தவக்காலம் நான்காம் ஞாயிறு 1 சாமு 16:1, 6-7, 10-13. எபே 5:8-14. யோவா 9:1-41
என்ன பார்க்கிறீர்கள் இன்று?
இன்றைய இஸ்ரயேலில் எனக்குத் தெரிவதெல்லாம்
எருசலேமின் வலிமையான கோட்டைகள் அல்ல!
உயர்ந்த, பழமையான ஆலயங்கள் அல்ல!
என்னுடைய பார்வைக்குத் தெரிவதெல்லாம் பீரங்கிகள் எழுப்பிய புகைகளும்,
அணுகுண்டுகள் உருவாக்கிய கருமேகங்களும்தான்!
இஸ்ரேலும் ஈரானும் ஒன்றுக்கொன்று முட்டிக் கொண்டிருக்க
குளிர் காய்வது அமெரிக்கப் பொருளாதாரம் மட்டும்தான்!
உரக்க பேச வேண்டிய ஐநாவும்,
உண்மையை பேச வேண்டிய உலகமும்
கைகட்டி கொண்டிருக்கின்றன!
கடவுள் இன்றைய வாசகஙங்கள் வழியாக
நம்முடைய கண்களை அகல திறந்து பார்க்க அழைக்கிறார்!
இன்றைய நவீன பார்வை:
நான் மற்றவர்களை அவர்களுடைய வெளிப்புறத் தோற்றத்தையும், காணத்தகு விதத்தில் அவர் பெற்ற வெற்றிகளை வைத்தும் அவரை பல நேரங்களில் மதிப்பிடுகிறேன். இன்று தோற்றத்திற்கு (appearance) நிறைய முக்கியத்துவம் தரப்படுகிறது: ‘நான் எப்படி இருக்கிறேன்?’ ‘ப்ரசன்ட்டபிளாக இருக்கிறேனா?’ ‘நவநாகரீகத்தின் அடையாளங்கள் என்னில் இருக்கின்றனவா?’ ‘சந்தையில் மிகவும் அண்மையில் வெளிவந்த ஸ்மார்ட்ஃபோன் என்னிடம் இருக்கிறதா?’ ‘என்னுடைய வீட்டின் அழகையும் பிரமாண்டத்தையும் பார்த்து எத்தனை பேர் வியக்கிறார்கள்?’ ‘நான் பயன்படுத்தும் காஸ்மெடிக் பொருள்கள் எனக்கு அழகு தருகின்றனவா? அவற்றை நான் மாற்ற வேண்டுமா?’ – இன்றைய உலகம் பார்ப்பதற்கு இப்படித்தான் சொல்லிக்கொடுக்கிறது. ஆனால், கடவுள் அப்படி அல்ல. கண்ணாடியைப் பார்க்க இந்த உலகம் கற்பிக்கிறது என்றால், உள்ளத்தைப் பார்க்க என்னை அழைக்கின்றார் கடவுள். என் தோலின் நிறத்தையோ, வழுவழுப்பையோ, தலைமுடியின் நிறத்தையோ, ஆளின் உயரத்தையோ அல்ல, மாறாகக என்னுடைய இதயத்தின் உணர்வுகளை, பிரமாணிக்கத்தை, நம்பகத்தன்மையைக் காண அழைக்கிறார்.
முதல் வாசகத்தின் சாமுவேல் ஆண்டவரின் எருசலேமிலிருந்த ஈசாயின் இல்லத்திற்கு கட்டளைப்படி வருகின்றார். ஆனால் அவர் பார்வையில் கோளாறு இருந்ததை கடவுள் கண்டு கொள்கிறார். ஈசாயின் முதல் மகன் எலியாபைப் பார்த்தவுடன், அவன் வாட்டசாட்டமாக செம ச்மார்ட்டாக இருக்கக் கண்டு, ‘இவனே அவன்!’ என்று சொல்லி, தைலக் குப்பியை எடுத்துக்கொண்டு ஓடுகின்றார். ஆண்டவர் குறுக்கிட்டு, ‘தம்பி! பொறு! இவனல்ல அவன்! அவனுடைய தோற்றத்தையும் உயரத்தையும் கண்டு மதிப்பிடாதே. ஏனெனில் அவனை நான் ஒதுக்கி விட்டேன். மனிதர் பார்ப்பதுபோல கடவுள் பார்ப்பதில்லை. அவர்கள் புறத்தைப் பார்க்கின்றனர். ஆண்டவரோ அகத்தைப் பார்க்கின்றார்’ என்று சொல்லி அமர்த்துகின்றார். சாமுவேல் சவுலுக்காக கொண்டாடிய துக்கத்தை மட்டுமல்ல, அவர் தன்னுடைய பார்வையையும் மாற்றிக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்துகின்றார் கடவுள். ஆண்டவருடைய பார்வை மனித புறத்தை ஊடுருவிப் பாய்கிறது. காணக்கூடியவற்றைத் தாண்டி காண முடியாதவை நோக்கிப் பயணிக்கும் அவருடைய பார்வை மனித இதயத்திற்குள் நுழைந்து அங்கே இருப்பதை ஆராய்கிறது. தாவீதைக் கடவுள் தெரிந்துகொள்வதன் பொருள் இதுதான். மேலோட்டமான பார்வையில் அவர் நிறைய தவறுகள் செய்தாலும், தன்னுடைய உள்ளத்தில் ஆண்டவருக்கு பிரமாணிக்கமாவும் நம்பிக்கைக்கு உரியவராகவும் இருக்கிறார்.ஈசாயின் எட்டாவது மகனாக, வயல் வெளியில் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்த தாவீது அழைத்துவரப்பட்டபோது, தாவீது ‘சிவந்த மேனியும் ஒளிரும் கண்களும் கொண்டிருந்தான்’ என்று சொல்கிறது விவிலியம். பல பெண்களோடு உறவு வைத்து பாவ வாழ்க்கை வாழ்ந்தாலும் கடவுள் முன்னிலையில் ஒரு குழந்தையாய் தெரிந்தான். கடவுளின் உடன்படிக்கை பேழை பவனியாய வந்தபோது தன்னையே மறந்து கடவுளை போற்றி துதித்தான். அவன் மனம் எளிமையாய் குழந்தையை போல் ஆடி திரிந்தது. தாவீதின் பிரமாணிக்கமான உள்ளம் அவருடைய ஒளிரும் கண்களில் தெரிந்தது.
