Tuesday, March 31, 2026

பெரிய வியாழன் 2026

கத்தோலிக்க நாடுகளில் புனித வாரம் என்பது வெறும் விடுமுறை நாட்கள் அல்ல; அது நினைவு, குடும்பம், விசுவாசம், புதுப்பிப்பு ஆகியவற்றின் காலமாகக் கொண்டாடப்படுகிறது. பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள் அரசு விடுமுறையாக இருக்கும். பிலிப்பைன்ஸ் போன்ற கத்தோலிக்க பெரும்பான்மை நாடுகளில் இது 4–5 நாள் நீண்ட தேசிய விடுமுறையாக அமைகிறது; லத்தீன் அமெரிக்க நாடுகளில் பல இடங்களில் முழு வாரம் விடுமுறை இருக்கும். மக்கள் சொந்த ஊருக்குச் சென்று, தாத்தா பாட்டிகளைச் சந்தித்து, குடும்பத்தோடு நேரம் செலவிட்டு, யாத்திரை அல்லது சுற்றுலா அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.

ஆனால் நமக்கு - இந்த நாள் வெறும் விடுமுறை அல்ல.
நாற்பது நாள் தவம், நோன்பு, மனந்திரும்புதல் ஆகியவற்றின் உச்சநிலையை அடையும் முப்பெரும் திருவிழாவின் துவக்கம் இது (கறி, செருப்பு அணியாமல், தண்ணி அருந்தாமல்).
பெரிய வியாழன், புனித வெள்ளி, பாஸ்கா ஞாயிறு—இந்த Triduum நம் விசுவாசத்தின் இதயம்.

இன்றைய பெரிய வியாழன் திருவிழா மூன்று ஆழமான உண்மைகளை நமக்கு நினைவூட்டுகிறது:
(1) பாதம் கழுவும் சடங்கு
(2) நற்கருணை துவஙங்கப்பட்ட நாள்
(3) குருத்துவம் ஏற்படுத்தப்பட்ட நாள்

1. பாதம் கழுவும் சடங்கு:  Maundy Thursday என்ற பெயர் Mandatum என்ற இலத்தீன் சொல்லிலிருந்து வருகிறது. அதாவது “கட்டளை”.
இன்றைய நாள் இயேசு ஒரு புதிய கட்டளையைக் கொடுக்கிறார்: “நான் உங்களை அன்பு செய்ததுபோல, நீங்களும் ஒருவரை ஒருவர் அன்பு செய்யுங்கள்.” அவர் சொல்லிமட்டும் விடவில்லை; செய்தும் காட்டினார்.
சீடர்களின் காலடிகளைத் தாமே கழுவினார்.

இயேசு சீடர்கள்மேல் வைத்த ஆகச் சிறந்த அன்பின் அடையாளம்/ வெளிப்பாடு. 
அன்பு என்பது வார்த்தை அல்ல; அது மண்டியிடும் பணிவு.

நற்செய்தியில் இதற்கு முன், இயேசுவின் பாதங்களை யார் கழுவினார்?
லூக்கா 7:37–38-ல்,

“அந்த ஊரில் பாவியான ஒரு பெண்… தன் கண்ணீரால் அவரது பாதங்களை நனைத்து, தன் தலைமுடியால் துடைத்தாள்.”

யூத மரபில் பெண்ணின் தலைமுடி அவளின் கண்ணியத்தின் அடையாளம். பொதுவிடத்தில் அதை அவிழ்ப்பது மிகுந்த தாழ்மையையும், அவமானத்தையும் அதே நேரம், தன்னைத்தானே முழுமையாக ஒப்படைக்கும் அன்பையும் குறிக்கும்.
யூதப்பெண் இரண்டே இடங்களில் மட்டும்தான், தன்னுடைய கூந்தலை அவிழ்த்துவிட்டு இருக்க வேண்டும். ஒன்று, அவள் விலைமாதுவாக இருக்க வேண்டும் அல்லது கணவனுடன் இருக்கக்கூடிய அன்பான் நேரங்களில். ஆகச் சிறந்த அன்பை இயேசுவுக்கு வெளிப்படுத்துகிறார். அந்தப் பெண் அன்பினால் செய்ததை, இன்று இயேசு தம் சீடர்களுக்குச் செய்கிறார்.

