஷனல் சீக்குவன்ஸையும் பேக்ரவுண்ட் ஸ்கோரிங்ல உங்க புல் ஆஃப் பண்ண விதமே வேற அட்டகாசமாக பண்ணிருந்தாங்க. டெக்னிக்கலி இந்த கதைக்கெல்லாம் என்ன தேவையோ அது உள்ள இருந்தது. இதை தாண்டி வாய் பேச முடியாத இல்ல காது கேட்காத நபர்களுக்கு எல்லாம் நம்ம பொதுவா வந்து நிறைய பேர் நினைக்கிறது உண்டு. இப்ப இப்ப அதாவது டிஃபரண்ட்லி ஏபில்டுல கூட இப்ப ஒரு ஒரு கை இல்ல ஒருத்தருக்கு ஒரு கை இல்லைங்க இல்ல ஒருத்தருக்கு கால் இல்ல அவரால நடக்கறதுக்கு கஷ்டப்படுறாரு அப்படிங்கறவங்கள இவங்கல்லாம் எவ்வளவு கஷ்டப்படுறாங்க தெரியுமா அப்படின்னு நம்ம நினைக்கிறோம் இல்லையா ஆனா ஈவன் வாய் பேச முடியாதவங்கள் ஆகட்டும் இல்ல காது கேட்காதவங்கள் ஆகட்டும். இவங்க படுற கஷ்டம்ல்லாம் எவ்வளவுங்கிறது இந்த படத்தை பாருங்க நிச்சயமாக ஏங்க நம்ம என்னமோ நினைச்சோங்க எப்பா அப்படிங்கிற அளவுக்கு ஒருஃபீல இந்த படம் கொடுக்கும் அவங்களுக்காகவும் பேசுன ஒரு படம். அவங்க இவ்வளவு நாளா பேச முடியாத பல விஷயங்களை இந்த படத்துல படன் மூலமாக இந்த டைரக்டர் பேசி இருக்காப்பல பாருங்க உங்களுக்கு தெரியும். 

Popular Posts