Wednesday, October 1, 2025

LAL SINGH CHADHA (2022)

ஒரு க்ளாசிக் படைப்பின் மண்ணுக்கேற்ற மாற்றம் 

உள்ளம் சொல்வதை உள்ளபடிச் செய்யும் உண்மையான உன்னதன் ஒருவனது வாழ்க்கையில் வெவ்வேறு காலக்கட்டங்களில் நடக்கும் சம்பவங்களின் தொகுப்புதான் 'லால் சிங் சத்தா'.

மெல்லிய இசையின் உந்துதலுடன், தள்ளாடிக்கொண்டே பலரின் புறக்கணிப்புகளையும் தாண்டி, காற்றில் மிதந்தபடியே லால் சிங் சத்தா (ஆமீர்கான்) காலில் வந்து விழுகிறது அந்த வெண் சிறகு. அந்த வெண் சிறகைப் போலத்தான் அவனது வாழ்க்கையும். ஏதோ ஓர் அறிமுகமில்லா புள்ளியில் தொடங்கி, பல புறக்கணிப்புகளைக் கடந்து இலக்கற்ற பாதைகளில் பயணித்து இறுதியில் ஓர் இடத்திற்கு வந்தடைகிறது.


வெறும் நான்கு பேரால் ஆக்கிரமிக்கப்பட்டதுதான் லாலின் உலகம். அன்பும், கருணையும், பாசமும், ஏக்கமும், ஏமாற்றமும், வலியும் நிரம்பிக் கிடக்கும் அந்த உலகத்திற்குள் நம்மையும் கைப்பிடித்து அழைத்துச் சென்று தன்னுடைய வாழ்வின் வெவ்வேறு காலக்கட்டங்களில் நடக்கும் சம்பவங்களை அழகான கதையாகத் தொகுத்து சொல்லும் படம் தான் 'லால் சிங் சத்தா'. ஹாலிவுட் க்ளாசிக் என புகழப்படும் 'ஃபாரஸ்ட் கம்ப்' படத்தின் அதிகாரபூர்வ இந்தியத் தழுவல்.

ஆரம்பத்தில் 'ஃபார்ஸ்ட் கம்ப்' படம் மறு ஆக்கம் செய்யப்படுகிறது என்ற அறிவிப்பு அப்படத்தின் தீவிர ரசிகர்களுக்குச் சற்று ஏமாற்றத்தை அளித்திருக்கலாம். காரணம், ரீமேக்குகள் பெரும்பாலும் கைகூடாத திரைமொழியால் அச்சுறுத்தக் கூடியவை. ஆனால், இந்தப் படம் ரீமேக் என கூறப்பட்டாலும், தேவையான இடங்களில் நிலப்பரப்புக்கு தகுந்தாற்போல சில காட்சிகளும், திரைக்கதையும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அந்த மாற்றங்கள் படத்தை பாதிக்காமலிருந்தது சிறப்பு.

எல்லாவற்றையும் தாண்டி, ஹாலிவுட்டிலிருந்து மிதந்து வந்த அந்த வெண்சிறகு ஆமீர்கானிடம் வந்து சேர்ந்திருக்கிறது. படத்தின் உயிரே அதன் நாயக கதாபாத்திரம்தான். அதனை தனது அப்பாவித்தனமான முகபாவனை, குழந்தைத்தனமான உடல்மொழி, வெள்ளந்திச் சிரிப்பு என 'லால் சிங் சத்தா' கதாபாத்திரத்தை மெனக்கெடலுடன் மெருகேற்றியிருக்கிறார் ஆமீர்கான். குறிப்பாக அந்தந்த காலக்கட்டங்களுக்கு தகுந்தாற்போல உடல் எடையை குறைத்தும், கூட்டியும் படத்திற்காக அவர் செலுத்தியிருக்கும் உழைப்பு பாராட்ட வைக்கிறது.ஆனால், 'பிகே' படத்தின் உடல்மொழி அவ்வப்போது எட்டிப்பார்ப்பை தவிர்க்க முடியவில்லை. பிகேவும் ஃபாரஸ்ட் கம்ப் போன்றவன் தானே.