லூக்கா 22:15-ல் இயேசு சொல்கிறார்: “நான் பாடுபடுவதற்கு முன், இந்த பாஸ்கா விருந்தை உங்களோடு உண்ண மிகுந்த ஆவலாயிருந்தேன்.”

யோவான் இந்தச் செயலை மிக நுணுக்கமாக விவரிக்கிறார்: “இயேசு எழுகிறார், மேலாடையை கழற்றுகிறார், துணியை இடுப்பில் கட்டுகிறார், தண்ணீர் ஊற்றுகிறார், பாதங்களை கழுவுகிறார், துடைக்கிறார்”.

இதைப்போன்ற தொடர்ச்சியான செயல்வினைகள் (transitional verbs) நல்ல சமாரியனின் உவமையிலும் (லூக் 10:34) ஒலிக்கின்றன:
அணுகுதல், காயம் கட்டுதல், தூக்கிச் செல்வது, கவனித்தல். (“ஒருவர் அருகில் வந்து அவரை அணுகி, காயங்களில் திராட்சை மதுவும் எண்ணெயும் வார்த்து, அவற்றைக் கட்டி, தாம் பயணம் செய்த விலங்கின் மீது ஏற்றி, ஒரு சாவடிக்குக் கொண்டுபோய் அவரைக் கவனித்துக் கொண்டார்”. நல்ல சமாரியனின் (லூக் 10:34)

இதன் மூலம் ஒரு ஆழமான உண்மை தெரிகிறது:
இயேசு சீடர்களின் கால்களை மட்டும் கழுவவில்லை; அவர்களின் ஈகோவையும் கழுவினார்.
பெருமை, போட்டி மனப்பான்மை, சுயநலம்—இவற்றை குணப்படுத்தினார்.

2. இன்று நற்கருணை என்னும் திருவருட்சாதனம் ஏற்படுத்தப்பட்ட நாள்:

எந்த ஒரு மொழியிலும் இல்லாத அழகு/பொருள் தமிழில் உள்ளது:

  • நற் = நல்ல, புனித, உயர்ந்த
  • கருணை = இரக்கம், அன்பு, அருள்

கிரேக்க மொழியில் Eucharistia என்பது நன்றி செலுத்துதல்.
ஆனால் தமிழில் இது இன்னும் ஆழமாகிறது: கடவுளின் அளவற்ற கருணை நமக்குள் உடலாக இறங்கும் தருணம்.

பலர் Eucharistic miracles பற்றி பேசுவார்கள். நற்கருணை புதுமைகள் மற்ற அனைத்து புதுமைகளையும் விட (மரியா மற்றும் புனித அந்தோணியார்) பெயரிலே நிறைவேற்றும் புதுமைகளைவிட மேலானது. காரணம் இங்கே ஆண்டவர் இயேசுவின் நேரடியான பிரசன்னம் செயலாற்றுகிறது. 
சமீபத்தில் Carlo Acutis பற்றிய Eucharistic miracles நூல்களும் பலரைக் கவர்ந்துள்ளன. சில நேரங்களில் மக்கள் ஐயப்படும் போது அற்புதங்கள் நிகழலாம்.

ஆனால், அன்பானவர்களே,
நாம் நம்பினாலும் நம்பாவிட்டாலும், ஒவ்வொரு திருப்பலியிலும் மிகப் பெரிய அற்புதம் நடக்கிறது. அப்பம் ஆண்டவருடைய உடலாகவும், ரசம் அவரது இரத்தமாகவும் மாறுகிறது. நம் கண்களுக்கு புலப்படாதாலும், விசுவாசக் கண்களுக்கு அது தெளிவாகத் தெரிகிறது.