ஆக, மனிதர் பார்ப்பதுபோல பார்த்த சாமுவேலின் பார்வையற்ற நிலையைக் குணமாக்குகின்ற ஆண்டவராகிய கடவுள், தான் பார்ப்பது போல சாமுவேலை மாற்றுகின்றார்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். யோவா 9:1-41), பிறவியிலேயே பார்வையற்ற நபர் பார்வை பெறும் நிகழ்வை வாசிக்கின்றோம். தன்னிடம் வருகின்ற பார்வையற்ற நபரின் கண்களில் தன்னுடைய உமிழ்நீரால் உருவாக்கிய சேறு பூசி, சிலோவாம் குளத்தில் கழுவுமாறு அவரை அனுப்பிவிடுகின்றார் இயேசு. இயேசுவின் சமகாலத்தில் உமிழ்நீரால் குணமாக்குவது வழக்கமாக இருந்தது. ஆக, வழக்கத்திற்கு உரிய செயலையே இயேசு செய்திருந்தாலும், தன்னைக் குணமாக்கியவர் இயேசு என்று அறிக்கையிடுகின்றார் பார்வையற்ற அந்த நபர்.
உடல் அளவில் பெறும் பார்வை என்ற நிலையில் நிகழ்வு தொடங்கினாலும், நம்பிக்கையின் வழியாக இயேசுவை மெசியா என ஏற்றுக்கொள்ளும் பார்வை என்று நிகழ்வு மாறுகிறது. இறுதியில், பார்வையற்ற நபர் உடலளவிலும் உள்ளத்தளவிலும் பார்வை பெற்றவராக இருக்கின்றார். நற்செய்தி வாசகம் உடல் அளவில் பார்வையற்ற நபர் இயேசுவின் உடனிருப்பால் பார்வை பெற்றதையும், மேலும் அவர் இயேசுவை நம்பியதால் உள்ளத்தளவில் பார்வை பெற்றதையும், பரிசேயர்கள் இயேசுவை நம்பாததால் இறுதிவரை பார்வை பெறாமலேயே இருப்பதையும் நமக்குக் காட்டுகிறது.
இன்றைய இறைவார்த்தை வழிபாடு நமக்கு விடுக்கும் சவால் என்ன?
நம் பார்வையைச் சரி செய்வோம்.
இயேசு ‘நம்பிக்கை’ என்னும் இறைகண்ணாடி போட்டுக்கொள்ள அழைக்கிறார்!
- உங்களுடைய பார்வையில் அமெரிக்க ராணுவம் ஈசாயின் முதல் மகன் எலியாபைப் போல் வலிமை வாய்ந்த தோள்களை கொண்டிருக்கலாம்.
- இஸ்ரேல் கடவுளால் தேர்ந்து கொள்ளப்பட்ட இனமாக இருக்கலாம்! அவர்களின் கடவுள், தங்கள் சட்டைப் பைக்குள் இருப்பதாக கற்பனை செய்து கொள்கிறார்கள்!
- ஈரான் தங்களுடைய கடவுள் பெயரில் போர் தொடுக்கலாம். பீரங்கிகள் வீசலாம்.
ஆனால் கடவுளின் பார்வையில், இந்தப் போரில் குழந்தைகளும், பெண்களும் வலிமை மிக்கவர்கள்.
கடந்த நாட்களில் ஈரானின் ஒரு பள்ளியில் 200க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்து போனவாம்.
கடவுளின் பார்வையில் அவர்கள் அனைவரும் வலிமை மிக்க ஆன்மாக்கள்!
நம் பார்வையைச் சரி செய்வோம்!
அமைதியைப் போதிப்போம்!

No comments:
Post a Comment