கரீனா கபூர், மோனா சிங் இருவரின் நடிப்பும் காட்சிகளுக்கான நேர்த்தியைக் கூட்டுகின்றன. நாக சைதன்யா சிறிது நேரமே வந்தாலும், நடிப்புக்காக கூடுதல் உழைப்பைக் கொடுத்துச் சென்றிருக்கிறார். ஆனால், தென்னிந்திய கதாபாத்திரமான நாக சைதன்யாவுக்கான லட்சியத்தை நிர்ணயிக்கும்போது கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். அது தொடக்கத்தில் நகைச்சுவையுடன் அணுகப்படுகிறது. ஷாருக்கானின் சிறப்புத் தோற்றம் அப்லாஸ் அள்ளுகிறது. லெஃப்டினட் ஜெனரலாக நடித்திருக்கும் மானவ் விஜ் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்துகிறார்.

அதுல் குல்கர்னி திரைக்கதை எழுத, அத்வைத் சந்தன் படத்தை இயக்கியுள்ளார். 'ஃபாரஸ்ட் கம்ப்' படத்தைப் பார்த்தவர்களுக்கு ட்ரெயினில் கதை சொல்லத் தொடங்கும் காட்சி சற்று ஏமாற்றம். அது 'துள்ளாத மனமும் துள்ளும்' படத்தில் விஜய் கதை சொல்வதைப் போன்ற உணர்வை தட்டி எழுப்பிவிடுகிறது. அதைக் கடந்து சென்றால், சின்னச் சின்ன மாற்றங்களால் சில சர்பரைஸ்கள் உண்டு.

இங்கே சாக்லெட்டுக்குப் பதிலாக பானிபூரி முன்வைக்கப்படுகிறது. அதையொட்டி வரும், 'எங்க அம்மா சொல்லுவாங்க பானிபூரி சாப்டா வயிறு நிறையும் மனசு நிறையாது' வசனம், வாழ்க்கையை மையப்படுத்தி ஃபாரஸ்ட் கம்ப் படத்தில் எழுதப்பட்ட (Life is like a box of chocolates, you never know what you're going to get.) அழுத்தமான வசனத்தை பழிவாங்கி விடுகிறது.

தவிர, 'ஆப்ரேஷன் புளு ஸ்டார்', 'எமர்ஜென்சி', 'கார்கில் போர்', 'ரத யாத்திரை' போன்ற சென்சிடிவான வரலாற்றுச் சம்பவங்களை கவனமாக கையாண்டிருக்கின்றனர். குறிப்பாக மத மோதல்களையும், வன்முறைகளையும், உயிரைக் கொல்லும் வைரஸுடன் ஒப்பிட்டு எழுதப்பட்ட வசனம் கவனம் பெறுகிறது. அதேசமயம், முஸ்லிம் கதாபாத்திரத்தை காட்சிப்படுத்தியிருக்கும் விதம் சற்றே தடுமாற்றம். 'கடவுள் ஒண்ணு சொன்னா அத சொல்றவன் வேற ஒண்ணு சொல்றான்' என்ற வசனம் அழுத்தமாக கடந்து செல்கிறது.

ஆமீர்கான் - கரீனா இடையேயான கெமிஸ்ட்ரி ஒத்துப்போவதால் காதல் காட்சிகள் உயிர் பெறுகின்றன. கடைசி அரைமணி நேரத்தில் சேர்க்கப்பட்ட பாடல், பொறுமையாக நகரும் காட்சிகளில் மட்டும் ட்ரிம் டூலை பயன்படுத்தியிருக்கலாம்.

ஒளிப்பதிவு, விஎஃப்எக்ஸ் என தொழில்நுட்ப நேர்த்தி படத்தைப் பார்க்கும் பார்வையாளர்களான சிறந்த காட்சி அனுபவத்திற்கு உதவியுள்ளது. பிரித்தமின் பிண்ணனி இசை எமோஷனல் காட்சிகளில் காதுகளுக்குள் கரைகிறது.

ஆயிரம் சொன்னாலும் எனக்கு என்னவோ ஆங்கிலத்தின் Forrest Gump இன் Tom Hanks, Robin Wright கதாபாத்திரங்கள் கண்ணுக்குள்ளே இருக்கின்றார்கள். இந்தி படத்திற்கு நேர்மறையான விமர்சனங்கள் வந்த போதிலும், திரையரங்குகளில் பெரிய அளவில் கூட்டம் கூடவில்லை.  படத்தின் நாயகன் ஆமீர்கான் படத்தில் நடித்தற்கான ஊதியத்தை வாங்கவில்லை. இந்தியில் ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது, ஒரு க்ளாஸிக் சினிமாவை பெரிய அளவில் சிதைத்து துன்புறுத்தாமல், மண்ணுக்கேற்றபடி மாற்றியமைத்ததில் சிற் சில குறைகள் தென்பட்டாலும், 'லால் சிங் சத்தா' உஙங்கள் மனதை நிச்சயம் டிஸ்டர்ப் செய்யும். 