“நாப்பொலியில் புனிதர் ஜென்னாரோவின் இரத்தம் (San Gennaro / St. Januarius) ஆண்டுக்கு மூன்று முறை உருகும் புதுமையை மக்கள் ஆச்சரியத்தோடு காண்கிறார்கள். நாப்பொலி பேராலயத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் முன், அந்த உறைந்த இரத்தம் திரவமாக உருகுகிறது என்று சாட்சியமளிக்கப்படுகிறது. இரத்தம் உருகினால் அருள், பாதுகாப்பு, சமாதானம் கிடைக்கும் என்று நம்புகிறார்கள். சில ஆண்டுகளில் அது உடனே உருகாமல் தாமதிக்கலாம்; அப்போது இயற்கை சீற்றங்கள் நிகழும். இது பல நூற்றாண்டுகளாக நடைபெற்று வருகிறது. அதிகாரப்பூர்வமாக 1389 முதல் இதற்கான பதிவுகள் உள்ளன. 

ஆனால் நம் ஆலயத்தில் ஒவ்வொரு திருப்பலியிலும் அதைவிட உயர்ந்த புதுமை நடக்கிறது. அங்கே இரத்தம் உருகுவது அல்ல; அப்பம் ஆண்டவரின் உடலாகவும், திராட்சை ரசம் அவரது இரத்தமாகவும் மாறுகிறது.”

நற்கருணைய 
Dine-in and Take-away அனுபவம் போல காணவேண்டும்.
ஒரு உணவகத்தில் உட்கார்ந்து சுவைப்பது போல, ஆலயத்தில் ஆண்டவரின் பிரசன்னத்தில் நற்கருணையைப் பெறலாம்.
அல்லது அதை எடுத்துச் சென்று நோயாளிகளுக்கும், வீட்டிலிருப்போருக்கும் நம்மைக் காண்போருக்கும் வழங்கலாம்.
இரண்டிலும் ஆண்டவரின் அன்பே மையம்.  ஆனால் நினைவில் கொள்ளுங்கள்:
நற்கருணை உங்களை மாற்றுகிறது; உங்களால் சமூகம் மாற்றப்படுகிறது.
இயேசுவை உட்கொண்டவர், இன்னொரு இயேசுவாக உலகில் செயல்பட வேண்டும்.

3. இன்று இயேசு குருத்துவத்தையும் ஏற்படுத்திய நாள். நற்கருணையையும் குருத்துவத்தையும் பிரிக்க முடியாது.
ஒரு குரு வெறும் நிர்வாகி அல்ல; அவர் அருட்பணியாளர் (நாங்கள் துறவிகள்) திருவருட்சாதனங்களின் பணியாளர். தாய்த் திருச்சபை ஒவ்வொரு ஆண்டும் இந்த நாளில் திருத்தைலத் திருப்பலியில் குருக்கள் தங்கள் குருத்துவ வாக்குறுதிகளை ஆயர்முன் புதுப்பிக்க அழைக்கிறது.

ஐரோப்பிய நாடுகளில் குருவாக விரும்புவரின் எண்ணிக்கை மிகமிக குறைவு. ஆகவே இன்று,
குருக்களுக்காக ஜெபியுங்கள்:

  • இளங்குருக்கள்
  • நோயுற்ற குருக்கள்
  • மறைப்பணியில் உழைக்கும் குருக்கள்
  • தனிமையில் வாடும் குருக்கள்
  • முதிய குருக்கள்