COLD WAR (2018)

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு சோவியத் யூனியனின் கட்டுப்பாட்டில் இயங்கும் கம்யூனிச நாடாக மாறிப் போயிருந்தது போலந்து. 

மேற்கு நாடுகள், குறிப்பாக பிரான்ஸ், இங்கிலாந்து, அமெரிக்கா அனைத்தும் “சுதந்திர ஜனநாயக நாடுகள்” எனக் கருதப்பட்டாலும், கம்யூனிச ஆட்சிகள் அவற்றை எதிரி நாடுகளாக பார்த்தன. போலந்தில் நடப்பதும் கம்யூனிச ஆட்சி என்பதால் தாமாகவே அவை போலந்துக்கும் எதிரி நாடுகள் ஆகிவிட்டன. இந்த உலக நாடுகளில் அரசியல் சூழலுக்கு இடையில் ததும்பிப் பெருகிய ஒரு காதலின் கதைதான் Cold War (2018 film) 


போர்முடிந்த பிறகு நாயகனும் அவனது மேலாளரும் சேர்ந்து போலந்து நாட்டின் நாட்டுப்புற இசையை வளர்த்தெடுக்கும் வேலையை அரசு உதவியுடன் செய்கிறார்கள். கிராமங்களில் இருக்கும் வெள்ளந்தி மனிதர்களின் இசையைக் கண்டுபிடித்து ஒரு இசைக்குழு உண்டாக்குவதுதான் நோக்கம். அப்படி தங்கள் இசைத் திறமையை வெளிக்காட்ட வந்திருப்பவர்களில் ஒருத்திதான் நாயகி. அவளைப் பார்த்த கணமே நாயகனுக்குப் பிடித்து விடுகிறது. கோடி முகங்களில் ஒரு முகம் மட்டும் உயிரின் வேரில் பூவை மலர்த்துமே அது போல முதல் பார்வை முதல் ஈர்ப்பு என இருவருக்கும் இடையில் காதல் தளும்பத் தொடங்குகிறது.

இரண்டு பேரின் முகம் மட்டும் நெருக்கமாகக் காட்சிப்படுத்தப் பட்டிருக்கும் புணர்ச்சிக் காட்சியில் ஒருவர் கண்களை ஒருவர் பார்த்துக்கொண்டு முயங்கும்  தீவிரமே அவர்களின் காதல் எத்தகையது என்று சொல்லிவிடும். 

இசைக்குழுவினரை கம்யூனிச சித்தாந்தம் பற்றியும் தலைவர்கள் பற்றியும் பாடல் பாடச் சொல்லி அரசாங்கம் அறிவுறுத்தும் போது நாயகன் எதிர்க்கிறான், மேலாளன் தனது தொழில் வளர்ச்சிக்காக ஒப்புக்கொள்கிறான். நாயகிக்கோ எப்படியாவது நாயகனோடு இந்த வாழ்நாள் முழுக்க வாழ்ந்துவிட வேண்டும். இசைக்குழுவை விட்டு நீங்கும் முடிவை நாயகன் எடுக்கிறான். 

சொன்னாற்போல அரசாங்கத்தின் கட்டளைக்கு கீழ்படிந்து இயங்கியதால் பெருவாரியான அனுகூலங்களைப் பெற்று இசைக்குழு வளர்ச்சியடைந்து பல்வேறுநாடுகளுக்குப் பயணம் செய்ய வாய்க்கிறது. அப்படியொரு வாய்ப்பில் பெர்லினில் ஒரு இசை நிகழ்ச்சி நடக்கவிருக்கிறது. இசை நிகழ்ச்சியை முடித்து விட்டு நாயகனுடன் இந்த நாட்டை விட்டே ஓடிவரச் சம்மதிக்கிறாள். எங்கு ஓடிப் போகப் போகிறார்கள் என்றால் பிரான்ஸ்க்கு. போலந்து நாட்டின் எதிரி நாட்டுக்கு.

ஆனால் குறித்த நேரத்தில் குறித்த இடத்திற்கு அவள் வரவில்லை, நாயகன் மனமுடைந்து அவன் மட்டுமே பிரான்ஸ்க்கு சென்றுவிடுகிறான். 

இருவரும் இருவேறு திசையில் வாழ நேர்கிறது. காலங்கள் ஓடுகின்றன, அவனுக்குச் சில காதலிகள் வாழ்வில் வருகிறார்கள். அவளுக்குச் சில காதலன்கள் வாழ்வில் வருகிறார்கள். ஆனாலும் அணையாத சுடராய் இந்தக் காதல் மட்டும் தப்தப் என திரிவெடிக்க உள்ளுக்குள் எரிந்தபடியே இருக்கிறது. அவள் சிறந்த பாடகியாக மாறி இருக்கிறாள், அவன் ஓர் இசையமைப்பாளனாக மாறி இருக்கிறான்

சிலகாலம் கழிந்து அவளைத் தேடிச் சென்று சந்தித்து காரணம் கேட்பான், நீ ஏன் என்று வராமல் போனாய்?

"என்னால் உன்னோடு வரமுடியாமல் போனதுக்கு மன்னித்துக்கொள், ஒருவேளை அன்று நாம் சேர்ந்து ஓடிப் போயிருந்தால் இருவருமே தோற்று இருப்போம். வாழ்விலும் சரி. கனவிலும் சரி"

என் இடம் வந்துவிட்டது இனி என்னைப் பின்தொடராதே என்று சொல்லிவிட்டுச் சிறுது தூரம் சென்று அடக்கமாட்டாமல் திரும்ப ஓடிவந்து முத்தம் தருவாள். அதுதான் அவர்கள் காதல், அவர்களால் விலகி இருக்கமுடியாது, நண்பர்கள் போலப் பழகிக்கொள்ள முடியாது, நிறைந்து இருப்பதெல்லாம் காதலின் தீவிரமும் நீ எனது நான் உனது எனும் வேட்கையும்தான். 

உலகநாடுகளின் அரசியல் சூழலால் அவர்கள் எப்போதாவது ஏதாவதொரு நாட்டில்தான் சந்தித்துக்கொள்ள முடியும். ஒருவருடத்திற்கு ஒரு முறை,  இரண்டு வருடத்திற்கு ஒரு முறை என்று தவணைமுறையில்தான் இந்தக் காதலை ஸ்பரிசிக்கமுடியும், அது தாளமாட்டாத ஆனந்தத்தைத் தருவது போலவே தாளமாட்டாத துயரையும் தருகிறது. பிரிவன் வாதையை எதிர்கொள்ள முடியாமல். எப்படியாவது இந்தக் காதலை நிர்மூலமாக்கினால் தேவலாம் என்று தோன்றும். நீ அறிமுகம் செய்துவைத்த பணக்கார திரைப்படத் தயாரிப்பாளரோடு நான் ஓர் இரவில் ஆறு முறை புணர்ந்தேன். அவன் உன்னைப் போல அல்ல, எல்லாவற்றிலும் சிறந்தவன் என்று நாயகனைச் சீண்டுவாள். போகட்டும் இந்தக் காதல் இப்படியாவது அழியட்டும். 

வெட்ட வெட்டப் பல்லாயிரம் கிளைகளாகப் பெருகும் காதல் இது. 

நாயகி போலந்துக்கு சென்றுவிட்டாள் என்று தெரிந்ததும், நாயகனும் போலந்துக்கு செல்வான். ஆனால் போலந்தைப் பொறுத்தவரை இவன் எதிரிநாட்டுக்கு தப்பிச் சென்றவன், தேசதுரோகி. கைது செய்யப்படுகிறான்.  பதினைந்து வருட சிறை தண்டனை. நாயகிக்குத் தெரிந்து சிறைக்குத் தேடிவருவாள். 

நீ ஏன் இங்க வந்த? போ போயி யாராவது உனக்கு உன் வாழ்க்கைக்கு ஏற்ற நல்ல ஆண்மகனாக தேர்ந்தெடுத்து சந்தோசமா வாழு. என்பான் 

அவனை அழுத்தமாக முத்தமிட்டுச் சொல்வாள். "அப்படி ஒருத்தன் இன்னும் பிறக்கல. நான் உன்னை வெளியில் கொண்டுவருவேன் எப்படியாவது."

இதற்குப் பிறகான இறுதி பத்து நிமிடக் கதையைச் சொல்லாமல் விடுகிறேன். அதைக் காணுங்கள். மனதைக் கரைத்து நினைவில் அகலாது நின்றுவிடக் கூடிய ஒரு காதல். 

உக்கிரமான ஒரு காதலால் இந்தப் பூமியில் நிலைத்து வாழமுடியாது. ஆத்மார்த்தமாக அது அழிந்து போகவேண்டும். 

படம் பாரத்து முடித்ததில் இருந்து மனம் முழுக்க ஒரு வெறுமையும், வெறுமை முழுக்க காதலும் நிரம்பியிருக்கிறது.

Popular Posts