உண்மை நிகழ்வு - மறைப்பணியில் உள்ள குருக்களுக்கு நேரும் அவலங்களும், ஆபத்துகளும். Tom Uzhunnalil என்ற இந்தியாவைச் சேர்ந்த சலேசிய குரு  2016ஆம் ஆண்டு ஏமனில் Missionaries of Charity பணியாற்றிக் கொண்டிருந்தார். அங்கிருந்த மிஷனரிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி, அவரை கடத்திச் சென்றனர். சுமார் 18 மாதங்கள் அவர் சிறையில் வைக்கப்பட்டார். சித்திரவதைக்குப்பிறகு விடுவிக்கப்பட்டார். ஆனால் அவர் பின்னர் கூறிய ஒரு சாட்சி மிகவும் ஆழமானது: “என்னை உயிரோடே வைத்தது என் ஜெபம்தான்.” எந்த சூழ்நிலையிலும் அவர் நம்பிக்கையை இழக்கவில்லை. ஜெபமும், கடவுள்மீது வைத்திருந்த முழு நம்பிக்கையும் அவருக்கு பலமாக இருந்தது. இறுதியில் அவர் பாதுகாப்பாக விடுவிக்கப்பட்டார்.

மனிதர்கள் நம்மை கட்டிப்போடலாம்; ஆனால் கடவுள்மீது நம்பிக்கை கொண்ட இதயத்தை யாராலும் கட்டுப்படுத்த முடியாது.

அவர்களின் பணி ஓய்வில்லாத பணி. தன்னலமற்ற குருக்கள், எளிமையான குருக்கள், குணமளிக்கும் குருக்கள், பேயோட்டும் வல்லமை படைத்த குருக்கள், என்று அவர்கள் கடவுளின் பிரதிநிதியாக செயல்படுகின்றனர். 
கற்பித்தல், அர்ச்சித்தல், மேய்த்தல்—இந்த மூவகைப் பணி அவர்களின் வாழ்நாள் அழைப்பு.

பவுல் சொல்வது போல: “இந்தச் செல்வத்தை மண்பாண்டங்கள் போன்ற நாங்கள் கொண்டிருக்கிறோம்” (2 கொரி 4:7). அவர்களிடமிருந்து வரும் வல்லமை அவர்களுடையது அல்ல; அது கடவுளுக்கே உரியது.

இதற்குச் சிறந்த சாட்சி திருத்தூதர் பணிகள் 3:6: “வெள்ளியும் பொன்னும் என்னிடத்தில் இல்லை; ஆனால் என்னிடத்தில் உள்ளதை உனக்குக் கொடுக்கிறேன்: நாசரேத்து இயேசு கிறிஸ்துவின் பெயரால், எழுந்து நட.”

இதுவே குருத்துவத்தின் இதயம்:
தன்னிடம் உள்ள கிறிஸ்துவை பிறருக்கு அளிப்பது.

இறுதியாக, இன்றைய திருவிழாவை ஆலயத்திலே மட்டும் விட்டுவிடாதீர்கள்.
வீட்டிற்குச் செல்லும்போது,
உங்கள் தாய், தந்தை, தாத்தா, பாட்டி—அவர்களிடம் அன்பைக் காட்டுங்கள்.
அவர்களின் பாதங்களைக் கழுவ வேண்டியதில்லை;
ஆனால் அவர்களின் மனக்காயங்களை அன்பால் கழுவுங்கள்.
மன்னிப்புக் கேளுங்கள் (pardon).
நன்றி சொல்லுங்கள் (Thanks).
“நான் உங்களை நேசிக்கிறேன் (I love you)” என்று சொல்லுங்கள்.

இதுவே பெரிய வியாழனின் உண்மையான வாழ்வு. கடவுள் 3 கொடைகளைத் தந்தார்:
அன்பின் பணிவு, நற்கருணையின் அருள், குருத்துவத்தின் சேவை. இந்த மூன்றையும் வாழ்வில் செயல்படுத்தினால்,
நம் வீடு, நம் திருச்சபை, நம் சமூகம்—அனைத்தும் மாற்றமடையும்.

No comments:

Post a Comment

Popular Posts